கருமையம் என்பது விளக்கம்:
அண்டத்தில்
உள்ளது பிண்டத்தில் உள்ளது என்பதை கேள்வி பட்டிருப்பீர்கள் இப்போது கருமையம் என்ற ஒரு
புதிய விஷயத்தை உங்களுக்குச் சொல்லப் போகின்றேன். அதற்கு அடித்தளமாக செல்கள் பற்றி
கொஞ்சம் தெரிந்து தெரிந்து கொள்வது சிறப்பு. இதோ இங்கிருக்கின்றதே இந்த மாமரத்தின்
ஆதாரம் என்ன? அதாவது மரம் எப்படி தோன்றியது?
ஒரு மாங்கொட்டையிலிருந்து, செடியாகி, மரமாகியுள்ளது
இந்த மாங்கொட்டை எங்கிருந்து வந்தது என்று கேட்டால் இன்னொரு மாமரத்தின் வித்து என்பீர்கள். இதுபோலே உங்கள் உருவம், குணங்களுக்கு எது ஆதாரம்?
எனது அம்மா, அப்பா
மிக சரி நீங்கள் உன் அம்மா வயிற்றில் கருவாக உருவானபோதே உன் அம்மா வழி மற்றும் உன் அப்பா வழி பரம்பரை குணங்கள் எல்லாம் கருவில் பதிந்துவிட்டது அல்லவா இன்னும் சொல்லப்போனால் ஆதி இறைநிலை முதற்கொண்டு இன்றைய நீ வரை பரம்பரை சரித்திரம் அத்தனையும் உன்னில் அடங்கியிருக்கின்றது.
அப்படியானால்
இறைவனின் குணங்களும் என்னிடம் இருக்கும்தானே?
இங்குள்ள எல்லோருமே இறைநிலையின் சொரூபங்களே! இறைநிலை தன்மாற்றம் அடைந்து, இறைத்துகளாகி, விண் முதல் பஞ்ச பூதங்களாகி, ஓரறிவு தாவரம் முதல் ஐந்தறிவு விலங்குகளாகி பின் ஆறாவது அறிவு பெற்ற மனிதன் வரை வந்த பயணத்தில் இறைநிலை குணங்கள் களங்கப்பட்டு போய் விட்டன. இந்த களங்கங்களைப் போக்கினால் நாம் இறைவனாகி நிற்கலாம்.
குரங்கிலிருந்து
மனிதன் பிறந்தான் என டார்வின் கொள்கைகள்
பற்றி படித்திருப்பீர்கள். ஒரு சிம்மத்திற்கும், குரங்கிற்கும்
பிறந்தவன்தான் மனிதன் என்பார்கள் மகரிஷி
அவர்கள். ஐந்தறிவு வரை வந்த விலங்கினங்களுக்கு
தனக்குத் தேவையான உணவைத் தயாரித்துக்
கொள்ளத்தெரியாது. இயற்கையில் கிடைப்பதை அப்படியே சாப்பிடும். குரங்கு சைவ விலங்காக
இருந்தாலும், தனக்கு தேவையானதை தன்
இனக் குரங்குகளிடமிருந்தே பிடுங்கி சாப்பிடுவதை பார்த்திருப்பீர்கள். சிங்கமோ தன் உணவிற்காக
இன்னொரு விலங்கினை அடித்துக் கொன்று சாப்பிடும். இந்த
இரண்டு விலங்குகளின் கலப்பாகத் தோன்றிய மனிதன் பிறவியிலேயே
பிறர் வளம் பறித்தல் மற்றும்
பிறர் வாழும் சுதந்திரத்தை அழித்தல்
என்ற களங்கங்களோடுதான் தோன்றியிருக்கின்றான். பகுத்தறிவு பெற்ற மனிதனுக்கு தன்
எதிர்காலம் பற்றி, தேவைகள் பற்றி
சிந்தித்து செயல்பட தெரிந்திருந்தாலும் பெரும்பாலான
மக்கள் விலங்குகளைவிட மோசமாக வாழ்ந்து களங்கங்களைப்
பெருக்கிக்கொண்டே போகின்றார்கள். இன்றைய சமுதாயத்தில் நாம்
காணும் துன்பங்கள் அனைத்துக்கும் காரணம் மனிதர்களிடம் காணப்படும்
களங்கங்களே. வித்துத் தொடராக வரும் இவற்றைப்
போக்கிக்கொண்டால் மனிதன் இன்பமாக வாழ
முடியும். இந்த கருமையக் களங்கங்களைப்
போக்க மகரிஷி அவர்கள் எளிமையானப்
பயிற்சிகள் தந்துள்ளார்கள்.
கருமையம் என்றீர்களே, அதுபற்றி மேலும் சொல்லுங்கள்
புவிஈர்ப்பு மையம் பற்றி படித்திருப்பீர்கள். ஒரு பொருளின் எடை அனைத்தும் அப்பொருளின் வடிவத்திற்கு ஏற்ப ஒரு புள்ளியில் இருப்பதாக கணிக்கின்றோம். நம் பரு உடலின் மையம் எங்குள்ளது?”
நம் அடிவயிற்றுப் பகுதி
சரி
உடல் முழுதும் ரத்தம் ஓடினாலும் ரத்த
ஓட்டத்தின் மையம் இதயம்தானே இதுபோல
உடல் முழுதும் காந்த ஒட்டம் ஓடினாலும்,
அதற்கு ஒரு மையம் உண்டு.
அதுபோல உயிர் உடல் முழுதும்
ஓடினாலும் அதன் மையம் உயிரின்
மூலமான ஜீவவித்துக் குழம்பு இருக்குமிடமான வித்தகம்
இருக்கும் அடிவயிற்றுப் பகுதியில் இருக்கின்றது. பருவுடலின் மையம், காந்த ஓட்டத்தின்
மையம் மற்றும் உயிர் மையம்
எல்லாமே ஓரிடத்தில் அடிவயிற்றில் முதுகுத் தண்டு நுனியில் மூலாதாரம்
என்று சொல்வார்களே அங்கே இருக்கின்றது. இந்த
இடத்தை மகரிஷி அவர்கள் ‘கருமையம்’ (Genetic Center) என
சிறப்பாக பெயரிட்டிருக்கின்றார்கள். நம் ஒவ்வொருவரின் கருமையத்தில்
ஆதி முதல் இன்றுவரை மனித
சரித்திரத்தின் களங்கங்கள் அனைத்தும் பதிவாகியுள்ளன. இந்த கருமையத்தைத் தூய்மை
செய்ய முடியும். அதைத்தான் மகரிஷி அவர்கள் எளியமுறை
மனவளக்கலைப் பயிற்சிகளாகத் தந்திருக்கின்றார்கள்.
மருத்துவத்தின் மூலமாக கருமையத் தூய்மை செய்யலாமா விளக்கம்:
மகரிஷி
சொல்லும் கருமையம் மருத்துவத் துறைக்கே புதுமையானது. இப்போதுதான் இதுபற்றி ஆராயத் தொடங்கியுள்ளனர்.
நாம் கருமையம் பற்றி மேலும் சில விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்.
வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லுவார்கள் மனிதனிடம் அமைந்துள்ள கருமையம், இறைநிலையின் பேரியக்க மண்டலம் பரிணாம இரகசியங்கள் அனைத்தும் அடங்கிய “சூப்பர் கம்ப்யூட்டர் சிப்”என்று கொள்ளலாம். கருமையம் தான் மனிதனின் அறிவுக்கும், மனதுக்கும் இருப்பிடமாகவும், இயக்கக்களமாகவும் இருக்கின்றது.
ஆன்மா என்பதன் விளக்கம் என்ன:
கருமையம் பற்றி சொன்னீர்களே, இதற்கும் ஆன்மீகத்திற்கும் என்ன தொடர்பு?
மகரிஷி அவர்கள் ஒரு கவிதையில்
காந்தநிலை அறியாமல் கடவுள்நிலை அறிவதோ
மாந்தராக வாழுகின்ற மாண்புடைய எவருக்கும்
மாற்றுவழி தத்துவத்தில் விஞ்ஞானத்தில் இல்லையே!
என்கிறார். அதனால்தான் நான் உங்களுக்கு காந்தம் பற்றியும், கருமையம் பற்றியும் முடிந்தவரை எளிமையாக விளக்கி வருகின்றேன்.
காந்த
அலைகளின் திணிவுதான் நம் உடலில் கருமையமாக இருக்கின்றது. இறைநிலை பற்றி ஏற்கனவே உங்களுக்குச்
சொல்லியிருக்கின்றேன் – அது காந்த ஆற்றலாக இருப்பதினால் இறைத்தன்மைகள் அத்தனையும் கருமையத்திற்கு
உண்டு. இறைநிலை போலவே இதற்கு தன்னிருக்க ஆற்றலும் உண்டு, விளக்கும் ஆற்றலும் உண்டு.
மகரிஷி இதனை எளிமையான உதாரணத்தால் விளக்குவார்கள் – ஒரு பசுவைக் கண்களால் பார்க்கிறோம்.
பசு எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அதன் பிரதிபலிப்பு நம் கண்களில் சிறியதாக ஒரு கொசு
அளவிலே தெரிகின்றது. ஜீவகாந்தத்தின் மூலம் அந்த கொசு அளவுள்ள பசு உருவம் மேலும் சுருங்கி
ஒரு புள்ளி அளவில் மூளையில் பதிவாகின்றது. மேலும் ஜீவகாந்தம் திணிவு பெற்ற இடமான கருமையத்திலும்
இந்த பசு காட்சியும் பதிவாகின்றது. சில நாட்கள் கழித்து நாம் என்ன பார்த்தோம் என்று
சிந்திக்கும்போது கருமையத்தில் பதிவான பசு உருவம் ஜீவகாந்தமான மன அலைகள் மூலம் மூளை
செல்களில் மோதி பசுவின் உருவத்தை எண்ணமாக மனத்தால் பார்க்கின்றோம். நீங்கள் எத்தனை
தடவை பசுவை நினைத்தாலும் கருமையம் பசுவின் உருவத்தை விரித்துக் காட்டும்.
நாங்கள் இதுவரை இது மூளையின் செயல் என்று நினைத்து கொண்டிருந்தோம். அப்ப மூளையின் வேலை என்ன?
மூளை
பற்றி உங்கள் பாடத்தில் நிறைய சொல்லியிருக்கின்றார்கள். சொல்லாத கருமையம் பற்றி மேலும்
தெரிந்து கொள்வோம். எனினும் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதிலாக நான் ஒரு கேள்வி கேட்கின்றேன்.
இறந்த உடலில் மூளை இருக்கின்றது. அந்த மூளையில் பதிவான எல்லாவற்றையும் விரித்துப் பார்க்க
முடியுமா? அது எப்படி முடியும்? உயிர்தான் இல்லையே? ரொம்ப சரி. உயிர்தான் ஜீவகாந்தமாக,
மனமாக செயல்படுகின்றது என்பதை ஏற்கனவே தெரிந்து கொண்டீர்கள். உயிர் பிரிந்துவிட்டதால்
காந்தத் திணிவான கருமையமும் உடலை விட்டு பிரிந்து விடுகின்றது. அழிவு என்பது பரு உடலுக்குத்தான்.
கருமையம் அழிவதில்லை.
அப்போது அந்த அழியாத கருமையம் என்ன ஆகும்? விளக்கம்:
இதுபற்றி
‘பிறப்புக்கு முன் மற்றும் இறப்புக்குப் பின் உயிரின் நிலை’பற்றி பேசும்போது தெரிந்து
கொள்ளலாம். கருமையம் என்பது எல்லாவற்றையும் சுருக்கிப் பதிவு செய்து வைத்துக் கொள்கின்றது.
தேவைப்படும்போது பதிவுகளை விரித்து எண்ணங்களாக மலர்த்திக் காட்டுகின்றது. இன்னும் சொல்லப்
போனால் சிற்றுயிரிலிருந்து ஆறாம் அறிவு பெற்ற மனிதன் வரையில் மாற்றமடைந்த ஜீவ இனச்
சரித்திரக் குறிப்புப் பெட்டகமே கருமையமாகும்.
புரிகிற மாதிரி தெரியுது. ஓர் உதாரணத்தோடு விளக்கினால் நன்றாக இருக்கும்.
இன்று
நாம் எல்லோருமே செல்போன் பயன்படுத்துகின்றோம். அதில் உள்ள சிப் (சிம் மற்றும் மெமரி
கார்ட்) போன்று நம் உடலில் கருமையம். பேட்டரியில்
சார்ஜ் உள்ளவரை போன் வேலை செய்யும். நமக்கு போனில் யாருடன் பேசவேண்டும் என்பதை அதில்
உள்ள பதிவுகளைப் பார்த்து தேர்ந்தெடுக்கின்றோம் அல்லவா அந்த வேலையை நம்மிடம் மனம் செய்கின்றது.
மெமரி கார்ட்தான் நம் மூளை. பேட்டரிதான் உயிர்.
அப்படியானால் இந்த கருமையத்திற்கு உள்ள வேறு பெயர்:
நம்மிடம் திணிவு பெற்று விளங்கும் கருமையமான காந்தம் ‘ஆன்மா’ எனவும் அழைக்கப் படுகின்றது. இந்த ஆன்மா என்ற காந்தத்திற்கு என்றுமே அழிவு என்பதில்லை.
கருமையத்துட்பொருள்
கடவுள் எனும் இறைவெளியே
கருமையத்தூய்மை விளக்கம்:
ஆன்மா என்றால் நாங்கள் வேறு ஏதோ ஒன்று என்று அல்லவா நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.
ஆன்மா என்ற சொல்லுக்குத்தான் ஒவ்வொரு மதத்திலும் எத்தனை, எத்தனை விளக்கங்கள்! இவை நமக்கு மிகுந்த குழப்பத்தைத்தான் ஏற்படுத்துகின்றது. மகரிஷி அவர்கள்தான் கருமையம் என்ற சொல்லின் மூலம் விஞ்ஞான ரீதியாக ஆன்மாவை எளிதாக விளக்குகின்றார்கள்.
இன்றைக்கு நீங்கள் பாடங்களில் ஜீன் என மரபு பதிவுகள் பற்றி படித்திருப்பீர்கள் இதுமாதிரிதான் நம் கடந்தகால வாழ்க்கையில் பெற்ற அனுபவங்கள், நம் முன்னோர்கள் பதிவுகள் என எல்லாம் காந்தப்பதிவுகளாக ஆன்மாவில் அல்லது கருமையத்தில் சேர்ந்துவிடுகின்றன. சுருக்கமாகச் சொன்னால் ஆன்மா என்பது காந்த அலைப்பதிவுகள் கொண்ட கருமையம் எனலாம்.
மகரிஷி சொல்கிறார்கள்:
ஒருவர் பிறந்து மூன்று வயது முதல் இன்றுவரை எண்ணிய எண்ணங்கள், சொல்லிய சொற்கள், செய்த செயல்கள் அத்தனையும் கருமையத்தில் மேலடுக்கு பதிவுகளாக உள்ளன. இவைகளை வினைப்பதிவுகள் எனவும் சொல்லலாம். மேலும் பின்னோக்கிச் சென்றால், அவரது பெற்றோர்கள், அவர்களது முன்னோர்கள், விலங்கினம், நான்கறிவு ஜீவன்கள், மூன்றறிவு உயிரினங்கள், இரண்டறிவு புழு வரை வந்த, செய்த செயல்கள் எல்லாமே கருத்தொடரால் கருவமைப்புப் பதிவுகளாக மனிதனிடம் கருமையத்தில் பதிந்துள்ளன. சிற்றுயிரிலிருந்து சிறப்பு நிலையிலான மனிதன் வரையில் தன்மாற்றம் அடைந்த ஜீவ இனச் சரித்திரக் குறிப்பு பெட்டகம்தான் கருமையம் ஆகும். கருமையம் என்பது பிரபஞ்ச ரகசியங்கள் அனைத்தும் அடங்கிய தெய்வீக நீதி மன்றம் எனவும் சொல்லலாம்.
