26 ஜூலை, 2025

ஜீவகாந்த சக்தி என்பது என்ன? அது உடலில் எவ்வாறு இயங்குகிறது? அந்த சக்தியை அதிகரிப்பது எப்படி? பற்றி வேதாத்திரி மகரிஷி கூற்று பார்போம்:

 ஜீவகாந்த சக்தி என்பது:



"ஜீவகாந்தம்" என்பது உயிர்ச் சக்தி இயங்குவதால் எழும் அலையாகும். ஒவ்வொரு உயிர் சக்தித்துகளும் தன்னைத்தானே மிக விரைவாகச் சுற்றிக் கொண்டிருப்பதால் அதிலிருந்து வீசக்கூடிய அலையானது விரிந்து கொண்டே இருக்கும். அவை தோன்றிக் கொண்டேயும் இருக்கும். ஒரு உடலில் உள்ள உயிர்ச்சக்தித்துகளின் எண்ணிக்கைக்கு ஒப்ப ஜீவகாந்த அழுத்தம் நிலைபெறும். போதிய ஜீவகாந்தம் உடலில் இருக்கும் வரையில் தான் சிற்றறைகளின் அடுக்குக் குலையாமல், இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்று ஓட்டம் இம்மூன்றும் சிதறாது. ஒழுங்காக ஓடி உயிருக்கும் உடலுக்கும் இடையே உறவை நிலைக்கச் செய்கிறது.

எனவே உடலைத்தாங்க ஜீவகாந்தம் போதிய அளவு தேவை. ஜீவகாந்தத்தைப் பெருக்க வேண்டுமெனில் அதற்குத் தக்க எண்ணிக்கையுள்ள உயிர்த்துகள்கள் தேவை உயிர்த்துகள்களோ விந்துநாத திரவத்தின் அளவையும், தன்மையையும் ஒத்திருக்கும். போதிய அளவு (ஆண்) விந்து அல்லது (பெண்) நாதம் இருந்தால் தான் உடலை நடத்த ஏற்ற ஜீவகாந்த சக்தியை உற்பத்தி செய்யும் அளவுக்கு உயிர்ச்சக்தித்துகள்கள் நிலைத்திருக்கும்.விந்து நாதத்தை ஆதாரமாகக் கொண்டு உற்பத்தியாகும் இந்த ஜீவகாந்தமானது, இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம். காற்றோட்டத்தால் பல மடங்காகப் பெருகி பரவி மூளையால் உணர்தல், இரசித்தல், நினைத்தல் என்ற விளைவுகளாகவும், உடலியக்கமாகவும் மற்றொரு பகுதி மன அலைகளாகவும் இயங்கிக் கொண்டிருக்கிறது.

காந்த நிலை உணர்ந்திடில், கடவுள் மனம் அதனிலே,

    கண்டிடலாம் அதன் மாயத் திருநடனக் காட்சியாய்.,
மாந்தருக்குள் ஊறு, ஓசை, மணம், ஒளி, சுவை, மனம்
    மற்றும் இன்பம் துன்பம் யாவும் மாயகாந்த விளைவுகள்.
சாந்தமான மனநிலையில் சலனமின்றி ஆய்ந்திட,
    சந்தேகம் சிக்கலின்றி, சாட்சி கூறும் உன்உளம்.
வேந்தருக்கும் வேதருக்கும் வணிகருக்கும் பொதுஇது.,
    விரிந்தறிவில் இறையுணர விளக்கினேன் விளங்கியே!
                                            வேதாத்திரி மகரிஷி

வான் காந்தம் என்பது என்ன?


தற்சுழற்சியுடைய இறைத்துகளே காந்தம். பிரபஞ்சம் முழுவதும் இறைத்துகள்கள் நிரம்பி இயங்குகின்றன. எனவே இத்தகைய ஆற்றலை ஆங்கிலத்தில் 'மேக்நெட்' (Mag+net = magnet) என்று கூறுகிறார்கள். மேக் (mag) என்றால் 'மகா' அதாவது 'பெரிய' என்ற கருத்தாகும். நெட் என்றால் வலை. காந்தம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள எல்லா பொருட்களையும் ஒன்றிணைத்துப் பின்னிக்கொண்டும், சூழ்ந்தழுத்தி இயக்கிக் கொண்டும் இருக்கின்ற ஒரு 'பெரியவலை' என்பதாகும்.


