29 நவ., 2024

மனித வாழ்வை செம்மைப்படுத்த சித்தர்கள் அருளிய சூட்சும் மணிபூரகம் – தன்மைகள், தொடர்புடைய உறுப்புகள், சீராக இயங்குவதற்கான அறிகுறிகள், சீராக இயங்காததற்கான உடல், மன அறிகுறிகள் முழு விளக்கங்கள்:

 மணிபூரகம் தலமும் சக்கரமும்:

வெற்றிகரமான வாழ்க்கைக்கு மணிப்பூரக சக்கரம் சீராக இயங்க வேண்டியது மிக மிக அவசியமாகும். பிரபஞ்ச ஆற்றலை ஈர்க்கும் திறன் கொண்ட மணிப்பூரக சக்கரத்தின் சீரான இயக்கத்தினால் நம் ஆற்றலை நாம் உணர்வதும், வாழ்க்கையின் சவால்களை நம்பிக்கையோடு எதிர்கொண்டு வெற்றி கொள்வதும் சாத்தியப்படுகிறது. நம் வாழ்வில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை இச்சக்கரத்திற்கு உண்டு.

மாலினுட வீடதுதான் அறுவிரலின் மேலே
        மாசற்ற பிறைபோலே கோட்டையாகும்
     மாலினுட வளையம்போல் பத்திதழ்தான்
        தாலினுட ஜனகமா முனியின் தாயார்
     ஆலினுட மங்நடுவில் பூதம் அப்பு
        மகத்தான அட்சரத்தின் பயனைக்கேளு
     தயங்காத நரபர்ப்பர் தன்மை யாகும்
        அதன் பீசம் வங்கென்று அறியலாமே
                                                                                போகர் 7000



அறிந்த மணிபூரகத்தின் வீடுமாகும்
    அப்பனே துரியமது யிருப்பிடந்தான்
பிறிந்தேயசுர் வேதமுமாம் படிகவர்ணம்
    பிரியாம லட்சுமிதான் வாமபாகம்
கறித்தஅறு சுவையுமங்கே காணலாகும்
    கதித்தநீர் மச்சையோடு உதிரமூளை
வெறித்ததோர் விந்துவோடு அஞ்சுமாகும்
    மிக்கசங்கு சக்கரமும் கருடவாகனமே
                                                                              போகர் 7000

மணிப்பூரகத்தோடு தொடர்புடைய உறுப்புகள்:

ஆளுமை, அறிவுசார்ந்த திறன்கள், கற்றல், புரிந்து கொள்ளுதல் ஆகியவற்றின் மையம் மணிப்பூரக சக்கரமாகும். சுதந்திரமாக இருத்தல், சுய அடையாளம், ஊக்கம், மன உறுதி, தன்னம்பிக்கை, தன்மதிப்பு ஆகியவற்றை நிர்வகிப்பதும் மணிப்பூரகம் ஆகும்.

நம் அடிப்படை உணர்வுகளை, நம் ஆழ்மன எண்ணங்களை அறிவதற்கான வழியாகவே புறச்சூழல் ஏற்படுத்தும் தாக்கத்தை கருதும் பண்பு மணிப்பூரக சக்கரத்தின் சீரான செயல்பாட்டால் ஏற்படுகிறது. இதன் காரணமாக நம்மை உணர்வதும், நம் எண்ணங்களுக்கு பொறுப்பேற்கும் திறந்த மனதும், அதனால் நம் சிந்தனையை மேம்படுத்திக் கொள்ளும் பண்பும் வளர்கின்றன.

நம்மை முழுமையாக உணர்வதும், நம் மேல் நாம் உள்ளார்ந்த அன்பு கொள்ளுதலும் மணிப்பூரகச் சக்கரத்தின் செம்மையான செயல்பாட்டால் சாத்தியமாகிறது.

மணிப்பூரகம் வயிறு, மண்ணீரல், கணையம், உதரவிதானம், சீரண மண்டலம் மற்றும் நிணநீர் மண்டலம் ஆகியவற்றை நிர்வகிக்கிறது.

மணிப்பூரக சக்கரம் சீராக இயங்குவதற்கான அறிகுறிகள்:

கீழ்க்கண்ட அறிகுறிகள் மூலம் மணிப்பூரக சக்கரம் சீராக இயங்குவதைத் தெரிந்து கொள்ளலாம்:

  • மன உறுதியோடிருத்தல்
  • தன்னம்பிக்கை கொண்டிருத்தல்
  • தன்மதிப்புடன் இருத்தல்
  • நேர்மறை எண்ணங்கள் கொண்டிருத்தல்
  • உணர்வுகளைச் சரியாகக் கையாளுதல்
  • தன் எல்லைகளை வரையறுத்தல்
  • சுற்றியுள்ளவர்களிடம் நல்ல உறவு பாராட்டுதல்
  • தைரியம் மற்றும் மன உறுதியுடன் தெளிவான முடிவுகளை எடுத்தல்
  • அறிவுசார்ந்த திறன்கள் கொண்டிருத்தல்
  • மன உறுதியுடன் தேர்ந்தெடுத்த பாதையில் முன்னேறுதல்

மணிப்பூரக சக்கரம் சீராக இயங்கும்போது தன் ஆற்றலை உணரும் அதே நேரத்தில் பிறர் மேல் அதிகாரம் செலுத்தாமல் இருக்கும் பண்பும் வளர்கிறது. அறிவார்ந்த திறன்கள் வளர்வதன் நீட்சியாக ஞானம் பிறக்கிறது.

மணிப்பூரகம் சீராக இயங்காததற்கான உடல், மன அறிகுறிகள்:

கீழே குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகள் மூலம் மணிப்பூரகத்தின் இயக்கம் அளவுக்கு அதிகமாக அல்லது குறைவாக இருப்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

உடல் அறிகுறிகள்
  • சீரண கோளாறுகள்
  • மூச்சு கோளாறுகள்
  • அல்சர்
  • வயிற்று வலி
  • கீல்வாதம்
  • நீரிழிவு
  • மண்ணீரல் சார்ந்த கோளாறுகள்
  • கணையம் சார்ந்த பிரச்சினைகள்
  • தசைநார் வலி 
மன அறிகுறிகள்
  • தன்னம்பிக்கைக் குறைவாக இருத்தல்
  • தன்மதிப்பு இல்லாமை
  • மூர்க்கத்தனம்
  • பிறரின் மேல் ஆதிக்கம் செலுத்துதல், பிறரின் மேல் தன் விருப்பங்களைக் கட்டாயப்படுத்தி ஏற்றுதல்
  • அங்கீகாரம் தேடுவதில் குறியாக இருத்தல்
  • பதட்டம்
  • மன அழுத்தம்
  • தன் வாழ்வின் நோக்கத்தைப் பற்றிய தெளிவான பார்வை இல்லாதிருத்தல்

    உந்திக் கமலத்து உதித்து எழும் சோதியை

    அந்திக்கும் மந்திரம் ஆரும் அறிகிலர்
    அந்திக்கும் மந்திரம் ஆரும் அறிந்தபின்

    தந்தைக்கு முன்னே மகன் பிறந்தானே

என்று சித்தர்களுள் ஒருவரானதிருமூலர் 'உந்திக்கமலம்' என்று மணிபூரகத்தைக் கூறுகிறார்.

இந்தப்பாடலில் 'சந்திரயோகம்' குறிப்பால் உணர்த்தப் பெறுகிறது. முறையாக, குரு தீட்சை பெற்று, யோகம் பயிலும் போது, யோகத்தின் குறிக்கோளாகிய சிவனாரின் திருக்காட்சி தோன்றும் முன், சூரிய சந்திரர்களின் ஒளியைப் பெற்று, ஆன்மா ஒளிரும் திருக்காட்சியைக் கண்முன் காணலாம் என்பது "தந்தைக்கு முன்னே மகன் பிறந்தான்" என்பதன் பொருள்

மணிப்பூரகச் சக்கரத்தின் தன்மைகள்:

அமைவிடம்          : சுவாதிஷ்டானத்திலிருந்து ஆறு விரற்கிடை உயரத்தில் உள்ளது.


சக்கர அமைப்பு        : நடுவில் சதுரம் அதைச் சுற்றிச் சக்கரம் என்ற வட்டம் சக்கரத்துள் பிறை வடிவில் கோட்டை வட்டத்தைச் சுற்றி 10 தாமரை இதழ்கள்.

நிறம்                 : ஸ்படிகம் அல்லது பளிங்கு வெண்மை.

இதழ்கள்             : பத்து தாமரை இதழ்கள் உள்ளன.

இதன் உயிர் சக்தி      : பத்து கலைகள் ஆகும்.

பீஜ மந்திரம்           : ஸ்ரீயும்.

சிவ பீஜ மந்திரம்       : நமசிவய மந்திரத்தில் . இதனை மங், மம் என உச்சரிக்க வேண்டும்.

சுவாசம்              : ஒரு நாளில் 3000 சுவாசம் நடைபெறும்.

இத்தல பூதம்          : நீர் என்ற அப்பு.

பஞ்சவித்து           : மகாரம்.

வேதம்               : யஜூர் வேதம்.

அவத்தை             : துரியம் என்ற உணர்வுநிலை ஆகும்.

அதிர்வலை           : தீடா அதிர்வலை உருவாகும்.

அதி தேவதைகள்      : திருமால், லக்ஷ்மி, (கருடனும் சக்கரத்தாழ்வாரும் உடனிருப்பர்).

தலத்தின் தொழில்     : காத்தல்.

உடலில் செயல்பாடு   : சதை, இரத்தம், மச்சை, மூளை, விந்து ஆகிய ஐந்து இடங்கள்.

விஷ்ணு மந்திரங்கள்   : அரி நமோ நாராயணா, ஓம் நமோ நாராயணாயா.

லக்ஷ்மி மந்திரம்       : ஸ்ரீயும்.

எந்த மந்திரம் சொன்னாலும் நன்று. ஆயினும் வாசியோகப் பிராணாயாமத்தில் ஸ்ரீயும் அல்லது மங் அல்லது மம் ஆகிய அட்சரங்களை சொல்லி வாசி உருவாக்கல் சிறப்பு. இவ்விதம் தினமும் வாசி யோகம் செய்யுங்கள்.

கார்க்கவே உருச்செபித்துப் புருவமீதில்
    கண்ணுமனக் கண்ணதனால் நன்றாய்ப் பார்த்தால்
மார்க்கமுள்ள லெட்சுமியும் விஷ்ணுதேவர்
    மகத்தான பூரணச்சந்திரன் போல் மைந்தா
ஏர்க்கையுடன் இருதயத்தில் தோணும்பாரு
    இன்பமுள்ள தரிசனத்தைக் கண்டாயானால்
தீர்க்கமுள்ள சிவயோக வாழ்வு பெற்றுச்
    செல்வபதியாய் இருப்பாய் தினமும் நோக்கே
                        அகத்தியர், சௌமிய சாகரம், பாடல்

 தினமும் வாசி யோகம் செய். அங்கு மனக்கண்ணால் மணிபூரகத்தைப் பார்த்தால், அங்கு திருமாலும் லட்சுமியும் தோன்றி அருள் செய்வார்கள். வெள்ளை நிறப் பூரணச் சந்திரனைப் போன்ற ஒளி தெரியும். அனைத்துச் செல்வங்களும் பெற்று, செல்வபதியாய் இன்பமான வாழ்க்கை பெறுவார்கள். உறுதியான சிவயோக வாழ்வும் கிடைக்கும் அதாவது உடலும் உயிரும் காக்கப்படும். நீண்ட ஆயுள் பெறுவார்கள். உலக வளம், செல்வத்திற்கான வேண்டுதல், இதயம், சிறுநீரகம், உதிரநோய் போன்றவை தீர மணிபூரகத்தில் மனம் வைத்துதியானம் செய்ய வேண்டும்.


                செந்தில்குமார் 
                செல்9655472931
                நச்சாந்துபட்டி,
                புதுக்கோட்டை மாவட்டம்.