ஜீவகாந்த சக்தி என்பது:
"ஜீவகாந்தம்" என்பது உயிர்ச் சக்தி இயங்குவதால் எழும்
அலையாகும். ஒவ்வொரு உயிர் சக்தித்துகளும் தன்னைத்தானே மிக விரைவாகச் சுற்றிக் கொண்டிருப்பதால்
அதிலிருந்து வீசக்கூடிய அலையானது விரிந்து கொண்டே இருக்கும். அவை தோன்றிக் கொண்டேயும்
இருக்கும். ஒரு உடலில் உள்ள உயிர்ச்சக்தித்துகளின் எண்ணிக்கைக்கு ஒப்ப ஜீவகாந்த அழுத்தம்
நிலைபெறும். போதிய ஜீவகாந்தம் உடலில் இருக்கும் வரையில் தான் சிற்றறைகளின் அடுக்குக்
குலையாமல், இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்று ஓட்டம் இம்மூன்றும் சிதறாது. ஒழுங்காக
ஓடி உயிருக்கும் உடலுக்கும் இடையே உறவை நிலைக்கச் செய்கிறது.
எனவே உடலைத்தாங்க ஜீவகாந்தம் போதிய அளவு தேவை. ஜீவகாந்தத்தைப் பெருக்க வேண்டுமெனில் அதற்குத் தக்க எண்ணிக்கையுள்ள உயிர்த்துகள்கள் தேவை உயிர்த்துகள்களோ விந்துநாத திரவத்தின் அளவையும், தன்மையையும் ஒத்திருக்கும். போதிய அளவு (ஆண்) விந்து அல்லது (பெண்) நாதம் இருந்தால் தான் உடலை நடத்த ஏற்ற ஜீவகாந்த சக்தியை உற்பத்தி செய்யும் அளவுக்கு உயிர்ச்சக்தித்துகள்கள் நிலைத்திருக்கும்.விந்து நாதத்தை ஆதாரமாகக் கொண்டு உற்பத்தியாகும் இந்த ஜீவகாந்தமானது, இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம். காற்றோட்டத்தால் பல மடங்காகப் பெருகி பரவி மூளையால் உணர்தல், இரசித்தல், நினைத்தல் என்ற விளைவுகளாகவும், உடலியக்கமாகவும் மற்றொரு பகுதி மன அலைகளாகவும் இயங்கிக் கொண்டிருக்கிறது.
காந்த நிலை உணர்ந்திடில், கடவுள் மனம் அதனிலே,
மற்றும் இன்பம் துன்பம் யாவும் மாயகாந்த விளைவுகள்.
வான் காந்தம் என்பது என்ன?
தற்சுழற்சியுடைய இறைத்துகளே காந்தம். பிரபஞ்சம் முழுவதும் இறைத்துகள்கள் நிரம்பி இயங்குகின்றன. எனவே இத்தகைய ஆற்றலை ஆங்கிலத்தில் 'மேக்நெட்' (Mag+net = magnet) என்று கூறுகிறார்கள். மேக் (mag) என்றால் 'மகா' அதாவது 'பெரிய' என்ற கருத்தாகும். நெட் என்றால் வலை. காந்தம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள எல்லா பொருட்களையும் ஒன்றிணைத்துப் பின்னிக்கொண்டும், சூழ்ந்தழுத்தி இயக்கிக் கொண்டும் இருக்கின்ற ஒரு 'பெரியவலை' என்பதாகும்.
ஜீவகாந்த சக்தியை எந்தெந்த வழிகளில் செலவாகிறது:
- கோபம்
- பொறாமை
- பயம்
- வஞ்சம்
- பொருள்
- பற்று
- கவலை
- விருப்பு
- வெறுப்பு
- பேராசை
- காமம் முதலிய எண்ண இயக்கங்கள் ஜீவகாந்த சக்தியைப் பெரும் அளவில் குறைத்துவிடுகின்றன.