நாம்
எந்த செயலையும் நம் உடலில் உள்ள பத்து இந்திரியங்கள் மூலமாகத்தான் செய்கிறோம். நாம்
செய்யும் செயலினால் ஏற்படும் அதிர்வுகளும். இன்ப, துன்ப உணர்வுகளும் கருமையத்தின் தன்மையாக
மாறிவிடும்.
பத்து
இந்திரியங்கள் என்று சொன்னீர்களே, அவற்றைச் சொல்லுங்கள்
நாம்
உணர்வாகப் பெறும் தொடு உணர்வு, சுவை உணர்வு, நுகரும் உணர்வு, பார்க்கும் உணர்வு மற்றும்
கேட்கும் உணர்வுகளுக்கான ஐம்புலன் கருவிகள் தோல், நாக்கு, மூக்கு, கண், காது இவை ஐந்தும்,
தொழில் கருவிகளான கைகள், கால்கள், வாய், குதம் மற்றும் பால்குறி மொத்தம் பத்தும் பத்து
இந்திரியங்களாகச் செயல்படுகின்றன. ஒவ்வொரு கருவியும் கருமையத்தில் பதிவுகளை ஏற்படுத்திக்கொண்டு
இருக்கின்றன. கருமையத்தின் தன்மையும் மாறிக்கொண்டே இருக்கின்றது.
அப்ப
மூளையில் உள்ள பதிவுகள் என்ன வேலை செய்கின்றன?
நம்
செல்போனில் உள்ள மெமரிகார்டுதான் மூளை எனச் சொன்னேன் அல்லவா கருமையத்திற்கும், மூளைக்கும்
நேரடித் தொடர்பு உண்டு. இன்னும் சொல்லப்போனால் மூளையின் மூலமாகத்தான் கருமையத்தில்
அனைத்தும் பதிவாகின்றன. உடலைவிட்டு உயிர் பிரிந்தபின் மூளை செயல்படாது. மூளையை இயக்கும்
ஜீவகாந்தம்தான் (மனம்தான்) இப்போது இல்லையே!
கருமையப் பதிவுகள் என்ன செய்கின்றன? விளக்கம்:
வீட்டில் அம்மா குழம்பு செய்யும்போது அதில் பல பொருட்களைச் சேர்க்கின்றார்கள். சேர்க்கப்படும் போருட்களுக்கேற்ப அது புளிகுழம்பாகவோ, காரக் குழம்பாகவோ, சாம்பாராகவோ அல்லது மோர்க்குழம்பாகவோ மாறுகிறது அல்லவா! அதுபோலவே ஒவ்வொரு மனிதனின் கருமையமும் அவன் செய்த, செய்யும் செயல்களுக்கு ஏற்ப பதிவுகள் பெற்று அதற்கான விளைவுகளைத் தருகின்றன. இதைதான் செயலிலே விளைவை இணைத்த இறைவனின் திருவிளையாடல் என்கிறார்கள். இந்த உண்மைகளை மகரிஷி அவர்கள் பயிற்சிகளாகக் கொடுத்து, உள்ளதை உணர வைத்து, நல்லதை செய்ய வைத்து, அல்லதை விடுவதற்கு நம்மைத் தயார் செய்கின்றார்கள். இவற்றை நீங்கள் தெளிவாக உணர்ந்தால் யாருக்கும், எந்த ஜீவனுக்கும் எவ்விதமான துன்பமும் அளிக்கக்கூடாது என்கின்ற தெய்வீக அற வுணர்வு உண்டாகும். இதுவே உங்களின் அறிவு அடையப்போகும் முழுமைப்பேற்றுக்கு முதல் படியாகும்.
எனது கருமையப் பதிவுகள் எப்படிப்பட்டது? நான் எப்படி நல்ல பதிவுகளை மாத்திரம் வைத்துக்கொள்வது? உலகில் உள்ள அனைவரும் இந்த கேள்விகளைக் கேட்க ஆரம்பித்துவிட்டால் இன்பமய உலகத்தை உருவாக்கிவிடலாம்! இதற்குத்தான் கருமையத்தூய்மை என்ற தலைப்பில் மகரிஷி விரிவாக விளக்கியிருக்கின்றார்கள். அவற்றை அடுத்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
செல்: 9655472931
புதுக்கோட்டை மாவட்டம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக