7 ஜூன், 2019

பிரம்ம ஞானம்




    தெய்வம்¸ இறைநிலை¸ கடவுள்¸ பரம்பொருள்¸ பிரம்மம் எனும் சொற்கள் யாவும் பிரபஞ்சத்தின் மூலப்பொருளான ஒரே தத்துவத்தைக் குறிப்பன ஆகும். நுண்ணணு முதலாக அவற்றின் கூட்டுத் தோற்றங்கள் அனைத்ததையும் ஒருசேரக் குறிக்கும் வார்த்தைதான் பேரியக்க மண்டலம். இந்தப் பெருமண்டலத்தின் தோற்றங்களையும் ஆற்றல்களையும்  புலன்களால் தனித்தனியே எல்லைகட்டியும் அவற்றுக்குத் தனித்தனியே பெயர் வைத்தும் அழைப்பது மனிதனிடம் அமைந்துள்ள ஆறாவது அறிவின் சிறப்பு ஆகும்.

    மரம் என்ற ஒரு தோற்றத்தைப் பகுத்துணர்வால் அடித்தண்டு கிளைகள்¸ இலைகள்¸ பூக்கள்¸ காய்கள்¸ பழங்கள் என்று பல பெயர்களால் அழைக்கிறோம். இவையெல்லாம் மரம் என்ற ஒரே தோற்றத்தின் உறுப்புகளேயாகும். அவையனைத்தையும் சேர்த்து முழுமையாக ஒரு சொல்லில் கூறும்போது  மரம் என்று கூறுகிறோம். இதே போன்று அணுக்கள்¸ பஞ்சபூதம்¸  கோள்கள்¸ சூரியன்¸ உலகம்¸ உயிர்கள் என்று கூறுவதெல்லாம் ஒரே ஒரு இறைநிலையின் பரிணாமத்தால் மலர்ந்துள்ள பேரியக்க மண்டலத்தின் கூறுகளேயாகும். எந்தத் தோற்றமானாலும் ஒரு வடிவம் உண்டு. அதற்கு உட்பொருளாக அமைந்த சில தன்மைகளும் உண்டு.

    எந்தப் பரு உருவத் தோற்றம் ஆனாலும் அது அமைவது முதல்தர நுண்விண் எனும் வேதான்களினது கூட்டுச் சேர்க்கையால் தான். அவ்வாறு அமைந்துள்ள ஒவ்வொரு வடிவத்திலும் உட்பொருளாகத் தன்மைகளை அமைப்பது இரண்டாம் கட்ட நுண்விண்களான யோகான்கள் தான். இரண்டாம் நிலை நுண்விண் யோகான்கள்தான் இறைவெளியின் சூழ்ந்தழுத்த ஆற்றலைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கரைந்து இறைவெளியோடு கலந்து விடும்போது அக்கலவைதான் காந்த ஆற்றலாக மாறுகிறது. இக்காந்த ஆற்றலானது எல்லாச் சடபொருட்களிலும் அழுத்தம்¸ ஒலி¸ ஒளி¸ சுவை¸ மணம் எனும் தன் மாத்திரைகளாகச் சிறப்புற்று அவற்றின் உள்ளமைந்த தன்மைகளாக விளங்குகிறது. இதே காந்த ஆற்றல் உயிர் உடல்களில் மேலே விளக்கிய ஐவகை மாற்றங்களோடு மனமாகவும் இயங்குகின்றது. இறைவெளியே தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றலால் அதன் நுண்பகுதி மடிப்பு விழுந்து அதுவே தனது சூழ்ந்தழுத்தும் தன்மையால் தற்சுழற்சி பெற்று இயங்கிக் கொண்டு இருக்கின்றது. இந்த நுண்துகள்தான் வேதான் எனும் நுண்ணணுவாகும்.

    இதுதான் விஞ்ஞான மொழியில் முதல்நிலை நுண்விண் என்று வழங்கப்படுகிறது. இந்த வேதான் விண் விரைவாகத் தற்சுழற்சியோடு இயங்கும்போது அதைச்சுற்றியும் சூழ்ந்தும் இருப்பது என்ன என்று பார்த்தால் தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் இறைவெளிதான் எனத் தெரியவரும். இவ்விரண்டு தத்துவங்களுக்கிடையே அவற்றின் உரசலால் நிகழும் விளைவு தான் விஞ்ஞானிகட்கும் தத்துவஞானிகட்கும் எளிதில் புலப்படாத நுண்ணலைகளாகிய வான்காந்தம்.

    இந்த நுண்ணலைகளானவை முதலில் நுண்ணிய அலைகளாக எழுந்தபோதும் தன்னிறுக்கச் சூழ்நதழுத்தும் ஆற்றலாகிய இறைவெளியின் அழுத்தத்தால் கோளவடிவம் பெற்று இவையும் வேதான் எனும் முதல்நிலை விண்போன்றே தற்சுழற்சியோடு இயங்குகின்றன. எனினும் வேதான் எனும் முதல் நிலை விண்களைவிட இவை தற்சுழல் விரைவில் மிகவும் குறைந்தவையாகையால் குறுகிய காலத்தில் அவை விரைவு குறைந்து நிலை பொருளாகிய இறைவெளியோடு கலந்து மறைந்துவிடும். இக்காரணத்தினால் இரண்டாம் நிலை விண்ணை நிழல் விண் என்று அழைக்கிறோம். நமது விஞ்ஞானக் குழுவினர் இந்த விண்ணுக்கு யோகான் என்ற பெயரினை வைத்து இருக்கிறார்கள்.


பூரணம் பேராற்றல் பேரறிவு எனும் மூன்றையும் இருப்பு நிலையாகக் கொண்ட இறைநிலையின் பேராற்றல் பரிணாமச் சிறப்பால் இறுதியாக முழுமைத்தகுதி பெற்றவன் மனிதன். பேராற்றல் எனும் தத்துவம் பரிணாமத்தின் நியதியால் அணுவிலிருந்து பஞ்ச பூதங்களாகி அண்டங்கள் பலவாகி உலகமாகி முடிவில் உருவ அமைப்பில் உறுப்புகள் சிறப்போடு அமைந்துள்ளது மனித உருவம். மேலும் இறைநிலையில் இருப்பாக இருந்த பேரறிவானது அணுமுதலாக பஞ்சபூதங்கள் அண்டங்கள் அனைத்துத் தோற்றங்களிலும் இயக்க ஓழுங்கு என்னும் தன்மையாகவும் பஞ்சதன் மாத்திரைகள் எனம் அழுத்தம்¸ ஒளி¸ ஒலி¸ சுவை¸ மணம் இவையாகவும் விளங்கிக் கொண்டிருக்கிறது. அதுவே மனிதனிடத்தில் இறைநிலை¸ விண்நிலை¸ மனம் ஆகிய மூன்று மறை பொருள்களையும் அறியும் ஆறாம் நிலை அறிவை உடைய எண்ணமாகவும் திகழ்கிறது.

பேரியக்க மண்டலத்தில் காணும் எல்லாத் தோற்றங்களிலும் பரு உருவ வடிவங்கள் அனைத்தும் வேதான் எனும் முதல் விண்கள் கூட்டுத்தான் அவற்றினது உட்பொருளாக ஆன்மாவாக தன்மைகளாக விளங்குவது யோகான் என்னும் இரண்டாம் நிலை நிழல் விண்களின் தன்மாற்ற அலை நிகழ்ச்சிகளே! சுருக்கமாகக் கூறுமிடத்து இறைநிலையின் பேராற்றலினுடைய பரிணாமம் வேதான் முதல் அலை வடிவ தோற்றங்கள் அனைத்துமாம். பேரறிவோ யோகான் விண் முதலான அனைத்தத் தன்மைகளுமாகும்.

முதல் நிலை விண்களான விரைவான தற்சுழற்சியுடைய வேதான் என்கின்ற நுண்ணணுக்களுக்கும் இறைவெளியின் தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றலுக்கும் இடையே ஏற்படும் உரசலால் விளைந்த அலைகள்தாம். நிழல் விண்கள் எனும் காந்தம். இறைவெளியின் சூழ்ந்தழுத்த ஆற்றலைத் தாங்க முடியாமல் அவை சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட காலத்தில் இறைவெளியோட கலந்து விடுகின்றன. இந்தக் கரைதல் எனும் நிகழ்ச்சியானது விண்வெளியில் அழுத்தமாகவும் காற்றில் ஒலியாகவும் அமுத்தக் காற்றில் ஒளியாகவும் நீரில் சுவையாகவும் கெட்டிப் பொருட்களில் மணமாகவும் சீவ இனங்களில் மனமாகவும் தன்மாற்றம் பெறுகிறது. அழுத்தம் முதல் மனம் வரையிலான ஆறு இயக்கங்களும் ஆன்மா என்று கருதப்படுகின்றன. இதனால் முதல்நிலை விண்கூடினால் பரு உருவங்கள் உண்டாகின்றன என்றும் இரண்டாம் நிலை நிழல் விண்களால் அந்த உருவங்களுக்குத் தன்மைகள் அமைகின்றன என்றும் அறிந்து கொள்வோம். இத்தகைய சிக்கலான பேரியக்க மண்டல பரிணாமச் சரித்திரத்தை எளிதில் பதிவு செய்து கொள்ளவும் ஏற்ற வகையில் எழுதப் பெற்ற இரண்டு கவிகளை இங்கு தருகிறேன்.

         
   இறைவெளியே தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றல்
       இதன்திணிவு மடிப்புவிழச் சுழலும்நுண் விண்ணாம்.
   நிறைவெளியில் விண்சுழல நெருக்குகின்ற உரசல்
       நிலைவெளியில் எழுப்புகின்ற நேரலைகள் காந்தமாம்.
   மறைபொருளாம் காந்தம்தன் மாத்திரைகள் ஐவகை.
       மலைக்காதீர் விண்கூட்டம் மாபூதம் ஐந்துமாம்.
   முறையாய்அக் காந்தஅலை மனமாம்உயிர் உடல்களில்
       மதிஉயர்ந்திவ் வுண்மைபெற மாபிரம்ம ஞானமாம்!

                                      -பிரம்ம ஞானம்
         
         
 பேரியக்க மண்டலத்ததைத் தத்துவங்கள்
               பத்தாக விளங்கிக் கொள்வோம்.
         பெரியசுமை மனதிலிருந் திறங்கிவிடும்
               மனம்அறிவாம் சிவமு மாகும்.
         ஓரியக்க மற்றநிலை வெட்டவெளி
               இருப்ப துவே; ஆதி யாகும்.
         உள்ளமைந்த ஆற்றலே உருண்டியங்கும்
               விண்ணாகும். அதிலெ ழந்த
         நேரியக்க விரிவுஅலை நெடுவெளியில்
               கலப்புறவான் காந்த மாச்சு.
         நிகழ்காந்தத் தன்மாற்றம் அழுத்தம்ஒலி
               ஒளிசுவையும் மணம்மனம்ஆம்.
         சீரியக்கச் சிறப்புகளை விளைவுகளை
               உள்ளுணர்ந்தால் அதுமெய்ஞ் ஞானம்.
         சிந்திப்போம் உணர்ந்திடுவோம். சேர்ந்திருப்போம்
               இறைநிலையோ டென்றும் எங்கும்!
                                     -காந்தத் தத்துவம்




மண்டலத்தின் பரிணாமம்¸ இயக்கம்¸ விளைவு இவற்றைச் சுருக்கமாகக் கீழே விளக்குகிறேன்.

 1.  அனைத்தியக்க அருட்பேராற்றலாக உள்ளது சுத்தவெளி. அது பூரணம்¸ பேராற்றல்¸ பேரறிவு எனும் முத்தன்மைகளை அடக்கமாகப் பெற்று இருப்புநிலையாக உள்ளது. இந்த இறை வெளியானது தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் பேராற்றலாக  விளங்குகின்றது.

 2.  இறைவெளியின் தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றலால் அதற்குள்ளாகவே மடிப்புகள் ஏற்பட்டு அவை இறைவெளியின் சூழ்ந்தழுத்தும் ஆற்றலால் விரைவான தற்சுழற்சியைப் பெறுகின்ற நுண்ணிய சுழலலையே முதல்விண் எனும் வேதான்.

 3.  இறைவெளியின் தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் பேராற்றலுக்குள் அதிலேயே உருவாகிய வேதான் விண்கள் விரைவாகச் சுழலும் போது விண்களுக்கும் இறைவெளிக்கும் இடையே உரசல் ஏற்படுகின்றது. இத்தகைய உரசலால் இறைவெளியில் எழும் அலைகளே காந்தம் எனப்படுகின்றது. மிக நுண்ணிய அளவில் எழும் காந்த அலைகள் இறைவெளியின் சூழ்ந்தமுத்த ஆற்றலால் அனைத்தும் கோளவடிவம் பெற்று விண்துகள் போலவே அமையப் பெறுகின்றன. இவையே நிழல் விண்கள் "யோகான்"கள் எனும் இரண்டாம் நிலை விண்கள்.

  4. முதல் நிலை விண்ணான வேதான் ஆற்றல் மிகுந்தது. (ளுவசழபெ குழசஉந)இவை கூடும்போது பரு உருவங்கள் தோன்றுகின்றன. இரண்டாம் நிலை விண்ணான யோகான் குறைந்த ஆற்றலுடையது (றுநயம குழசஉந) இதனால் குறுகிய காலத்திலேயே யோகான் விண் இறைவெளியில் கரைந்து லயமாகி விடுகின்றன. இந்தக் கரைசல் அதனைச் சூழந்துள்ள வேதான் துகள்களின் அழுத்த வேறுபாடுகளான


   1. விண்வெளி      4. நீர்
   2. காற்று           5. கெட்டிப்பொருள்
   3. அழுத்தக்காற்று  6. உணர்ச்சி நிலையுடைய உயிரினங்களின் உடல்கள்.

    இவற்றில் முறையே

       1. அழுத்தமாக  4. சுவையாக
       2. ஒலியாக    5. மணமாக
       3. ஒளியாக    6. மனமாக


மொத்தம் ஆறுவகை அலைகளாகத் தன் மாற்றங்களைப் பெறுகின்றது. எல்லா உருவத் தோற்றங்களையும் இல்லமாக (உடலாக) கருதிக் கொண்டால் அவற்றிற்கு உட்பொருளான தன்மைகளாக விளங்குவது காந்தத்தின் தன் மாத்திரைகளேயாகும்.

பேரியக்க மண்டலத்தில் நாம் கோடான கோடி தோற்றங்களைப் பார்க்கிறோம். அனைத்தும் வேதான் எனும் முதல் நிலை நுண் விண்(Infinitesimal energy particle) களின் கூட்டுத் தோற்றங்களே. விண்துகள் தனியே இருக்கும்போது அதனை வேதான் முதல் நிலை விண் (Infinitesimal energy particle) என்று கூறுகிறோம். அவை கூட்டமாகக் கூடிய தோற்றங்களை வேதானின் எண்ணிக்கை மிகுதிக்கேற்பவும் அவற்றின் உட்புறம் யோகான் விண்களின் தன் மாற்றங்களின் தன்மைகளுக்கேற்பவும்

          1. அணு (Atom)        5. உயிருடல்கள் (Organism)
          2. பேரணு  (Molecule)  6. கோள்கள் (Planets)
          3. சிற்றுருவம் (Cell)   7. நட்சத்திரங்கள் (Stars)
          4. தாது (Tissue)

என்ற பொருத்தமான பெயர்களை வைத்து வழங்கி வருகிறோம். இதன் மூலம் உருவங்கள் அனைத்தும் "வேதான்" எனும் முதல் விண்களின் கூட்டுத் தோற்றங்கள் என்றும் அவற்றின் தன்மைகளாக விளங்குவது யோகான் எனும் நிழல் விண்களின் தன்மாற்றங்கள் என்றும் பொதுவாக விளங்கிக் கொள்வோம்.

     1. இறைவெளி
     2. முதல் நிலை நுண்விண் வேதான்
     3. இரண்டாம் நிலை நுண்விண்யோகான் எனும் நிழல்விண்
     4. யோகான் எனும் நிழல் விண் இறைவெளியில் கரையும் நிகழ்ச்சி காந்தம்

    நான்கு அடிப்படை தத்துவங்களையும் யோகான் எனும் காந்தத்தின் தன் மாற்ற விளைவுகளான அழுத்தம் ஒலி¸ ஒளி¸ சுவை¸ மணம்¸ மனம் என்ற ஆறு தன்மாற்ற விளைவுகளையும் கூர்ந்து உணர்ந்து கொண்டால் அந்த அறிவுக்குள் பேரியக்க மண்டல பரிணாமச் சரித்திரமே அடங்கிவிடும். எல்லையற்ற பெருவெளியான தன்னிறுக்கச் சூழந்தழுத்தும் பேராற்றலைத்தான் இறைவெளி என்றும் பிரம்மம் என்றும் தெய்வம் என்றும் மதநெறி பக்தி ஆகியவற்றில் ஈடுபட்ட அறிஞர்கள் கூறுகின்றார்கள்.


விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் அதே இறைவெளியைத்தான் (UNIFIED FORCE) என்ற பெயரில் மிகப் பெரும் மதிப்போடு தேடிக் கொண்டிருக்கின்றார்கள். "தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் பேராற்றலான சுத்தவெளியே பிரம்மம். அதுவே "UNIFIED FORCE" என்று அனைத்துலக மக்களும் அறிந்து கொளவதற்கே  இந்த கட்டுரையை வெளியிட்டிருக்கிறேன்.

  அனைத்தியக்கப் பேராற்றல் பிரம்மம்தெய்வம் என்போம்
     அறிந்தவர்கள் அவ்வாற்றல் வழிவாழ்வோ ரெல்லாம்
  முனைப்பொழிந்த ஞானியென்றும் முனிவரென்றும் பலபேர்
    முன்னாளில் சொல்லியுள்ளார் முற்றுணர்ந்த தெளிவால்
  வினைப்பதிவில் தீயவற்றை வேரறுத்து வாழ்வில்
    விலங்கினத்தின் செயலொழித்து விழிப்போ டறநெறியில்
  அனைத்துலக மக்களும்மெய் யறிவுடனே வாழும்
     அந்தபெரும் நந்நாளை வாழ்த்திவர வேற்போம்.
                                     -பிரம்ம ஞானம்


பிரம்மஞானம் என்பது மனிதகுல வாழ்வுக்கு மேன்மையை அளிப்பதும் சிறப்பைத் தருவதும் ஆகும். ஐந்து ஞானத்திரியங்கள் எனும் தொடு உணர்வு¸ சுவையுணர்வு¸ மணஉணர்வு¸ ஒளி உணர்வு¸ ஒலி உணர்வு¸ கருவிகளாகத் தோல்¸ நாக்கு¸ மூக்கு¸ கண்¸ காது இவைகளுக்கும் தொழில் செய்கருவிகளான கை¸ கால்¸ வாய்¸ பால்குறி¸ குதம் ஆகியவற்றிற்கும் அறிவை அடிமையாக்கிச் செயல்புரிந்து வாழும் வாழ்க்கையானது ஐயறிவுக்குட்பட்ட விலங்கின வாழ்வாகும். ஆறாவது அறிவை மன ஆற்றலோடு இணைத்துக் கொண்டு ஐந்து உணர்கருவிகளையும் ஐந்து தொழில் கருவிகளையும் விளைவறிந்த விழிப்போடு தனக்கும் பிறர்க்கும் ஆக்க வழிகளில் பயன்படுத்தி வாழும் நுண்ணறிவு வாழ்வே மனித இனத்திற்கு ஒத்ததாகும். இத்தகைய உயர் வாழ்க்கைக்கு இயற்கையை அதன் ஆற்றல்களை விளைவுகளை மனிதன் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியம். அடுத்து மனித உடல் அமைப்பையும் மனிதன் ஆற்றல்களையும் தெளிவாக உணர்ந்து கொள்வதும் அவசியம். மனித அமைப்பானது

           கருமையம்     மூளை
           சீவகாந்தம்     கர்மேந்திரியங்கள்
           உயிர்          ஞானேந்திரியங்கள்
           வித்து          மனம்

அனைத்தும் இணைந்த கூட்டு இயக்க நிலையமாகும். இவற்றைப் பற்றி விளக்கமாக அறிந்து கொண்டால் தான் வாழ்வு இனிமையாகவும் அமைதியாகவும் இருக்கும். எனவே மனித இனவாழ்வுக்குப் பிரம்மஞானம் எனும் பேரியக்க மண்டலம் மனிதன் என்னும் இரண்டு தத்துவங்களின் தோற்றம் இயக்கம் விளைவுகள் பற்றிய முழுமையான விளக்கம் மிகவும் அவசியம்.

பிரம்மஞானத்தில் காந்த ஆற்றல் என்பதுதான் மையக்கருத்தாக உள்ளது. இறைநிலையாகிய தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றலும் அதனின் நுண் பகுதியான விண்ணிலிருந்து எழும் அலையும் கூடிய ஒரு பேராற்றலே காந்தமாகும். காந்தமானது இயக்கநிலையான பேரண்ட முழுவதும் நிறைந்த வான்வெளியில் நடைபெறுகின்ற இயக்கங்கள் அனைத்தையும் சீராக ஒழுங்குபடுத்தி இயக்கி வருகின்றது. அதே காந்த ஆற்றல்தான் சீவஇனங்களில் நடைபெறும் எல்லா உறுப்புகளின் இயக்கங்களையும் மன இயக்கங்களையும் ஒழுங்காக நடத்திவருகின்றது.

  எந்தஒன் றறிந்திடில் இறைவன்முதல் உயிர்வரை
       எல்லாவற்றையு முணர்த்துமோ அதுவேதான் காந்தமாம்
  முந்தையோர்கள் அகத்தவத்தால் முறறுணர்ந்த போதிலும்
       மொழிவதற்கு உவமையின்றி முட்டிமோதி நின்றனர்
  இந்தநாள்விஞ் ஞானமோ ஏற்றம்பெற்ற தாலதை
       இயங்கிடும்மின் சாரம்மூலம் எல்லோர்க்கும் உணர்த்தலாம்
  அந்தமாம்மெய்ஞ் ஞானத்தோடு அணுவின்ஞானமி ரண்டையும்
       அறிந்துஉய்ய பாலம்போன்ற ஆக்கஞானம் காந்தமே!


   சுத்தவெளிதான் இறைநிலை. இதுவே தான் கடவுள் ஆகும். இறைநிலையானது எல்லாம் வல்ல பூரணப் பொருள். இதன் இயல்பான தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றலால் அதற்குள்ளாகவே செறிவு ஏற்பட்டு மடிப்புகள் விழுந்து அதன் சூழ்ந்தழுத்தும் ஆற்றலாலேயே மிக விரைவான தற்சுழற்சிபெற்ற நுண்துகள்தான் முதல்நிலை விண் எனும் பரமாணு. இந்த நுண்ணணுக்களின் கூட்டங்களே பேரியக்க மண்டலத்தில் காணும் அனைத்துத் தோற்றங்களும் ஆகும். முதல் நிலை விண்களின் விரைவான தற்சுழற்சியானது அதைச்சுற்றியுள்ள தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றலான இறைவெளியோடு உரசும்போது எழுகின்ற நுண்அலைகள் தாம் காந்தம் எனும் நிழல்விண்கள். நிழல் விண்கள் இறைவெளியின் சூழ்ந்தழுத்தத்தைத் தாங்கமுடியாமல் கரைந்து போகும் நிகழ்ச்சிகள் தான் அழுத்தம் ஒலி¸ ஒளி¸ சுவை¸ மணம்¸ மனம் என்பனவாகும்.

  இறைவெளியானது முதல் விண்¸ நிழல்விண்¸ காந்தம்¸ காந்தத் தன்மாற்ற நிலைகளான அழுத்தம் முதல் மனம் வரையிலான ஆறுவகை இவற்றை மனதில் பதியவைத்துக் கொண்டு பிரபஞ்சத்தை எண்ணிப் பார்த்தால் ஆராய்ந்தால் பேரியக்க மண்டல தோற்றம் இயக்கம் விளைவுகள் அனைத்தும் விளங்கிவிடும். பரமாணு முதல் கொண்டு எந்தப் பொருளும் இறைநிலையாகவே இருக்கும் காட்சி அறிவிற்கு உண்டாகும்.

  எல்லா இடங்களிலும் எக்காலத்திலும் எல்லாப் பொருட்களிலும் இறைநிலையை உணரக்கூடிய பேரறிவுதான் பிரம்மஞானம் எனப்படுகின்றது.

   உதாரணமாக ஒரு மலரைப் பார்க்கிறோம். அது பரமாணுக்களின் கூட்டுத் தோற்றம் தான். அதன் மணமும் நிழல் விண்ணாகிய காந்த ஆற்றலின் தன்மாற்றமே. இறைநிலையே முதல் விண்ணாகி அதன் கூட்டு நிகழ்ச்சி நிலையில் மலராக இருக்கின்றது. அதன் மணமும் நிழல் விண்ணான காந்த ஆற்றலின் தன்மாற்றமே. முதல் விண் நிழல் விண் இருவகையுமே இறைநிலையினது பரிணாமம் ஆகும். இறை நிலையைத்தான் அதன் பரிணாமப் படிகளில் உருவமாகவும் உருவங்களின் தன்மைகளாகவும் எந்தத் தோற்றத்திலும் காண்கிறோம். பால் தயிராக மாற்றம் பெறுகிறது. தயிரை அது அப்போதுள்ள நிலையைக் கொண்டு தயிர் என்றும் கூறலாம். அதற்கு முன்னிலையைச் சிந்தித்து உணர்ந்த தெளிவில் அதே தயிரைப் பால் என்றும் கூறலாம். அதே போல எந்தப் பொருளையும் பார்க்கும்போது சிந்தனை மூலம் அதன் பரிணாமச் சரித்திரத்தை நோக்கி இறுதியாக வரும் மூல நிலையை உணரும்போது அனைத்து தோற்றங்களையும் இறைநிலையாகவே உணரமுடியும்.


             அவ்வுரு வரையில் வந்தகதை
             செவ்விய சிறுசொல் பரிணாமம்
             சிறப்பை உணர்வாய் நீயுமதே!

 எந்தத் தோற்றமானாலும் அதன் மூலநிலையான இறைவெளியிலிருந்து பரிணாம நியதியின்படி அது பெற்று வந்த அனைத்து மாறுதல்களையும் கருத்தில் கொண்டு இன்று அதன் தோற்றத்தையும் உணர்ந்துகொள்ளும் விரிந்த நுண்ணிய பேரறிவே பிரம்மஞானம் ஆகும்.


கூடுதல் பிரிதல்

   இயற்கையின் தோற்றங்கள் இயக்கங்கள் அனைத்திலும் ஒரு பொதுவான ஆற்றலானது கூட்டுவிசை தள்ளுவிசை என்கிற இரண்டு வகை ஆகும். இறைவெளியின் சூழ்ந்தழுத்தத்தால் உண்டாவது ஈர்ப்பு இறுக்கம் அல்லது கூட்டுவிசை. இறைவெளியின் தன்னிறுக்கத்தால் தோன்றியதுதான் வேதான் எனும் விண். வேதான் எனும் முதல் விண்ணின் சுழற்சி விரைவால் உண்டாவதே தள்ளு விசை.

    தனியே இயங்கும் முதல் விண்களாயினும் அல்லது அவற்றின் எந்த அளவிலான கூட்டு அமைப்பு ஆயினும் இறைவெளியின் சூழ்ந்தழுத்தத்தால் அவை சுழல் விரைவு பெறுகின்றன. அந்த விரைவே மற்ற ஒன்றை ஒரு குறிப்பிட்ட தொலைவில் விலக்கி நிறுத்தும் தள்ளு விசையாகும். ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் எத்தனை விண்கள் கூடியிருநதாலும் சரி அதைச் சுற்றியுள்ள இறைவெளியின் சூழ்ந்தழுத்தம் அக்கூட்டத்தைச் சூழ்ந்தழுத்தி அவற்றைக் கூட்டிச் சேர்த்து நெருங்கி இயக்கவைக்கும் அல்லது அவை பிரிந்து போகாமல் இறுக்கிப் பிடித்துக் கொண்டேயிருக்கும். இதனால் எல்லா தோற்றங்களிடமும் கூட்டுவிக்கும் அல்லது இறுக்கிப்பிடிக்கும் ஆற்றலானது இறைவெளியே ஆகையால் அது எங்கும் எப்போதும் ஒரே அளவாகவே இருக்கும்.

  ஆனால் எந்தத் தோற்றமானாலும் அதில் அடங்கியுள்ள நுண் விண்களுடைய சுழல் விரைவு ஏற்றத்தாழ்வுக்கொப்ப தள்ளுவிசை வேறுபடும். இதே இயக்க விதிதான் பேரண்டத்தில் இயங்கும் கோள்களுக்கு இடையேயும் நடைபெறுகின்றன. ஒவ்வொரு அண்டத்திலும் அடங்கிய விண்களின் செறிவுக்கும் (திணிவு) இறைவெளியின் சூழ்ந்தழுத்தமே காரணம். மேலும் இரண்டு கோள்களுக்கும் இடையே உள்ள தொலைவு ஒரே சீராகக் காக்கப்படுவதற்கும் இறைவெளியின் சூழ்ந்தழுத்தமே காரணம்.

  இதனால் இறுக்கம் எனும் ஈர்ப்பு விசை இறைவெளியால் உண்டாகின்றதென்றும் ஒன்றை ஒன்று விலக்கித்தள்ளி நிறுத்தும் ஆற்றலான தள்ளுவிசை நுண் விண்ணின் சுழல் விரைவால்தான் ஏற்படுகிறதென்றும் உணர்ந்து கொள்ளலாம். இந்த இடத்தில் மேலும் ஒரு மிக நுட்பமான உண்மையையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இறுக்கம் விசையான கூட்டு விசையும் விலக்கும் விசையான தள்ளு விசையும் பிறக்குமிடம் இறைவெளியே.

    இறைவெளியின் தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றலால் அதுவே திணிவு  பெற்று மடிப்பு விழுந்து அதன் சூழ்ந்தழுத்தும் ஆற்றலாலேயே அந்த நுண்விண் விரைவாகச் சுழலுகின்றது. இறைவெளியின் இறுக்க ஆற்றலால் விண் தோன்றுகின்றது. அதே ஆற்றலால் விண் தற்சுழல் பெற்று விலக்கும் ஆற்றலாக மாறுகிறது. ஒரு குறிப்பிட்ட அளவில் இறுக்க ஆற்றலாக இருக்கிறது. அதற்கு மேல் அதுவே தள்ளும் ஆற்றலாகிறது.

உதாரணம் :

  ஒரு தண்ணீர் குழாய் அடியில் ஒரு தொட்டியை வைத்து குழாயைத் திறக்கிறோம். தண்ணீர் தொட்டியில் நிரம்புகிறது. தொட்டி நிரம்பி விட்டால் தொட்டியிலிருந்து தண்ணீர் வெளியேறுகிறது. இங்கு தொட்டியின் கொள்ளளவு தான் தண்ணீரை ஏற்றுக் கொள்வத்றகும் தள்ளிவிடுவதற்கும் காரணம். இதே போல தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றல் ஒன்றே. அது போதிய செறிவு பெற்ற பின் தள்ளுவிசையாகிறது. இதனால் பொதுவாக ஒரே ஆற்றல்தான் பேரியக்க மண்டலம் முழுவதும் ஈர்ப்பு விசையாகவும் தள்ளுவிசையாகவும் செயல்படுகின்றது. இந்த அழுத்தம் எனும் இறுக்கும் விசை எங்கும் எப்போதும் வேறுபடுவதில்லை. தள்ளுவிசைதான் பலதரப்பட்ட ஏற்றத் தாழ்வுகளோடு செயல்படுகின்றது. வெளிச்சத்தைப் பல ஏற்றற்தாழ்வோடு பார்க்கிறோம். அங்கெல்லாம் இருட்டுக்கு ஏற்றத்தாழ்வு இல்லை. வெளிச்சத்தின் கனம் குறையக் குறைய இருட்டின் கனம் அதற்கேற்ற அளவில் அதிகமாக உணரப்படுகின்றது. இதே தத்துவ அடிப்படையில் அறிவையும் மனத்தையும் பற்றிச் சிந்திப்போம்.

   அறிவு என்பது இறைநிலையின் இருப்பாற்றலேயாகும். பூரணம் பேரறிவு பேராற்றல் மூன்று  தன்மைகளும் ஒன்றிலிருந்து மற்றதைப் பிரிக்க முடியாதபடி இருப்புநிலையாக உள்ளதே இறைவெளி. இதனைத் தான் எல்லாம் வல்ல மூலப்பொருள் என்று வழங்குகிறோம்.

   இறைநிலையில் இருப்பாக இருந்த பேராற்றல் ஆனது எப்போதும் பெருகிக் கொண்டேயிருக்கும் இயல்பினால் பரிணாமம் என்ற மலர்ச்சி ஏற்படுகின்றது. முதலில் விண்ணாகி பஞ்ச பூதங்களாகி அண்டங்களாகி ஓரறிவு முதல் ஆறறிவு வரையில் உள்ள மனிதனாகி வந்துள்ளது. பரிணாமத் தொடர் முழுவதிலும் பேராற்றலானது உருவங்கள் பலவாகிப் பெருகிக் கொண்டே இருக்கின்றது. பேரறிவு எனும் தன்மையானது நிழல் விண் எனும் காந்த ஆற்றலாகிப் பேராற்றலின் வடிவங்களில் திணிவு நிலைக்கேற்ப அவற்றினோடு அழுத்தம்¸ ஒலி¸ ஒளி¸ சுவை¸ மணம்¸ மனம் என்ற அலைகளாகிப் பேரியக்க மணடல இயக்கத்தில் சிறந்து விளங்குகின்றது. இருப்பு நிலையில் இருந்த பேராற்றல் விண் முதலாக எல்லா உருவத்தோற்றங்களாகவும் மலர்ந்துள்ளது. இருப்பு நிலையில் இருந்த பேரறிவோ எல்லா உருவங்களிலும் ஆன்மாவாக உட்பொருளாக அலை நிலையில் ஒவ்வொரு தோற்றத்திலும் ஆன்மாவாக உட்பொருளாக அலை நிலையில் ஒவ்வொரு தோற்றத்திலும் அழுத்தம் முதலாக அறுவகை தன்மைகளாக விளங்குகின்றன. எனவே மன அலைக்கு நிலை பொருள் அறிவு. அறிவு என்பது இறைநிலையின் தன்மையே ஆகும். ஆகவே மனம் என்ற அலைக்கு அடித்தளம் அறிவு என்னும் இறைநிலையே.

    எண்ணமதன் நிலைபொருள் இறைவனுண்மை தேறுவோம்
       எண்ணமொடு சொல்செயல் இம்மூன்று அலைகளை
    இறுக்கியும் சுருக்கியும் இருப்புவைக்கும் காந்தமே
       எண்ணிப் பார்க்கச் சூழ்ந்தழுத்த எல்லையற்ற ஆற்றலே
    எங்கும்நிறை காந்தத்திற்கு இருப்புநிலை தெய்வமாம்
       எண்ணவிண் சுழலலை இயக்கம்தள்ளும் ஆற்றலாம்
    இருப்பியக்கம் இரண்டுமாய் எங்கும்நிறை காந்தமே!

    இந்த ஆராய்ச்சியின் மூலம் நாம் அறிந்து கொள்வது என்ன? நான் என்று ஒரு மனிதன் கூறும் போது இருப்பு நிலையான இறைவெளியே அதன் அலை நிலையான மனதின் வழியே நான் என்று ஒலிக்கின்றது. இந்த உள்நாட்ட உணர்வில் உண்மை தத்துவம் மனிதனால் உணரப் பெறுகின்றது. இறை நிலையே அதன் பரிணாமம் என்ற தெய்வீகப் பயணத்தில் மனிதனிடத்தில் மனமாக நிறைவு பெற்றிருக்கிறது என்ற உண்மை உணர்வுதான் பிரம்மஞானம் அல்லது இறையுணர்வு ஆகும்.


இறைநிலையானது தனது பரிணாமம் என்ற தெய்வீகப் பயணத்தில் விலங்கினங்களாக வாழ்ந்த காலத்தில் பெற்ற வன்முறைச் செயல் பதிவுகளிலிருந்து மனிதன் விடுபடும்போது தான் இறையுணர்வும் அறநெறியும் இயல்பாகி மனிதனாகிறான். ஆறாம் அறிவு நிலை இறையுணர்வாலும் அறநெறியாலும் கூர்மையும் நுட்பமும் அடையும்போது புலன்களைக் கடந்து நிற்கும் அக உணர்வு உண்டாகின்றது. இந்த அக உணர்வே தனது மூலம் நோக்கி ஆராய்ந்து இறுதியில் இறைநிலை தான் பேரியக்க மண்டலத் தோற்றங்கள் அனைத்துமாக இருப்பது போன்று தானுமாக விளங்குகிறான் என்ற உண்மை நிலைத்தெளிவு உண்டாகின்றது. இத்தகைய அறிவின் முழுமையில் மனிதன் பிரம்ம ஞானியாகி இறைவனாகவே திகழ்கிறான்.

                  ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
                  தெய்வத்தோ டொப்பக் கொளல்
                                           -திருக்குறள்-702

எனவே மனிதனாக வாழும் எல்லோருமே முடிவாக நோக்கிச் செல்லும் கடை நிலைக் குறிப்பு பிரம்ம ஞானமேயாகும். மனவளக்கலை அல்லது குண்டலியோகம் எனும் வாழ்க்கைவள விஞ்ஞானம் மனிதகுலத்திற்கு அவசியமான அறிவு விளக்கக் கதவைத் திறந்து விட்டுவிட்டது. பயன்பெறுவோம். பயன் பெற விரும்புவோர்களுக்கும் உதவி செய்வோம்.


நன்றியுணர்வு :


அன்பும் கருணையும் உடைய தெய்வ நிலையானது விண்முதல் ஆற்றிவாகி மனித மனத்தின் மூலம் தனது பரிணாமப் பயணச் சரித்திரத்தை உள்ளுணர்வாகக் காட்டிய பேரறிவிற்கு நன்றி கூறுமிடத்து அடைந்த நம்மையே இறைநிலைக்கு அர்ப்பணம் செய்து மகிழ்ச்சியடைவோம்.

 மேலும் உலக வாழ்வில் உயிரினங்களின் உற்பத்திக்கு ஏற்றவகையில் பெண்ணினத்தை வடிவமைத்து எல்லா உயிர்வகைக்கும் அன்பு காட்டி கருணையை வழங்கிக் காக்கும் அந்தப் பேராதார இறைநிலைக்கு நன்றி கூறி மன நிறைவு பெறுவோம்.

  எல்லா உயிர் வகைகட்கும் உணவாகவும் மற்றும் வாழ்க்கை வசதிகளாகவும் சிக்கலில்லாமலும் வரையறை இன்றியும் தங்களது வளர்ச்சியை அர்ப்பணித்து உலகைக் காத்து வருகின்றன தாவர இனங்கள். அத்தகு தாவர வர்க்கங்களை அன்போடும் கருணையோடும் உருவாக்கி இதர உயிரினங்களுக்கு அளித்துள்ள பேரன்புக்காகவும் கருணைக்காகவும் இறைநிலைக்கு நன்றி கூறி அப்பெருமகிழ்ச்சியான பேரின்ப வெள்ளத்தில் திளைப்போம். ஒவ்வொரு நாளையும் இறைநிலையின் அன்பின் ஊற்றுப் பெருக்க நன்னாளாகவே கருதி என்றும் கொண்டாடுவோம்.


இப்படிக்கு

பேரின்ப பெருவெள்ளத்தில்
மிதந்து கொண்டிருக்கும்
இறையுணர்வுத் தொண்டன்
வேதாத்திரி மகரிஷி

காயகல்ப பயிற்சி - விந்து கட்டும் கலை - மரணமில பெருவாழ்வு

அறிமுகம் 

எந்த ஒன்றை அறிந்தால், எல்லா ரகசியங்களையும் தெரிந்து கொள்ளலாமோ அதுதான் கடவுள். கடவுளைப் பற்றி கூறப்படும் புகழ்பெற்ற வாக்கியம் இது. அதேபோல், எந்த ஒரு கலையை அறிந்திராவிட்டால் - எந்த ஒரு சிகிச்சை முறையும், எந்த ஒரு யோகமும், எந்த ஒரு உடற்பயிற்சியும், எந்த ஒரு உணவு முறையும் - முழுப்பலன்  தராதோ அக்கலைதான் விந்து கட்டும் கலையாகும். சித்தர்கள் இதை காயகற்ப யோகம், காயகற்ப பயிற்சி, சுக்கில ஸ்தம்பனம் என பல பெயர்களில் குறிப்பிட்டுள்ளனர்.


இந்திய சித்தர்களால் உருவாக்கப்பட்டு கற்றுகொடுக்கப்பட்டு வந்த காயகற்ப பயிற்சியானது கால ஓட்டத்தில் துண்டு துண்டாக சிதறி பல்வேறு  நாடுகளில் சிறுசிறு பயிற்சிகளாக பயிலப்பட்டு வருகிறது.  மீண்டும் இதற்கு மறுவடிவு கொடுத்தவர் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி ஆவார்.   1911 - ம் ஆண்டு பிறந்த அவர், 40 ஆண்டுகாலம்  தன் கடுமையான ஆராய்ச்சி, உள்ளுணர்வு, சித்தர்களின் நூல்கள், பல அறிஞர்களுடன் உரையாடல்  இவற்றின் மூலம்  மீள் உருவாக்கம் செய்த பயிற்சியே காயகற்பம் ஆகும்.  எல்லா சித்த மருத்துவர்களும், ஆயுர்வேத மருத்துவர்களும் ஏக மனதாக, இப்பயிற்சி  ஒரு உச்சகட்ட யோகபயிற்சி என ஒப்புக்கொள்கிறார்கள். நமது ஐயா மகரிஷி இல்லையேல்  காயகற்ப பயிற்சி இன்றும் ஒரு கேள்விக்குறியாக மாறியிருக்கும். இதில் எவ்வித மருந்தோ, மதமோ .இல்லை.


விந்துவின் முக்கியத்துவம் 

உலகில் எத்தனையோ இனத்தை சேர்ந்த மக்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கிடையே எவ்வளவோ வேற்றுமைகள்   உள்ளன; ஒற்றுமைகளும் உள்ளன. அவற்றில் மிக முக்கியமான ஒற்றுமை என்னவெனில், விந்து திரவத்தை அளவு, முறை இல்லாமல் வீணடிப்பது தான். விந்துசக்தி ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் உற்பத்தி ஆகிறது. பழைய தமிழில் நாதம் என்கிறார்கள். உடலுறவின்போது, இது பெண்களுக்கு விட்டுவிட்டு கசிகிறது. ஆங்கிலத்தில் இதை  Single Orgasm,  Multiple Orgasm என்றும் கூறுகிறார்கள்.

விந்துவை பெரும்பாலான மக்கள் ஒரு அசிங்கமான பொருளாகவே நினைக்கிறார்கள். பாலுறவைப் பற்றி பேச சங்கடப்படுகிறார்கள். இது தவறு. உண்மையில், விந்து எனப்படும் திரவம் ஒரு புனிதப் பொருளாகும். ஒரு மனிதனின் உடல் உறுதி, ஆரோக்கியம், மன அமைதி, மூளையின் ஆற்றல் இவை அனைத்தும் விந்துவை முறையாக செலவழிப்பதிலும், பாதுகாப்பதிலும்தான் அடங்கியுள்ளது.

இந்தியாவின் பாரம்பரிய வைத்திய முறைகளான சித்த, ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி வைத்திய முறைகள் விந்து சக்தியின் மகத்துவத்தை தெளிவாக எடுத்துரைக்கின்றன. ஆனால் தற்கால ஆங்கில மருத்துவர்கள் பெரும்பாலோர் இதற்கு மாறான கருத்தையே முன்வைக்கிறார்கள். இக்கருத்தின்படி நடக்கும் மக்களை இறைவன் காப்பாற்றுவாராக !


உடற்செயலியல் 

ஒரு மின்சுற்றில் ( Circuit )  பாட்டரி அமைந்து, அச்சுற்றில் மின்சாரத்தை பாய்ச்சும் விதம் போலவே, விந்து உடலின் மையத்தில் விந்துப்பையில் அமைந்துள்ளது. எப்படி ஒரு பாட்டரியில் உள்ள ரசாயன திரவமானது அளவிலும் ( Quantity ), தரத்திலும் ( Chemical Composition )  குறைந்தால் - அதிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தின் அழுத்தம் ( Potential ) குறைகிறதோ - அதேபோன்றே அளவிலும் தரத்திலும் குறையும் விந்து மனித உடலில் பாதிப்பை உண்டாக்குகிறது. அதாவது:

விந்து திரவமானது அளவில் குறைந்தாலோ( below the critical limit ), ரசாயனக் கூட்டு சரியான அளவில் அமையாமல் போனாலோ - அதிலிருந்து கிளர்ந்தெழும் காந்த அலைகளின் அழுத்தம் குறைகிறது. இந்த அழுத்த அலைகள் உடல் முழுவதும் பரவி செல்களில் உந்து ஆற்றலாகவும், இழுக்கும் ஆற்றலாகவும் மாறி மாறி செயல்பட்டு உடற்செயல்களை ( Catabolism and Anabolism )  நடத்துகின்றன.  எஞ்சிய காந்த அழுத்த அலைகள் ( the surplus )  மூளையின் வழியாக  Channelize ஆகி தோல், கண், மூக்கு, நாக்கு, காது வழியாக கசிந்து கொண்டே இருக்கின்றது. இவ்வாறு கசியும் காந்த அலைகள் உடலுக்கு வெளியே (புறத்தில்) உள்ள பொருட்களோடு மோதும்போது ஒரு மனிதன் அதை உணர்வாக பெறுகிறான் ( Feeling and Sensation ).


இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது - விந்து திரவம் அளவு குறையும்போதோ, அதில் அமைந்த ரசாயன விகிதம் தவரும்போதோ - அதிலிருந்து  திணிவடைந்து  ஓங்கி எழும் காந்த அலைகளின் அழுத்தம் குறைகிறது. குறைந்த அழுத்தம் பெற்ற அலைகளால் சரிவர நடத்த முடியாமல்,  உடல் உறுப்புகளின் இயக்கம் நாளடைவில் மந்தமாகிறது; மூளை சோர்வடைகிறது. ஐம்புலன்களின் திறன் குறைகிறது.  அளவு என நான் கூறுவது சுத்தமாக தீர்ந்து போவதல்ல. ஒரு குறிப்பிட்ட அளவிற்கு கீழே ( below the critical limit ) போவதையே நான் கூறுகிறேன்.  Surplus ஆக உள்ள திரவத்தை கழிப்பதால் இன்பம்தான்.  விந்துவை ஒரேடியாக அடக்கி வைத்தாலும் மண்டையிடி உண்டாகும்.


எவ்வாறு விந்து நஷ்டமடைகிறது 

பூமி மணிக்கு பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் வேகத்தில் சுழல்வதால், பூமியின் மைய ஈர்ப்பு விசை காரணமாக மனித உடலில் நாடி நரம்புகள் தினம் தினம் தளர்ந்து போகின்றன. உடற்செல்கள் தெறித்தும், உதிர்ந்தும் விழுகின்றன.  இந்நிகழ்ச்சி இளமையில் ஓரளவும், முதுமையில் அதிகமாகவும் நடக்கிறது.  பூமியின் சுழற்சியால் விந்து  நீர்த்து ( Dilution ) போகிறது. நீர்த்துப் போன விந்து வெளியேற வேகம் பெறுகிறது.  இந்த வெளியேற்ற வேகமே காம உணர்வாகும். பொதுவாக நாம் கீழ்க்கண்ட வழிகளில் விந்து சக்தியை செலவழிக்கிறோம் : -

                                                1.   சுய இன்பம்.
                                                2.  தூக்கத்தில் விந்து கழிதல்
                                                3.  உடலுறவு

காம உணர்வு ஓர் எல்லை மீறும்போது உடல் சூடு அதிகமாகிறது.  உடற்சூடு அதிகமானால் விந்து திரவம் நேரடியாக உடலிருந்து ( Evaporate )  ஆவியாகி விடுகிறது. இவ்வாறு,

1.    Dilution
2.    Evaporation

என பொதுவான இரண்டு வழிகளில் நஷ்டமடைகிறது.  வாரம் ஒரு முறையோ, பத்து நாட்களுக்கோ ஒரு முறையோ  உடலுறவில் விந்தை கழிப்பதில் பெரிய தீங்கு ஏதும் இருக்காது என்றே நினைக்கிறேன்.


விந்து சக்தியை அளவு முறையில்லாமல் வீணாக்குவதால் உண்டாகும் தீங்குகள் 

*   உடல் சோர்வு
*   கண் எரிச்சல்
*   மலச்சிக்கல்
*   புத்தியில் தெளிவின்மை
*   சரியான தூக்கமின்மை
*   45 வயதிற்கு மேல் சிறுநீர் பாதை தொடர்பான நோய்கள்
*   வயதான தோற்றம்
*   மனதில் கீழ்த்தரமான எண்ணங்கள்
*  நரம்புத் தளர்ச்சி இன்னும் பல.

நான் என் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் ஆன்மிகம் பற்றி பேசும்போது அவர்கள் கூறுவது : இந்த வயதில் ஆன்மிகம்  எதற்கு?  50, 60 வயதுக்கு மேல் ஆன்மிகம் பேசலாம் என்பதே.  ஆனால் பரிதாபம் என்னவெனில், 50 வயதுக்கு மேல் மனம் நினைக்கும், உடல் ஒத்துழைக்காது, தளர்ந்து விடும்.  மேலும்  உடல் நிலையும் சரசரவென சரிந்து விடும். அதுமட்டுமல்லாமல், பழைய வினைப்பதிவுகள் மீண்டும் மீண்டும் போகத்தை நோக்கியே இழுத்துச்செல்லும்.

சிறு வயதிலிருந்தே காயகல்பம் போன்ற ஏதாவதொரு யோகப்பயிற்சிகளை செய்து வந்தால்தான், வயதான காலத்திலும்  உடல்நலம் இருக்கும். 40, 50 வயதுவரை நன்றாக ஆட்டம் போட்டுவிட்டு, நானும் காயகல்பம் செய்கிறேன் என்று வந்தால்  பலன் குறைவாகத்தான் இருக்கும்.  அதற்காக யாரும் தயங்காதீர்கள். எந்த வயதில் செய்தாலும் அதற்குரிய பலன் கண்டிப்பாக கிடைக்கும்.

காயகற்ப பயிற்சி எவ்வாறு வேலை செய்கிறது?

காயகற்ப பயிற்சியானது,

1.    தினமும் தளரும் நரம்புகளை முறுக்கேற்றி
2.    விந்துவை அதிகப்படுத்தி
3.    விந்துவின் சாரத்தை, விந்துவின்  சுத்த சக்தியை பிரித்தெடுத்து மூளைக்கும், 

       உடற்செல்கள் அனைத்திற்கும்  ஒடச்செய்கிறது.  இதனால் நரம்புகள் வலுவடைந்து விந்து கெட்டிப்படும். இங்கே நீங்கள் கவனிக்க வேண்டியது , நாம் உடலில் சுழற்சி செய்வது விந்து திரவத்தை அல்ல, விந்துவில் அடங்கியுள்ள தூய காந்த அலைகளைதான்.

இப்பயிற்சியால் தங்கள் இல்லற வாழ்வு அதாவது உடலுறவு பாதிக்கப் படுமோ என பலர் நினைக்கிறார்கள். அது  தவறு. காயகற்ப பயிற்சி உடலுறவில் திருப்தியையும் நிறைவையும் தருகிறது.  இதை நீங்கள் அனுபவத்தில்  உணரலாம். உடல் உறுதியும், ஆண்மையும் ஓங்குவதை நீங்கள் கண்கூடாக உணரலாம்.

பயிற்சிக்கு தேவையான் நேரம் காலை, மாலை இருவேளையும்  வெறும் 7 நிமிடங்கள் போதும்.

காயகற்ப பயிற்சியின் பலன்கள் 

1.    சுறுசுறுப்பு
2.    முகப்பொலிவு
3.     மனக்கட்டுப்பாடு, மன அமைதி
4.    நல்ல உறக்கம்
5.    பாலுணர்வு வெறி கட்டுப்படும்
6.    சுய இன்பப் பழக்கம் தானாகவே நின்று விடும்.
7.    மலச்சிக்கல், மூல வியாதி போன்றவை விரைவில் குணமாக உதவும்.
8.    தோல் வியாதிகள் விரைவில் கட்டுக்குள் வரும்.
9.    பெண்களுக்கு மாதவிடாய் , கர்ப்பப்பை தொடர்பான நோய்கள் தீரும்.
10.  ஒழுக்க குணம் இயல்பாகவே உண்டாகும்.
11.  நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைவு , சிறுநீர்ப் பாதை சம்பத்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
12.  விந்துவில் உள்ள குறைகள் சரி செய்யபடுவதால் நல்ல ஆரோக்யமும்,புத்திகூர்மையும்          
       கொண்ட குழந்தைகள் பிறப்பார்கள்.
13.  மரணத்தை தள்ளிப்போடலாம். காயகற்ப பயிற்சியை தொடர்ந்து செய்துவந்தால், முதிய 
       வயதில் சிரமமில்லாமல்  உயிர்பிரியும் என வேதாத்திரி மகரிஷி ஒரு புத்தகத்தில் 
      குறிப்பிட்டுள்ளார்.

விந்துவில் அடங்கியுள்ள சத்துப் பொருட்கள் 

                     விந்து திரவத்தில் 20-க்கும் மேற்பட்ட வைட்டமின்கள, மினரல்ஸ், புரோட்டின்கள் அடங்கியுள்ளன. அதனால்தான், ஒருதுளி விந்து ஒரு மனித ஜீவனையே உருவாக்கும் ஆற்றல் பெற்றதாகவும், காயகற்ப பயிற்சியின்  பலன் மிக அதிகமாகவும் உள்ளது.

காயகற்ப பயிற்சியை எங்கே கற்றுக் கொள்ளலாம்?

                தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் நிறுவிய 'உலக சமுதாய சேவா சங்கத்தின்'  கீழ்வரும்  மனவளக்கலை மன்றங்கள்,  அறிவுத் திருக்கோயில்கள்  எல்லா ஊர்களிலும், வெளிநாடுகளிலும் கூட உள்ளன. அங்கு கற்றுக் கொள்ளலாம்.

அனுபவமும்,  காயகற்ப பயிற்சியின் நுணுக்கங்களும் நன்கறிந்த மனவளக்கலை ஆசிரியர் மூலம் கற்பது மிகச் சிறப்பு. 

தொடர்புக்கு
அ .செந்தில் குமார் 
மனவளக்கலை மன்ற பேராசிரியர்,
நச்சாந்துபட்டி  தவமையம் (ஐயப்பன் கோயில் பின்புறம்)
புதுக்கோட்டை மாவட்டம்
தமிழ் நாடு> இந்தியா 

செல் - 96554 72931


மனிதன் மனிதனாக வாழ சிறப்பு பயிற்சிகள் (யோகா வகுப்பு )

மனிதன் மனிதனாக வாழ சிறப்பு பயிற்சிகள்

வாழ்க வளமுடன்
உடல் நலத்திற்கு    -  எளியமுறை
                                            உடற்பயிறசி
உயிர் வளத்திற்கு   - காயகல்ப பயிற்சி
 மனஅம‌ைதிக்கு     -  தியானபயிற்சி
 மனவளத்தி்ற்கு      - அகத்தாய்வு
சமுதாய  உயர்வுக்கு  -  நான் யார்
                                               விளக்கம்
            சிறப்பு பயிற்சி வகுப்புகள்
அகத்தாய்வு முதல் நிலை,
அகத்தாய்வு இரண்டாம் நிலை,
அகத்தாய்வு மூன்றாம் நிலை மற்றும்
அகத்தாய்வு நான்காம் நிலை. 
காயகல்பம்,
பிரம்ம  ஞான விளக்கம்,
மாணவர்களுக்கான  திறனூக்கப்பயிற்சி மற்றும்
 முழுமை நலவாழ்வுக்கு மனவளக்கலை யோகா சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். 

முகவரி


அ.செந்தில் குமார்
மனவளக்கலை பேராசிரியர் மற்றும் இயற்கை வாழ்வு ஆலோசகர் 
இராம. சிங்காரவடிவேலன் இல்லம்
நச்சாந்துபட்டி தவமையம் 
ஐயப்பன் கோயில் பின்புறம்
திருமயம் தாலூகா
புதுக்கோட்டை மாவட்டம் - 622404.

செல் - 96554 72931.

27 ஜன., 2017

காயகல்ப வகுப்பு

                  புதுக்கோட்டை மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை நச்சாந்துபட்டி தவமையம் குலமங்கலம் கிராமத்தில் 21/12/2016 அன்று நடைபெற்ற காயகல்ப பயிற்சியில்  கலந்து கொண்ட பயிற்சியாளர்களும் வகுப்பு எடுத்த பேரா.முருகேசன் மற்றும்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு  பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்குகிறார் திருமயம் மனவளக்கலை மன்றம் பொறுப்பாசிரியரும் SKY பேராசிரியருமான அருள்நிதி சிவகாமி சுப்பிரமணியன்.








இரண்டாம் நிலை அகத்தாய்வு

                        புதுக்கோட்டை மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை நச்சாந்துபட்டி தவமையத்தில் 24 & 25/12/2016 அன்று நடைபெற்ற இரண்டாம் நிலை அகத்தாய்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்குகிறார் திருமயம் மனவளக்கலை மன்றம் பொறுப்பாசிரியரும் SKY பேராசிரியருமான அருள்நிதி சிவகாமி சுப்பிரமணியன்.





காயகல்ப பயிற்சி

                 புதுக்கோட்டை மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை நச்சாந்துபட்டி தவமையத்தில் 26.01.2017 நடைறெ்ற காயகல்ப பயிற்சியில் கலந்து கொண்ட பயிற்சியாளர்கள். இப்பயிற்சி வகுப்பு நடத்திய புதுக்கோட்டை அ/நி. குணசீலன் மற்றும் நச்சாந்துபட்டி தவமையம் பொறுப்பாசிரியர் பேர.அ.செந்தில் குமார் அவர்கள் பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கிய நிகழ்வு.