அறிவைக்கொண்டு
ஐம்புலன்களை செயலாற்றும் போது, அந்த ஜீவகாந்த சக்தியே அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம்
என்பவைகளாகத் தன்மாற்றமடைந்து சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்றவாறு எழுச்சி பெற்று ஒர்
அளவில் ஜீவகாந்த சக்தி செலவாகின்றது. எனவே இந்த உயிர்ச்சக்தியை, ஜீவகாந்த சக்தியை தன்
நிலைமைக்கு வீழ்ச்சி ஏற்படாதவாறு பாதுகாக்கவும், அறிவின் ஆற்றலையும், உடல் வலிவையும்,
ஆக்கத் துறைக்கே பயன்படுமாறு பண்படுத்தல், பயன்படுத்தல், ஒருமை நிலையில் அறிவு நிற்கப்
பழகுதலும் வேண்டும்.
ஜீவகாந்த சக்தியை அதிகரிப்பது எப்படி?
தவம் ஒன்றே அதற்கு வழி. தவத்தால் அதிகரிக்கும் ஜீவகாந்த சக்தியைக் கொண்டு அறிவின் ஓர்மைப்பழக்கம், கற்பு, ஒழுக்கம், நல்லோர் நட்பு, நல்லோர் ஸ்பரிசம், அன்புடையோர் அளிக்கும் சுவையான மிதமான ஆகாரம், பேராதார நிலையை நோக்கி அறிவு நிற்கும் பழக்கம், மிதமான முறையான சுவாசாப்பியாசம், இவைகளால் ஜீவகாந்த சக்தி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவில் கூடிக்கொண்டே இருக்கும்.
கருதவம் என்பதன் விளக்கம்:
கருதவம் மிக அவசியம். கருவின் இயக்கத்தையே உள்ளுணர்வாகப் பெற்று அவ்வுணர்விலேயே லயித்து ஒன்றி ஒன்றி நின்று, அறிவின் இருவித இயக்க நிலைகளாகிய பேரறிவு (Conscious) சிற்றறிவு (Sub Conscious) என்பவற்றின் சலனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்தலும், மௌனமாக நிற்கப்பழகுவதும் கருதவம் ஆகும்.
கரு என்பது பிரபஞ்சத்தில் மிகச்சிறந்த உயர்ந்த பொருள். அதைத்தான் ஜீவாத்மா என்றும் ஜீவன் என்றும் சொல்லுகிறோம். இதை ஆரம்பமாகக் கொண்டே எந்த உடலும் தோன்றுகிறது. அறிவிற்கும் உடலுக்கும் அதுவே மூலமாகும். உடலுக்கும் அறிவுக்கும் மூலமாக உள்ள உயிரில் நினைவை நிறுத்தி அறிவு எழும் இடத்திலேயே அதை வசப்படுத்தும் முறைதான், கருதவம் அல்லது சுக்கிலத் தியானம் என்று வழங்கப்படுகிறது.
இந்த தவம், இழக்கும் உயிர்ச்சக்தியைக் கூட்டிக் கொள்ளவும், இனி வீணாக்காமல் காக்கவும், அறிவிலே தெளிவும், உறுதியும், நுட்பமும் பெற்று உலக வாழ்விலும் ஆன்மீகத்திலும் மனிதனுக்கு உயர்வை அளிக்க வல்லதாகும். மேலும் விழிப்பு நிலைபெற்று, தற்சோதனைப் பயிற்சி முறையால், வினைத்தூய்மையும், மனத்தூய்மையும் உண்டாகி அவற்றின் அடிப்படையில் ஒழுக்க உணர்வு, கடமை உணர்வு, மெய்ப்பொருள் உணர்வு என்ற மூன்றும் இயல்பாக அமையும்.
உடல் இயக்கத்தில் உள்ள நுட்பம்:
நமது உயிருக்கும் உடலுக்கும் ஒத்த உறவு, இனிமையான உறவு இருக்கும் வரையில் தான் உடல்நலம், மனநலம் பாதுகாக்கப் பெறும். இந்த உறவானது நீடித்திருப்பதற்கு ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்று ஓட்டம் இவை மூன்றும் சரியாக இருந்தால் தான் உயிருக்கும், உடலுக்கும் ஒரு தொடரியக்கம், நட்பு, உறவு சீராக இருக்கும். எந்தக் காரணத்தினாலோ ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்று ஓட்டம் இந்த மூன்றிலே ஒன்று தடுக்கப்பட்டாலும், திசைமாறினாலும், வெளியேறினாலும், அளவிலே குறைந்தாலும், ஓட்டத்திலே குழப்பம் அடைந்தாலும், அந்த ஓட்டத்தில் அணு அடுக்குச் சீர்குலைவு ஏற்படும். அது இரத்த ஓட்டத்திலோ, வெப்ப ஓட்டத்திலோ, காற்று ஓட்டத்திலோ எதனாலே வந்தாலும் சரி, மற்ற இரண்டும் கூட ஓட்டத்திலே தடையாகிவிடும். அந்தக் குழப்பத்தை நீக்குவதற்கு அங்கே இருக்கக் கூடிய மின்சக்தி போதாது. அதனாலே அதிகமான மின்சக்தி அங்கே சேர வேண்டியதாகின்றது.
அவ்வாறு அங்கே சேரும் போது ஏற்கனவே அங்கு தொளை (Puncture) ஆகி இருக்கிறது. அளவுக்கு மேலாகக் காந்த சக்தி மின் சக்தியாக மாறும் போது அந்த இடத்தில் நிச்சயமாக மின்குறுக்கு (short circuit, earthing) உண்டாகும். அதுதான் வலியாக வரும். இந்த மின் குறுக்கு சிறிது நேரம் இருந்தால் அது வலி என்றும், அது இடத்தாலே விரிந்தும் காலத்தாலே நீடித்தும் இருந்தால் அது நோய் அல்லது வியாதி என்றும் கூறப்படுகிறது. அதற்கும் மேலாக உடலில் உள்ள ஜீவகாந்த சக்தி எல்லாம் அதிகமாகச் செலவாகி, வருவதற்கும் போவதற்கும் மத்தியில் உள்ள இருப்பை ஜீவகாந்தம் வெகுவாகக் குறைக்குமானால் அதனை ஈடு செய்ய முடியாமல் போகும். ஈடு செய்யும் முயற்சியில் உயிராற்றல் தோல்வியடையும். உடலை நிர்வாகம் செய்வதற்குப் போதிய காந்த சக்தி, ஜீவ காந்த சக்தி, உற்பத்தி செய்ய முடியாமல் தோல்வியடையும். அந்தத் தோல்வியிலே தானே குறைவுபட்டு அது தன்னாலே ஏற்படக்கூடிய வெப்பத்தினாலே அதனுடைய மின்கலம் (battery) என்று சொல்லக்கூடிய விந்து நாளத்தைத் தகர்த்தெறிந்துவிட்டு அதைத் தாங்கி நிற்கக் கூடிய விந்துவையே அல்லது நாளத்தையே உடைத்துக் கொண்டு வெளியேறிய பின்னர் அதைத் தாங்கி நிற்கும் உயிர் உடலில் இருந்து பிரிந்து விடும். இதுவே மரணம். இதுதான் உடலியக்கத்தில் உள்ள ஒரு நுட்பம்.
எனவே
மனவளக்கலை பயிற்சிகளினால் உயிராற்றலின் செலவு குறைக்கப்படுகின்றது. விழிப்பு நிலை உயர்கின்றது.
ஆராய்ச்சித்திறன் பெருகுகிறது. ஒழுக்க உணர்வு இயல்பாகின்றது. வாழ்வில் துன்பங்கள் நீங்கி
அமைதியும் மகிழ்ச்சியும், நிறைவும் கிட்டுகிறது.
செந்தில்குமார்
செல்: 9655472931
நச்சாந்துபட்டி,
புதுக்கோட்டை மாவட்டம்.