ஜீவகாந்த சக்தியை எந்தெந்த வழிகளில் செலவாகிறது:


  • கோபம் 
  • பொறாமை 
  • பயம் 
  • வஞ்சம் 
  • பொருள் 
  • பற்று 
  • கவலை 
  • விருப்பு 
  • வெறுப்பு 
  • பேராசை 
  • காமம் முதலிய எண்ண இயக்கங்கள் ஜீவகாந்த சக்தியைப் பெரும் அளவில் குறைத்துவிடுகின்றன.

அறிவைக்கொண்டு ஐம்புலன்களை செயலாற்றும் போது, அந்த ஜீவகாந்த சக்தியே அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் என்பவைகளாகத் தன்மாற்றமடைந்து சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்றவாறு எழுச்சி பெற்று ஒர் அளவில் ஜீவகாந்த சக்தி செலவாகின்றது. எனவே இந்த உயிர்ச்சக்தியை, ஜீவகாந்த சக்தியை தன் நிலைமைக்கு வீழ்ச்சி ஏற்படாதவாறு பாதுகாக்கவும், அறிவின் ஆற்றலையும், உடல் வலிவையும், ஆக்கத் துறைக்கே பயன்படுமாறு பண்படுத்தல், பயன்படுத்தல், ஒருமை நிலையில் அறிவு நிற்கப் பழகுதலும் வேண்டும்.


ஜீவகாந்த சக்தியை அதிகரிப்பது எப்படி?

தவம் ஒன்றே அதற்கு வழி. தவத்தால் அதிகரிக்கும் ஜீவகாந்த சக்தியைக் கொண்டு அறிவின் ஓர்மைப்பழக்கம், கற்பு, ஒழுக்கம், நல்லோர் நட்பு, நல்லோர் ஸ்பரிசம், அன்புடையோர் அளிக்கும் சுவையான மிதமான ஆகாரம், பேராதார நிலையை நோக்கி அறிவு நிற்கும் பழக்கம், மிதமான முறையான சுவாசாப்பியாசம், இவைகளால் ஜீவகாந்த சக்தி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவில் கூடிக்கொண்டே இருக்கும்.


கருதவம் என்பதன் விளக்கம்:

கருதவம் மிக அவசியம். கருவின் இயக்கத்தையே உள்ளுணர்வாகப் பெற்று அவ்வுணர்விலேயே லயித்து ஒன்றி ஒன்றி நின்று, அறிவின் இருவித இயக்க நிலைகளாகிய பேரறிவு (Conscious) சிற்றறிவு (Sub Conscious) என்பவற்றின் சலனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்தலும், மௌனமாக நிற்கப்பழகுவதும் கருதவம் ஆகும்.

கரு என்பது பிரபஞ்சத்தில் மிகச்சிறந்த உயர்ந்த பொருள். அதைத்தான் ஜீவாத்மா என்றும் ஜீவன் என்றும் சொல்லுகிறோம். இதை ஆரம்பமாகக் கொண்டே எந்த உடலும் தோன்றுகிறது. அறிவிற்கும் உடலுக்கும் அதுவே மூலமாகும். உடலுக்கும் அறிவுக்கும் மூலமாக உள்ள உயிரில் நினைவை நிறுத்தி அறிவு எழும் இடத்திலேயே அதை வசப்படுத்தும் முறைதான், கருதவம் அல்லது சுக்கிலத் தியானம் என்று வழங்கப்படுகிறது.

இந்த தவம், இழக்கும் உயிர்ச்சக்தியைக் கூட்டிக் கொள்ளவும், இனி வீணாக்காமல் காக்கவும், அறிவிலே தெளிவும், உறுதியும், நுட்பமும் பெற்று உலக வாழ்விலும் ஆன்மீகத்திலும் மனிதனுக்கு உயர்வை அளிக்க வல்லதாகும். மேலும் விழிப்பு நிலைபெற்று, தற்சோதனைப் பயிற்சி முறையால், வினைத்தூய்மையும், மனத்தூய்மையும் உண்டாகி அவற்றின் அடிப்படையில் ஒழுக்க உணர்வு, கடமை உணர்வு, மெய்ப்பொருள் உணர்வு என்ற மூன்றும் இயல்பாக அமையும். 


உடல் இயக்கத்தில் உள்ள நுட்பம்:

நமது உயிருக்கும் உடலுக்கும் ஒத்த உறவு, இனிமையான உறவு இருக்கும் வரையில் தான் உடல்நலம், மனநலம் பாதுகாக்கப் பெறும். இந்த உறவானது நீடித்திருப்பதற்கு ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்று ஓட்டம் இவை மூன்றும் சரியாக இருந்தால் தான் உயிருக்கும், உடலுக்கும் ஒரு தொடரியக்கம், நட்பு, உறவு சீராக இருக்கும். எந்தக் காரணத்தினாலோ ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்று ஓட்டம் இந்த மூன்றிலே ஒன்று தடுக்கப்பட்டாலும், திசைமாறினாலும், வெளியேறினாலும், அளவிலே குறைந்தாலும், ஓட்டத்திலே குழப்பம் அடைந்தாலும், அந்த ஓட்டத்தில் அணு அடுக்குச் சீர்குலைவு ஏற்படும். அது இரத்த ஓட்டத்திலோ, வெப்ப ஓட்டத்திலோ, காற்று ஓட்டத்திலோ எதனாலே வந்தாலும் சரி, மற்ற இரண்டும் கூட ஓட்டத்திலே தடையாகிவிடும். அந்தக் குழப்பத்தை நீக்குவதற்கு அங்கே இருக்கக் கூடிய மின்சக்தி போதாது. அதனாலே அதிகமான மின்சக்தி அங்கே சேர வேண்டியதாகின்றது.

அவ்வாறு அங்கே சேரும் போது ஏற்கனவே அங்கு தொளை (Puncture) ஆகி இருக்கிறது. அளவுக்கு மேலாகக் காந்த சக்தி மின் சக்தியாக மாறும் போது அந்த இடத்தில் நிச்சயமாக மின்குறுக்கு (short circuit, earthing) உண்டாகும். அதுதான் வலியாக வரும். இந்த மின் குறுக்கு சிறிது நேரம் இருந்தால் அது வலி என்றும், அது இடத்தாலே விரிந்தும் காலத்தாலே நீடித்தும் இருந்தால் அது நோய் அல்லது வியாதி என்றும் கூறப்படுகிறது. அதற்கும் மேலாக உடலில் உள்ள ஜீவகாந்த சக்தி எல்லாம் அதிகமாகச் செலவாகி, வருவதற்கும் போவதற்கும் மத்தியில் உள்ள இருப்பை ஜீவகாந்தம் வெகுவாகக் குறைக்குமானால் அதனை ஈடு செய்ய முடியாமல் போகும். ஈடு செய்யும் முயற்சியில் உயிராற்றல் தோல்வியடையும். உடலை நிர்வாகம் செய்வதற்குப் போதிய காந்த சக்தி, ஜீவ காந்த சக்தி, உற்பத்தி செய்ய முடியாமல் தோல்வியடையும். அந்தத் தோல்வியிலே தானே குறைவுபட்டு அது தன்னாலே ஏற்படக்கூடிய வெப்பத்தினாலே அதனுடைய மின்கலம் (battery) என்று சொல்லக்கூடிய விந்து நாளத்தைத் தகர்த்தெறிந்துவிட்டு அதைத் தாங்கி நிற்கக் கூடிய விந்துவையே அல்லது நாளத்தையே உடைத்துக் கொண்டு வெளியேறிய பின்னர் அதைத் தாங்கி நிற்கும் உயிர் உடலில் இருந்து பிரிந்து விடும். இதுவே மரணம். இதுதான் உடலியக்கத்தில் உள்ள ஒரு நுட்பம்.

எனவே மனவளக்கலை பயிற்சிகளினால் உயிராற்றலின் செலவு குறைக்கப்படுகின்றது. விழிப்பு நிலை உயர்கின்றது. ஆராய்ச்சித்திறன் பெருகுகிறது. ஒழுக்க உணர்வு இயல்பாகின்றது. வாழ்வில் துன்பங்கள் நீங்கி அமைதியும் மகிழ்ச்சியும், நிறைவும் கிட்டுகிறது.


  செந்தில்குமார்
        செல்: 9655472931
        நச்சாந்துபட்டி,
        புதுக்கோட்டை மாவட்டம்.

17 ஜூலை, 2025

பிராணனும் – பிராணாயாமமும் என்பது என்ன? அதன் தன்மை யாது? உடல், உயிர், மனிதனில், பிரபஞ்சத்தோற்றத்தில் பிராணனின் இயக்கம் என்ன? அதன் முழு விளக்கங்கள்:

 பிராணன் என்பதன் விளக்கம்:



மனிதன், தான் இயங்குவதற்கு இப்பிரபஞ்சத்திலிருந்தே சக்தியினைமூச்சாக இழுத்துக்கொள்கிறான், அந்த சக்திதான் பிராணண் எனக் கூறப்படுவதாகும். உயிரற்ற ஒருவனால் மூச்சை இழுத்து விட வெளிவிட முடியாது. எனவே, உயிர் என்பது வேறொன்றாகிறது. எனவே பிராணண் என்பதும் உயிர் என்பதும் ஒன்றல்ல, வேறு வேறு ஆகும். பிராண இயக்கத்திற்குப் பிராணவாயு  தேவைப்படுகிறது.

உடல் இயக்கத்திற்குப் பிராணனும் அப்பிராணனுக்கு பிராணவாயுவும் என இம்மூன்றும் சேர்ந்து தொழிற்படுவதே மனித உடலியக்கமாகும். இது எல்லா உயிர்களுக்கும் பொதுவானதாகும்.

உடல் இயக்கத்திற்கு பிராணனின் பங்கு:

ஒருசிசுகற்பத்தில் தோன்றியது முதல் இயல்பான வளர்ச்சிக்குப்பின் வயிற்றினின்று வெளிவரும் வரை அச்சிசு வேறு ஒரு உயிரை சார்ந்தே வளர்கிறது. வெளிவந்த பின் சுவாசிக்கத்தொடங்கியது முதல் தன் உடல் வளர்ச்சிக்கு வித்திடுகிறது எனலாம். அதன் உடல் வளர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக நடைபெறுகிறது., அதற்கு வளர்சிதை மாற்றப்பண்புகளின் இயக்க இயல்பும் அடிப்படையாகிறது. இந்த மாற்றப்பண்புகளுக்கு உணவும்-காற்றும் தொடர்ந்து தேவைப்படுகிறது.

இவ்வுடல் வளர உயிரின் பங்கு என்னஉயிருக்குப் பரிமாணம் உண்டா? விஞ்ஞானத்தில் இதற்கு சரியான பதிலில்லை. வளர்ச்சி ஒரு இயற்கை நியதி என்று மட்டும் கூறுகிறது.

உயிரைப் பற்றிய விஞ்ஞான பார்வை:

உயிர் என்பது பற்றி விஞ்ஞானம் இதுவரை ஒரு சரியான முடிவுக்கு வரவில்லை அல்லது வரமுடியவில்லை.

உடல் இயங்கும் வரை உயிர் இருப்பதாவும், இயக்க முற்று நின்று போனவுடன் உயிர் போய்விட்டதாகவும் கூறுகின்றனர். அதை மரணம் என்று கூறும் முன்பாக, அம்மரணத்தை நிகழாதிருக்கச் செய்ய முடியவில்லை. உயிரைத் தனியாக அடையாளம் கண்டுவிட்டால், உடலில் அது எங்கிருக்கிறது என முடிவு செய்துவிட்டால் அது வெளிப்போகாமல் தடுத்திடலாம் அல்லவா?

உடலுள்ளுறுப்புகள் செயல்திறமை குறைபாட்டில் அல்லது செயல்திறன் முற்றும் கோளாறுடையவர்கள் இறக்கும் நிலைக்குப்போய் பிழைத்து விடுவதும் மிகச்சிறிய கோளாறு காரணமாக இறப்பதும் ஏன்? மரணத்தை கிளினிக்கல் டெத், பிரைன்டென் என்று கூறுகிறது விஞ்ஞானம்.

பிராணண்:

காற்று (வாயு-ஆக்சிஜன்) என்ற ஒரு குதிரையின் மீது சவாரி செய்து கொண்டிருப்பதே பிராணனாகும். இப்பிரபஞ்ச உயிர்கள், அசையும் அணுப்பொருட்கள் என அனைத்து உயிரிகளுக்கும் இன்றியமையாத்தேவை காற்று -ஆக்சிஜன் ஆகும். இக்காற்று, உயிர்களுக்கு தக்கவாறு எடுத்துக்கொள்ளும் அளவு மாற்றம் இருக்கலாம், ஆனால் அது இன்றி பிராணண் செயல்பட முடியாது. உயிரை ஜீவன் என்று கூறப்புகுவோமெனில், பிராணண் ஜீவசக்தி என்று கூறுதல் சரியாகும்.

மனிதனில் பிராணண்:

புலன் உணர்வுகள் தூண்டப்படுவதற்கும், அதற்கேற்றபடி செயல்படவைப்பதும் பிராணனே. அறிவு, புத்தி, சித்தம், மனம், உடலனுபவம் அனைத்தும் பிராணண் இயங்குவதாலயே இயக்கம்பெறுகிறது.

கோள்களில் பிராணண்:

பிரபஞ்சத்தில் எண்ணற்ற கோள்களின் இயக்கத்திற்கும் காற்று, மழை, மின்னல், இடியோசை என அத்தனை இயற்கையின் இயக்க நிகழ்வுகளுக்குள்ளும் பிராணணின் செயல்பாடு அல்லது பிராணச்சலனமே காரணமாகும்.

பிரபஞ்சத்தோற்றத்தில் பிராணண்:

ஏதுமற்ற ஒன்றிலிருந்து எதுவும் தோன்ற முடியாது. எத்தோற்றத்திற்கும் ஒரு (முன்) இருப்பு இருந்ததாலயே தோற்றம் நிகழ்ந்தது. நாம் குறிப்பிடும் முக்கிய கோள்கள், மில்க்கிவேஸ், கேலக்ஸி அனைத்தும் உருவாகும் முன் காணமுடியாத அணுப்பிரமாணமாக இருந்தது என்கிறது வேதம். இறைவனின் சித்தத்தால் அணுக்கள் அத்தனையும் உயிர்பெற்று பிராணசக்தியினை வெளிப்படுத்தத் துவங்கியது.

அனு சலனமும், அனு கூட்டச் சேர்க்கையால், பிரபஞ்சத்தில் (வெட்டவெளியில்) திடப்பொருட்களும், அத்திடப்பொருட்களின் திரட்சியின் காரணமாக வெடிப்புகளும், அவ்வெடிப்பின் பிரிவுகளே கோள்கள் எனவும், அவ்வெடிப்பின்போது ஏற்பட்ட ஒளி, வெப்பம், தொடர் சலனம், ஈர்ப்பு போன்ற பல நிகழ்வுகளை அதனுள்ளிருந்து, நிகழ்வுறச்செய்ததும், என அனைத்துமாய் இருப்பது பிராணணே.

பிராணாயாமம்:

பிராணண் செயல்படப் பிராணவாயு துணை செய்கிறதென முன்பார்த்தோம்.

 மனித உயிரிகள் அவ்வாயுவினை பிரபஞ்சத்திலிருந்தே (காஸ்மிக்) பெறுவதால் பிரபஞ்சத்திற்கு நாம் கட்டுப்பட்டவர்களாகிறோம். அதே போல் அப்பிரபஞ்சத்தையும் நாம் கட்டுப்படுத்த முடியும் என்கிறது யோகக்கலை. மூச்சு விடுவதற்கும், மூச்சினை உள்ளிழுக்கவும் பிராணணே அடிப்படையாய் இருப்பதால். மூச்சுவிடுதல் (சுவாச மாற்றங்களை) பலப்பல கணக்குகளின்படி நெறிப்படுத்துதலும். கட்டுப்படுத்தலுமே பிராணாயாமம் எனப்படும்.

மனிதன் குண இயல்புகளும் கூட மூச்சை நெறிப்படுத்துதல் மூலம் கட்டுப்படுத்துகிறது என்பதை யோகிகள் கண்டறிந்து சொன்னவைகளை யோக மதம் அல்லது யோக வேதம் என்று கூறுவர். கோபம், துக்கம், மகிழ்வு போன்ற எண்ண வேறுபாடுகளின்போது மூச்சு மாறுகிறது. இயல்பான மூச்சினின்றும் வித்தியாசப்படுகிறது என்பதைக் கண்டு. அதே முறையில் மூச்சை (சுவாசத்தை) மாற்றி எண்ணங்களைச் சமனப்படுத்தவும் கூடும்.

மனமகிழ்வு, நிம்மதி போன்ற மன ஆரோக்கியத்தை மன ஆற்றலை பெருக்கிக்கொள்ளும் பல்வகையான பிராணாயாம முறைகளை யோகம் கூறுகிறது, யோக மார்க்கம் என்ற யோக வழியின் தந்தை ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியின் அட்டாங்க யோகமே உலகிற் சிறந்த யோக சாஸ்திரமாக விளங்குகிறது.

மனிதச்செயல்பாடுகளால் மாண்பு பெறும் வழிகளை நான்கு நிலைகளில் எய்தலாம் என பெரியோர் கூறுவர்.

1)சரியை 2)கிரியை 3)யோகம் 4)ஞானம் இவ்வழிகளில் மிகச்சிறந்ததாக யோகமே“ குறிப்பிடப்படுகிறது

1)சரியை - வயது வரும்போது ஒவ்வொரு மனிதனும் வினையாற்றத் தகுதி பெறுகிறறான். அவ்விதமே அவன் தனக்காகச்செய்யும் காரியங்கள் “சரியைஎனப்படுகிறது.

2)கிரியை - தனக்காக மட்டுமல்லாது பிறருக்காகவும், இவ்வுலகத்திற்காகவும் பயன்படத்தக்க வகையில் வினையாற்றுவதே “கிரியையாகிறது.

3)யோகம் - இதற்கும் மேலாகத் தன்னையும் தன் பிறவியையும் நன்குணர்ந்திடவும் இறைவனோடு தன்மை இணைத்துக் கொள்ளும் மேன்மைப்படுத்திய உணர்வு ஆற்றலை, மன ஆற்றலை வளர்த்து வினையாற்றுவது “யோகம்” மாகிறது, இந்த யோக நெறியின் முதல்படியே பிராணாயாம (பிராண வேள்வி) மாகும்

4)ஞானம் - நற்கிரியைகளைச் செய்து நற்பேறு பெற்றிடும் நடுநிலையாள்கிறவர்கள் “ஞானம்எய்துகின்றார்கள்.


செந்தில்குமார்

செல்: 9655472931

நச்சாந்துபட்டி,

புதுக்கோட்டை மாவட்டம்.

8 ஜூலை, 2025

ஊழ்வினை என்றால் என்ன? நமது மூல நூல்களிலும், புராணங்களிலும் சொல்லப்பட்ட விளக்கங்கள் என்ன? ஊழ்வினையில் இருந்து தீர்வு பெற என்ன வழி?

 ஊழ்வினை என்பது எதன் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது?



ஊழ்வினை என்றால், ஒருவரின் முந்தைய பிறப்புகளில் செய்த செயல்களின் விளைவாக இப்பிறவியில் ஏற்படும் நல்வினை அல்லது தீவினைப் பயன் என்று பொருள். இது தலையெழுத்து அல்லது விதிக்கப்பட்ட விதி என்றும் பரவலாக நம்பப்படுகிறது.

ஊழ்வினை என்பதை விதி அல்லது கர்மா என்கிறோம். நம்மால் தடுக்கமுடியாத சில அசம்பாவிதங்கள், கெடுதல்கள் நம் வாழ்வில் திடீரென்று நமக்கு நடப்பதை ஊழ்வினை என்கிறோம்.முன்னர் நாம் செய்த சில பாவங்களே இதற்கு காரணம் என்று கருதப்படுவதால் ‘ஊழ்' என்ற அடைமொழி உருவாயிற்று. கோவலன் மதுரையில் கொல்லப்பட்டதும், கண்ணகி கைம்பெண் ஆனதும் ஊழ்வினை. இதையே இளங்கோ அடிகள் “ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்" என்று குறிப்பிடுகிறார்.


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான் முந்துறும்.
                                        திருக்குறள்

இதன் பொருள் என்னவென்றால், ஊழ்வினையிலிருந்து தப்ப நாம் மாற்று வழியில் சென்றாலும் அது எப்படியாவது நம் முன்னேவந்து நிற்கும் என்பதாகும்.

நல்வினை, தீவினை என்னும் இருவினைகளின் பயனானது, அவற்றைச் செய்தவனையே சென்று அடைவதற்குக் காரணமான நியதியை "ஊழ்" என்றார். ஊழ், பால், முறை, உண்மை, தெய்வம், நியதி, விதி என்பன ஒரு பொருளைக் குறித்தனவே.


ஊழ்வினை பற்றிய மூல நூல்களில் விளக்கங்கள்:


அட்டதிசை எங்கணும் போய் அலைந்தாலும்,
            பாதாளம் அதில் சென்றாலும்,
பட்டம் என வானூடு பறந்தாலும்,
            என்ன அதில் பயன் உண்டாமோ,
பிட்டுவர மண்சுமந்த தண்டலையா
            ரே,முன்நாள் பெரியோர் கையில்
இட்டபடியே ஒழிய வேறு ஆசைப்படின்
            வருவது இல்லை தானே".      
                                தண்டலையார் சதகம்.

பிட்டு வர மண்சுமந்த தண்டலையாரே --- பிட்டை விரும்பி மண்ணைச் சுமந்த தண்டலை நீள்நெறி இறைவரே!,  முன்நாள் பெரியோர் கையில் இட்டபடியே ஒழிய வேறு ஆசைப்படின் வருவது இல்லை --- முற்காலத்திற் பெரியோர்களின் கையிலே கொடுத்தவாறே தவிர மற்று அரு வகையாக ஆசைப்பட்டால் வருவது ஏதும் இல்லை.எனவே, அட்டதிசை எங்கணும் போய் அலைந்தாலும் --- எட்டுத் திசைகளிலும் எங்கும் சென்று திரிந்து உழைத்தாலும், பாதாளம் அதில் சென்றாலும் ---- பாதாள லோகத்திலே சென்று தேடினாலும்வான் ஊடு பட்டம் எனப் பறந்தாலும் --- வானத்திலே காற்றாடி போலப் பறந்து திரிந்தாலும்என்ன --- என்ன கிடைக்கும்அதில் பயன்தான் உண்டோ ---- அவ்வாறு அலைவதனால் பயன் ஏதும் உண்டாகாது. விதிப்படியே எல்லாம் ஆகுமே அன்றி, பேராசை கொண்டு அலைவதனால் பயன் இல்லை.


செங்காவி மலர்த்தடஞ் சூழ் தண்டலைநீள்
            நெறியே,நின் செயல் உண் டாகில்
எங்கு ஆகிலென் அவரவர் எண்ணியது எல்--
            லாமுடியும், இல்லை யாகில்
பொங்கு ஆழி சூழுலகில் உள்ளங்கால்
            வெள்ளெலும்பாய்ப் போக ஓடி
ஐங்காதம் போனாலும் தன்பாவம்
            தன்னுடனே ஆகுந் தானே".   
                                                                         தண்டலையார் சதகம்.

விளக்கம்: இறைவன் அருளானது நமது ஊழ்வினைக்கு ஏற்றவாறே அமையும். ஆகையால், "நின்செயல் உண்டாகில் எண்ணிய எல்லாம் முடியும்" என்றார். ‘உள்ளங்கால் வெள் எலும்பாய்ப் போகஎன்பது பழமொழி. ‘ஐங்காதம் போனாலும் தன்பாவம் தன்னுடனேஎன்பதும் பழமொழி.


ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டு ஒன்றாகும்,
    அன்றி அதுவரினும் வந்து எய்தும், --- ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்,
    எனை ஆளும் ஈசன் செயல்.
                                            நல்வழி.

இதன் பொருள்

ஒரு பொருளைப் பெற நினைத்தால், அப்பொருள் கிடைக்காமல் வேறொரு பொருள் கிடைத்தாலும கிடைக்கும். அப்படி யல்லாமல் அப்பொருளே வந்து கிடைத்தாலும் கிடைக்கும். இன்னும்,ஒரு பொருளை நினையாதிருக்க முன்னே அது தானே வந்து நின்றாலும் நிற்கும்.இவைகள் எல்லாம் என்னை ஆண்டருளும் கடவுளுடைய செய்கைகளாகும். இருவினைகளுக்கு ஈடாக இன்ப துன்பங்களை ஊட்டும் கடவுளுடைய கருத்தின்படியே அன்றி, உயிர்களுடைய கருத்தின்படி ஒன்றும் நடவாது.


வாழ்வினை நுதலிய மங்கலத்து நாள்,
    தாழ் வினை அது வர, சீரை சாத்தினான்;
சூழ் வினை நான்முகத்து ஒருவன் சூழினும்,
    ஊழ்வினை ஒருவரால் ஒழிக்கற்பாலதோ!
                            கம்பராமாயணம், நகர்நீங்கு படலம்.

இதன் பொருள்:

விதிக்கடவுளாகிய பிரமதேவனாலேயே ஊழ்வினையைத் தடுக்க இயலாதாயின், வேறு ஒருவரலாலும் இயலாது. திருமாலின் அவதாரமாகிய இராமனுக்கு வினை என்பது ஒன்று இல்லை. ஆயினும், தேவர் வேண்டச் செய்துகொண்ட சங்கற்பம் தானே இம்மனித வடிவ நிகழ்ச்சியில் வினை ஆனது என்று உய்த்து உணர்ந்து கொள்ளவேண்டும்.


அதிசயம் ஒருவரால் அமைக்கல் ஆகுமோ?
துதி அறு பிறவியின் இன்ப துன்பம் தான்
விதி வயம்" என்பதை மேற்கொளாவிடின்,
மதி வலியால் விதி வெல்ல வல்லமோ
                        கம்பராமாயணம், சடாயு உயிர்நீத்த படலம்.

 

இதன் பொருள்:

நமக்கு வரும் இன்ப துன்பங்கள் விதி வசம் என்ற கோட்பாட்டை ஏற்றுக் கொண்டால் தான்,நாம் நம் அறிவு வலிமையால் அதை நீக்க முடியும். விதிவசம் என்பதை ஏற்காவிடின் நம் மதி வலிமையால் இன்ப துன்பங்களை வெல்ல முடியாது. வருவன வந்தே தீரும்,அவற்றைத் தடுக்க முடியாது. வந்ததன் பின் விதி வசம் என எண்ணி ஆறுதல் அடைந்து மதி வலியால் அதனைப் போக்கலாம் என்று சடாயுஆறுதல் கூறுகிறான். 'விதிக்கும் விதியாகும் என் வில் தொழில் காண்டி'என்று சன்னத்தனாகிக் கொக்கரித்த இலக்குவன் கூண்ட, "வெஞ்சின விதியினை வெல்ல வல்லமோ" என்று கூறுதல் காண்க.


வீதலும் பிழைத்தல் தானும்
     விதிவழி அன்றி, நம்மால்
ஆதலும் அழிவும் உண்டோ?
     நின்னில் வேறு அறிஞர் உண்டோ?
பூதலம் தன்னில் யாவர்
     புதல்வரோடு இறந்தார்,ஐயா!
சாதல் இங்கு இயற்கை அன்று என்று
     அருளுடன் தடுத்த காலை.    
                        வில்லிபாரதம், 13-ஆம் போர்ச் சருக்கம்.

இதன் பொருள்:

கண்ணன் ஏவ, இந்திரன் முனிவர் வடிவில் வந்து, தீயில் பாய இருக்கின்ற தனது மகனோடு தீயில் பாயத் தலப்படுகின்றான். அவனைத் தடுக்குமாறு, கண்ணன் அருச்சுனனை ஏவுகின்றான். அருச்சுனன் முனிவருக்கு உலக இயற்கையைச் சொல்லித் தடுக்கின்றான். உனது மகன் இறந்தாலும், எனது வார்த்தையை மறுக்க மாட்டாய் அல்லவா? என்று, "என் மகன் இறக்க, என்னை இருத்தினை ஆயின்,அம்ம! நின் மகன் இறந்தால், என்சொல் மறாது ஒழி, நீயும்!' என்று முனிவனாக வந்த இந்திரன் சொன்னான்.

ஊழ் வலிமை மிக்கது என்று கூறிய நாயனார், அதனை வெல்லும் உபாயத்தையும், "ஆள்வினை உடைமை" என்னும் அதிகாரத்தில், "உலைவு இன்றித் தாழாது உஞற்றுபவர், ஊழையும் உப்பக்கம் காண்பர்" என்று கூறி அருளினார்.


ஊழை வெல்லுதற்கு உரிய உபாயம்:


“சிவாயநம" என்று சிந்தித்து இருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை --- உபாயம்
இதுவே மதியாகும்,அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்.        
                                        நல்வழி.

இதன் பொருள்:

சிவாயநம என்று தியானித்துக் கொண்டிருப்பவருக்கு, ஒருபொழுதும் துன்பம்உண்டாகாதுஇதுவே துன்பமில்லாமல் இருப்பதற்கு உரிய உபாயம். விதியை வெல்லுதற்கு ஏற்ற உபாயமும் இதுவே ஆகும். இது அல்லாத எல்லா அறிவுகளும், விதியின்படியே ஆகிவிடும்.

சிவபெருமானுக்குரிய திருவைந்தெழுத்தை இடையறாது நினைந்து கொண்டிருப்போர்க்கு விதியால் வரும் துன்பமில்லை. ஏனையர்க்கு உண்டு. சிவபெருமானுடைய திருவைந்தெழுத்து என்று ஔவைப் பாட்டியார் சொன்னதால், அது ஒன்றுதான் என்று கொள்ளவேண்டாம். அருள்நெறியில் நிற்போர்க்கு, அவர் நினைந்த வடிவில் வந்து தெய்வம் அருள்புரியும். எனவே, எத் தெய்வம் கொண்டோமோ, அத் தெய்வத்திற்கு உரிய மந்திரம் என்று கொள்வது பொருந்தும். சமயச் சாயம் தேவை இல்லை.


வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை,- நினைப்பது எனக்
கண்ணுறுவது அல்லால் கவலைப்படேல்,நெஞ்சே!மெய்
விண்ணுறுவார்க்கு இல்லை விதி".    
                                                நல்வழி.

இதன் பொருள்

இருவினைப் பயனை வெல்வதற்கு உரிய உபாயமானது, வேதம் முதலாகிய எல்லா நூல்களையும் கற்பதால் உண்டாவதில்லை. எனினும்,நெஞ்சே! --- மனமே, கவலைப் படாதே. மெய்யாகிய வீட்டு நெறியில் நிற்பவர்க்கு, அவர் நினைப்பது போலத் தோன்றுவது அல்லாமல், விதி இல்லை.

முத்தி நெறியாகிய தியான சமாதிகளினால் அன்றி, நூல்களைக் கற்றலினால் வினையைக் கடக்க ஒண்ணாது.


செந்தில்குமார்

செல்: 9655472931

நச்சாந்துபட்டி,

புதுக்கோட்டை மாவட்டம்.