20 நவ., 2024

மனித வாழ்வை செம்மைப்படுத்த சித்தர்கள் அருளிய சூட்சு ரகசியம் – சுவாதிஷ்டானம் இருப்பிடம், சக்கர அமைப்பு, இதழ்கள், சுவாசம், பீஜ மந்திரம் மற்றும் அதிதேவதை முழு விளக்கங்கள்:

 சுவாதிஷ்டானம் - தலமும் சக்கரமும்:


சுவாதிஷ்டானம் பற்றி அகத்தியர் மற்றும் திருமூலர் விளக்கம்:

      அனைத்துச் சித்தர்களும் இது பற்றிப் பாடி உள்ளார்கள். அவற்றுள் போகர் சிறப்பாகச் சொல்லி உள்ளதையும் அகத்தியர் மற்றும் திருமூலர் விளக்கியுள்ளவற்றையும் காண்போம்.


துதிசெய்து மூலத்தைத் தாண்டி அப்பால்
    துடியான நாலங் குலமே தாண்ட
பதிசெய்த பிரம்மனுட வீடுமாகும்
    பகர்ந்த சுவாதிஷ்டானம் என்றுபேரு
அதிசெய் நால்வட்டாக வலயஞ்சுத்தல்
    ஆறிதழ் தானட்சரத்தை அறியக்கேளு
பதிசெய்த சுயபிரமர் யாரவர்தான்
    பாங்கான நடுபீசம் லங்நங் ஆமே
                                            போகர் 7000

நகாரமென்ற எழுத்ததுவும் பிரமர்காகும்
         லாஎன்ற எழுத்ததுவும் பிரிதிவி பீஜம்
வகாரமென்ற துரியத் திருப்பிடந்தான்
    புகழுகின்ற இருக்கான வேதமாகும்
அகாரமென்ற அன்னமாம் வாகனந்தான்
    அதனுடைய நிறம்பொன் நிறமுமாகும்
மகாரமென்ற இவருடைய தொழிலின் கூறு
    மயிரெலும்பு இறைச்சிதோல் நரம்போடஞ்சே
                                            போகர் 7000

அஞ்சான பொன்னிறம் பிரம்மன் பக்கம்
    கடந்தால் வாணி நிற்பாள் அறிந்துகொள்ளு
                                            போகர் 7000

கேளடா நிலையறிந்து வாசிகொண்டு
    கீழ்மேலும் நன்றாக நின்றுபாரு
சூளடா நின்றுநிலை பார்க்கும் போது
    சோதியெனத் தோன்றுமடா பிரம்ம ரூபம்
ஆளடா பிரம்மநிலை ரூபம் கண்டால்
    அடங்காத வாசியது அடங்கும் வீட்டில்
காளடா வாசியது அடங்கி நின்றால்
    கண்ணடங்கா பூரணத்தைக் காணலாமே

அகத்தியர், சௌமிய சாகரம், பாடல்


சுவாதிஷ்டானம் என்றால், 'தன் சொந்த ஸ்தானம் (இடம்)' என்று பொருள். மனம் அடங்கி தன் சொந்த (சலனமற்ற) நிலைக்குத் திரும்புதல், குண்டலினி சக்தி, ஸ்வாதிஷ்டானத்தை அடையும் போது நிகழும். மனமானது, காமம், குரோதம் முதலிய உணர்ச்சிகளிலிருந்து விலகி, செயகளற்ற அமைதியான நிலையை அடையும் இடம் ஸ்வாதிஷ்டானம். சுவாதிஷ்டானச் சக்கரம் மலரும்போது, சுயகட்டுப்பாடு, நுண்ணுணர்வு, முதலியவை அதிகரிக்கும். உணர்ச்சிகளுக்கு ஆதாரம் இந்தச் சக்கரம்.

இந்தச் சக்கரத்துடன் சம்பந்தப்பட்ட உடல் உறுப்புகள் கர்ப்பப்பை, பிறப்புறுப்புகள், பெருங்குடல், என்டொக்ரான் சுரப்பி முதலியன.

 சுவாதிஷ்டானச் சக்கரத்திற்கு 'நிராகுலம்' என்றொரு பெயரும் உண்டு. ஆகுலம் என்றால் 'கவலை'. நிராகுலம் என்றால் கவலையின்றி இருத்தல். இந்தச் சக்கரத்தை குண்டலினி அடையும்போது, நோய்களிலிருந்தும் துன்பங்களிலிருந்தும்,கவலைகளிலிருந்தும் (நோய்களும் துன்பங்களும் இல்லாவிட்டால் கவலை ஏது?) ,விடுபடுதல் கிட்டும்.

சுவாதிஷ்டானம் சக்கரத்தின் தன்மைகள்:



இருப்பிடம்       : மூலாதாரத்தில் இருந்து நான்கு விரற்கிடை 
                  மேலே அமைந்துள்ளது.

சக்கர அமைப்பு   : நாற்கோணம். அதைச் சுற்றி வட்டம். அதைச் 
                  சுற்றிதாமரை இதழ்கள்.

நிறம்            : பொன்னிறம் என்ற மஞ்சள்.

இதழ்கள்         : ஆறுத் தாமரை இதழ்கள் உள்ளன.

இதன் உயிர்ச் சக்தி : ஆறுக் கலைகள் ஆகும்.

பீஜ மந்திரம்       : ஐயும்.

சிவ பீஜ மந்திரம்   : நமசிவய மந்திரத்தில் - நங் அல்லது நம் 

                   என உச்சரிக்க வேண்டும்.

சுவாசம்          : ஒரு நாளில் 3000 சுவாசம் நடைபெறும்.

இத்தலத்தின் பூதம்: இத்தலம் பிருதிவி என்ற மண்ணின் கூறு.

பஞ்ச வித்து      : உகாரம் என்ற பஞ்ச வித்து.

வேதம்           : ரிக் வேதம்.

அவத்தை        : துரியாதீதம் என்ற உணர்வுநிலை ஆகும்.

அதிர்வலை      : காமா அதிர்வலை உருவாகும்.

அதிதேவதைகள்  : பிரம்மா, சரஸ்வதி.

இச்சக்கரத்தில் பிரார்த்தனை அல்லது சங்கல்பம்:

இத்தலத்தின் அதிதேவதைகளான பிரம்மா, சரஸ்வதி ஆகியோரிடம் படைத்தல் என்ற குழந்தை வரம் வேண்டல் சிறப்பு. அறிவாற்றல் பெறவும், பிற படைப்புகள், நூல்கள், திட்டங்கள் செய்வதற்கும் இந்தத் தலத்தில் வேண்டுதல் செய்ய வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக