9 அக்., 2024

குழந்தை பாக்கியம் கிடைக்க எளிய மந்திர வழிபாடு

 குழந்தை செல்வம்

    குழந்தைகள் ஒரு வீட்டில் இருந்தால் அந்த வீடு எப்படி மாறுதலும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும் என்பது அதை உணர்ந்தவர்களுக்கு தெரியும்.



குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்                                                                                           -திருக்குறள்- 

    குழந்தை செல்வம் இல்லை என்றால், அவர்களின் பிறவிப்பயன் கிட்டுவதில்லை என்பார்கள். திருமணமான தம்பதியர் தங்களுக்கு நெருக்கம் தொடங்கியதும் ஒரு வாரிசை, பிள்ளை கனி அமுதிற்காக எதிர்பார்த்து கனவு காண்பது இயற்கையானதேஅந்த கனவு நினைவாகி பிள்ளையை தங்களின் கையில் அள்ளி எடுக்கும் போது தாய், தந்தையர் அடையும் ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை.

    வேத சாஸ்திரங்களின் புத்திர பாக்கியத்தின் பெருமையை எடுத்துக் காட்டுகிறதுஒருவர் அவரின் கர்ம வினைகளின் காரணமாக தான் பிறக்கின்றான். அந்த கர்மா தீர ஒரு பிள்ளை வேண்டும் என்பதால் திருமணம் செய்து கொள்கின்றான்.

    சாஸ்திரங்களில், பும் நாம நரகாது த்ராயதே இதி புத்ரா:” என சொல்லப்படுகிறது. அதாவது, “தன் தகப்பனின் ஆத்மாவை புத் என்ற நரகத்திலிருந்து காப்பாற்றுகிறார்என்பதால்தான் புத்திரன் என்று குறிப்பிடப்படுகிறதுபொதுவாக புத்திரன் என்றாலோ ஆண் பிள்ளை என்று குறிப்பிடப்பட்டாலும், பிருஹத் ஜாதகம் போன்ற நூல்களில் புத்திரன் என்பதற்கு ஆண், பெண் இருவரையும் குறிப்பதாக அமைந்துள்ளது.

5ஆம் பாவம்:

      ஒரு ஜாதகத்தின் 5ஆம் பாவம் பூர்வ புண்ணிய மற்றும் பிள்ளை செல்வம் பெறக் கூடிய பாவம். நம் ஜோதிட அறிஞர்கள் பூர்வ புண்ணியத்தையும், புத்திர பாக்கியத்தையும் ஒரே ஸ்தானத்தில் வைத்தது தான் மகரிஷிகளின் மகிமை நமக்கு புரிகிறது. ராசி மண்டலத்தில் 5ஆம் பாவமாக அமைவது சிம்மம். அதன் அதிபதி சூரியன். இவரே தந்தைக்கான காரகனாக அமைகிறார்.

    பூர்வ புண்ணியங்கள் சிறப்பாக இருந்தால் தான் புத்திர பாக்கியம் கிடைக்கும். அடுத்த பிறவியில் குழந்தை செல்வம் பெற இந்த பிறவியில் ஓரளவு நல்ல காரியங்களை செய்ய வேண்டும் என்பது விதி.
பாக்கிய ஸ்தானமாக 9ஆம் பாவம் குறிப்பிடப்படுகிறது. ஒன்பதாம் ஸ்தானமாக அமைவது தனுசு அதன் அதிபதி குரு புத்திர காரகன். 5ஆம் பாவமான சிம்மத்திலிருந்து 5ஆம் இடமாக இருப்பது 9ஆம் பாவம் என்பது குறிப்பிடத்தக்கதுஆக ஒருவரின் புத்திர பாக்கியமான 5ஆம் ஸ்தானமும், பாக்கிய ஸ்தானமான 9ஆம் பாவம் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.

குழந்தை பாக்கியத்திற்கான மந்திரம்:

        குழந்தையின்மை என்பது ராமாயண காலத்திலேயே இருந்துள்ளது. தசரதர் தனக்கு குழந்தை இல்லை என்பதை, அந்த குழந்தை பாக்கியம் பெற குரு வசிஷ்டரின் ஆலோசனைப் படி ரிஷ்யசிருங்கரை அழைத்து புத்திரகாமேஷ்டி யாகம் செய்ததாக ராமாயணத்தில் குறிப்பிடபட்டுகிறது.

        குழந்தை பாக்கியம் பெறுவதற்கான உகந்த மந்திரம் சந்தான கோபால மந்திரம். இந்த மந்திரத்தை ஜெபிக்க தொடங்குவதற்கு முன் தம்பதிகள் அவர்களின் ஜாதகத்தை ஒரு நல்ல ஜோதிடரிடம் காண்பித்து 5ஆம் பாவம், 9ஆம் பாவத்தின் நிலையை பரிசீலித்து அதற்கேற்ப மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்குழந்தை கண்ணனை வழிபடும் விதமாக இந்த சந்தான கோபால மந்திரம் அமைந்துள்ளது.




மந்திரம்:

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்ளெம்

தேவகி ஸுத கோவிந்தா: வாசுதேவ ஜகத்பதே

தேஹிமே தனயம் கிருஷ்ணா த்வாமஹம் சரணம் கத:

தேவ தேவ ஜகந்நாதா கோத்ர வ்ருத்திகர ப்ரபோ

தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ்பந்தம் யசஸ்விமம்

பொருள்:

    இந்த மந்திரத்தில் தேவகி மைந்தனாக இருக்கக் கூடிய வாசுதேவனே, உலகத்துக்கெல்லாம் பதியாக இருக்கக் கூடியவனே, எனக்கு நல்ல குழந்தை கிடைக்க உன்னை நான் சரணடைகின்றேன். தேவர்களுக்கெல்லாம் தேவனே, ஜகன்நாதரே என் குலம் விருத்தி அடைய எனக்கு சீக்கிரம் தீர்க்காயுளுடன் கூடிய நல்ல குணங்களுடன் கூடிய பிள்ளையைக் கொடுப்பாயா என வேண்டுவதாக இந்த மந்திரங்கள் அமைந்துள்ளன.

    குழந்தை செல்வம் பெற வேண்டுவோர் மேற்கண்ட ஸ்ரீ சந்தான கோபால மந்திரத்தை தினசரி காலையில் பக்தி சிரத்தையுடன் 16 முறை பாராயணம் செய்து வெண்ணெய் நெய்வேத்தியம் செய்து சந்தான கோபாலனை வழிபட்டு வெண்ணையை தம்பதிகள் வெறும் வயிற்றில் அருந்த விரைவில் குழந்தை செல்வம் பெறுவார்கள்.

யோகக் கலையில் குழந்தை பாக்கியம்:

    அருகிலுள்ள மனவளக்கலை யோகா மன்றங்களில் காயகல்ப யோகப்பயிற்சி எனும் அற்புதமான கலை கற்றுக் கொடுக்கப்படுகிறது இதை கற்றுக்கொண்டு தம்பதிகள் இருவரும் செய்து வரும்பொழுது சிறப்பான, விரைவான, அறிவில் சிறந்த குழந்தை பிறக்கும்.

16 செப்., 2020

குழந்தை பேறு

                                                   


                                                குழந்தை பேறு


திருமணமான தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்றால் அவர்களுக்குள் இருக்கும் மன அழுத்தம் சொல்லி மாளாது. அவர்களுக்காகவே தன்வந்திரி தமது வைத்திய காவியம் என்னும் நூலில் குழந்தை வரம் கிடைக்க வழிவகை சொல்லியிருக்கின்றார்,

வாறான மங்கையர்கள் கெற்பமாக
        வறையுறேன் பசும்பாலும் வசம்புதானும்
நீறான விழுதியிலை மூலிதானும்
        நிலையான குப்பமேனி சமனாய்க்கூட்டி
காறான பால்தனிலே குழப்பியேதான்
        கனமாக விருவேளை கொண்டாயானால்
சேறான கிருமியது அற்றுப்போகும்
        செனிக்குமே பிள்ளையது செனிக்கும்பாரே.

செனிக்குமது பிள்ளையது பிறக்கும்பாரு
        தெளிவாகும் திரேகமது சொலிக்கும்பாரு
கனிக்குமே யிந்தமுறை பொய்யாதையா
        காசினியி லாருந்தான் சொல்லமாட்டார்
வனிக்குமே முறையோடே செய்தாயானால்
        மகாகோடி புண்ணியங்க ளெய்தும்பாரு
பனிக்குமே யிக்காவிய மதீதவித்தைப்
        பாடினேன் தன்வந்திரி பாடினேனே.

பசும்பால், வசம்பு, விழுதியிலை, குப்பைமேனி இவைகளை சம அளவாக சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்தக் கலவையை பசும்பாலில் கலந்து  காலை, மாலை உண்டு வர, கர்ப்ப கிருமிகள் நீங்கி குழந்தை பேறு உண்டாகும்.

இப்படி பிறக்கும் குழந்தையின் உடல் பொலிவாக இருப்பதுடன், சிறந்த புத்திசாலியாகவும் இருக்கும். மிகவும் அரிதான இந்த முறையை மற்றவர்கள் மறைத்து வைப்பார்கள். தன்வந்திரி இதனை பொதுவில் வைக்கிறேன். இது பொய்க்காது.

என்ன… அன்பர்களே… தன்வந்திரி சித்தரின் வைத்தியம் செய்து மழலை செல்வங்களை ஈட்டுங்கள். சந்தேகம் ஏதேனும் இருப்பின் சித்த வைத்தியரை தொடர்புகொள்ளுங்கள். விழுதியிலை என்பது என்ன? அதனை தக்கவரிடம் கேட்டு அறிந்துக்கொண்டால் மற்றது எளிதாகக் கிடைக்கூடியதுதான். செய்து பாருங்கள்… பலன் கிடைத்தால் மறக்காமல் பிறருக்கும் சொல்லுங்கள். உங்களுக்கு மகாகோடி புண்ணியம் கிடைக்கும்.




5 ஆக., 2020

காம ரகசியம் 12 - உடலுறவு/காமம் என்பது மனித சந்ததி விருத்திக்காக மட்டுமா?




இன்றைய காலத்தில் தாந்திரா என்ற வார்த்தை மிகவும் கவர்ச்சிகரமான ஒன்றாக பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக மந்திர தந்திரம் என்பவற்றோடு சேர்த்து தாந்திரீகம் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இன்னொரு புறத்தில் மேற்கத்தையவர்கள் தாந்திரீக யோகத்தினை காமம், உடலுறவுடன் தொடர்புடைய ஒரு யோகம் ஆக பிரச்சாரப்படுத்தி வருகின்றன. உண்மையில் தாந்திரீகம் மற்றைய வழிகள் போலல்லாது மனிதவாழ்க்கையில் உள்ள அனைத்தையும் இயல்பாக ஏற்றுக்கொண்டு விழிப்புணர்வு அடையும் நிலையினை போதிப்பது. ஆகவே தாந்திரீகத்தில் காமமும் ஒரு பகுதி, ஆனால் காமம்தான் தாந்திரீகம் இல்லை.

தாந்திரீகம் கொள்கைகளை நம்பிக்கொண்டு நம்பிக்கை அடிப்படையில் கற்பனை செய்யும் மதம் அல்ல, மாறாக எந்த நிலையில் உள்ளவரையும் சுய அனுபவத்தின் மூலம் உயர் நிலையினை அனுபவிக்க செய்கிறது. அந்த அடிப்படையில் மனித உடலின் ஒரு அத்தியாவசிய தேவையான உடலுறவு மூலமும் இறைவனை அடையும் வழியினையும் காட்டுகிறது. காதல் செய்வது ஒரு பூஜையாகவும் வழிபாடாகவும் ஆக்கும் செய்முறையினை சொல்லித்தருகிறது. அது வாழ்வை ஒரு இன்பமான பரிசாக பார்க்கிறது. தாந்திராவின் படி வாழ்க்கையின் அனைத்துமே உங்களுக்கு ஞானத்தினை கற்பிக்கக்கூடியது. வாழ்வின் எந்த ஒரு பகுதியினையும் விட்டுவிட்டு ஓடத்தேவையில்லை. தாந்திரா மூலம் மெதுமெதுவாக தெய்வீக ஒளியினை நம்முள் காணும் தன்மையினை பக்குவத்தினை பெறுவோம். தாந்திரீக சாதகன் தன்னுடைய புலன்களை, மனதை, ஆன்மாவினை மெது மெதுவாக உயர்த்தி பேரின்பத்தில் ஒன்றும் தன்மையினை பெறுவான்.

தாந்திரீகத்தின் படி ஆணும் பெண்ணும் ஒரே வெளிப்பாட்டின் விம்பங்கள் போன்றவர்கள், பிரபஞ்ச ஆற்றலில் ஆண் தன்மையினை சிவம் என்றும் பெண் தன்மையினை சக்தி என்றும் அழைப்பர். இதனை தாவோயிசத்தில் யிங் - பெண், யங் - ஆண் சக்தி. இந்த சக்தி ஒருவனில் எப்போது குறையாகவே காணப்படும். இது பூரணப்படும் போது ஒருவனுக்கு பிறப்பு இறப்பாகிய சுழற்சியில் இருந்து விடுதலை கிடைக்கிறது. இந்த விடுதலை நடைபெறும் போது அவனே இறைவன் ஆகிறான். ஆக தாந்திரீக சாதனை மூலம் ஒருவன் தனது உடலில் உள்ள பிரபஞ்ச சக்திகளை பூரணப்படுத்த முயல்கிறான், அதற்கு உடலுறவும் ஒரு சாதனமாக பயன்படுத்தலாம். இதுவும் தாந்திரீகத்தில் ஒரு வழியே அல்லாமல், இதுதான் ஒரு வழி அல்ல என்பதனை கவனியுங்கள்.

தாந்திரா மனித உடலில் ஏற்படக்கூடிய அடிப்படை உந்தலை உயர்ந்த நோக்கத்தினை அடைவதற்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறது. அதனுடன் சண்டை பிடிக்காமல் ஒத்துப்போய் அதனை வைத்தே அதை வெல்லும் சூட்சுமத்தினை சொல்லிக்கொடுக்கிறது. ஏனெனில் மனித மனத்தை ஆட்டுவிக்கும் உணர்ச்சிகளில் மிகவும் சக்தி வாய்ந்ததும் வெல்லுவதற்கு கஷ்டமானதும் காமம் ஆகும். அத்தகையவனுடன் சண்டை போடாமல், நட்புடன் அவனது உதவியை பெற்றுக்கொண்டு எமது வேலையை முடிப்பது இலகுவான வழி அல்லவா? அதே போல் இந்த வழியில் கவனமும் தேவை, பெரும் அதிகாரத்தில் உள்ள பலமானவருடன் நட்புக்கொண்டுவிட்டு எமது பக்குவமின்மையால் பகைத்துக்கொண்டால் ஏற்படும் நிலையும் உண்டு என்பதனை மனதில் கொள்ளவேண்டும். பலர் இதற்கு பயந்துதான் இதனை செய்யக்கூடாது ஆபத்தான வழி என்று ஒதுக்கி விட்டார்கள். இது ஆபத்தான வழி இல்லை, நாம் பக்குவம் இல்லாவிட்டால் வாழ்க்கையில் நடக்கும் எல்லாம் ஆபத்துதான், உதாரணமாக இன்றைய வாகன நெரிசலில் வீதியில் நாம் சற்று கவனம் தப்பினாலும் உயிராபத்திலோ அல்லது உடல் ஊனத்திலோ கொண்டு போய் விட்டுவிடும். இதில் நாம் கவனமாக நடப்பது போன்றே இந்த வழியும். அதுபோல் தனது செய்கைகளால் ஏற்படும் விளைவுகளுக்கு தான்தான் காரணம் என்று மனவலிமையுடன் பொறுப்பினை ஏற்கமுடியாத கோழைகளும் இந்த வழியில் ஈடுபடமுடியாது. இவை எல்லாம் குருவருளாலே சாதகனுக்கு கைகூடும். தாந்திராவில் குரு சிஷ்ய உறவு மிக முக்கியமானது.

முக்தியின் இலக்கு பரப்பிரம்மத்துடன் இணைதல், சாதாரண நிலையில் இதனை அனுபவிக்கும் ஒரு மாதிரியினை தாந்திரா சொல்லிக்கொடுக்கிறது. விண்வெளிக்கு செல்பவர் செல்வதற்கு முன்னர் பூமியிலேயே அதற்குரிய சூழலை உருவாக்கி அவரை தயார்படுத்துவது போல் பிரம்மத்துடன் இணையும் நிலையினை உடலில் இருக்கும் போது உடலுறவின் போதே அனுபவிக்கச் சொல்லிக்கொடுக்கிறது. இதனை விளங்கிக்கொள்வதற்கு காமத்தின் மீதான மனப்பாங்கு முக்கியமான ஒன்றாகும்.

முதலாவது தாந்திரீகத்தினை மறுக்கும் ஆன்மீகர்களின் கூற்று "உடலுறவு காமம் என்பது மனித சந்ததி விருத்திக்காக மட்டுமே" இதில் மட்டுமே என்பதனை தர்க்க ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாமைக்கு யதார்த்த உண்மைகள் சில காணப்படுகின்றன. இன்றைய காலகட்டத்தில் ஒருவருக்கு இரண்டு பிள்ளைகளுக்கு மேல் இருப்பதில்லை, அப்படியானால் வாழ்க்கையில் இரண்டு தடவைதான் உடலுறவு கொள்ளவேண்டும் என்றல்லவா அர்த்தப்படுகிறது. இப்படியான கருத்தால் பெரும்பாலானவர்கள் தாம் ஆன்மீகத்திற்கு தகுதியற்றவர்கள் என்ற தாழ்வுமனப்பான்மையில் தமது ஆத்ம சக்தியினை அழித்துக்கொள்கிறார்கள். பலர் பூர்வ ஜென்ம விளைவாக ஆன்மீக தாகம் இருக்கும், ஆனால் இந்தப்பிறப்பில் இப்படியான கருத்துக்களை மனதில் போட்டுக்கொண்டு அதே நேரம் அவர்கள் விதிப்பயனாக அமைந்த மனைவி, மக்களுடன் சந்தோஷமாக வாழ இயலாமல், இப்படியான தாழ்வு மனப்பான்மைகளுக்குள் சென்று வாழ்வை துன்பமாக்கிக்கொண்டிருப்பார்கள்.

அப்படியானால் இந்தக்கூற்று உண்மையா இல்லை? உண்மை அதேவேளை முற்றும் உண்மை இல்லை, இதற்கு பதிலாக தாந்திரீகம் சொல்கிறது, ஆமாம் உனது சந்ததி விருத்திக்கு உடலுறவை பயன்படுத்திக்கொள், அதன் பின்னரும் உனது மனம் அதில் நாட்டம் பெற்றால் அதனை மிருக இச்சையாக இல்லாமல் ஒரு வழிபாடாக்கி உயர்ந்த பண்பு மாற்றத்தினை உண்டு பண்ணிகொள்ளலாம் என்று கூறுகிறது. இதன் படி சாதாரணமானவனும் தாழ்வு மனப்பான்மை கொள்ளாமல் தன்னை உயர்த்திக்கொள்ளும் வழிமுறையினை போதிக்கிறது.

இதுவரை இந்த கட்டுரைகளை பொருமையாக படித்தமைக்கு நன்றி மேலும் இதில் புரியாத வார்த்தைகள் இருப்பின் ஒருமுறைக்கு இரண்டு முறைக்கு மேல் வாசித்து பாருங்கள் புரியும் நன்றி வாழ்க வளமுடன்.

காம ரகசியம் முற்றும்




1 ஆக., 2020

காம ரகசியம் 11 - உடலுறவையே பிரம்மச்சரியமாக்கும் தாந்திரீக பயிற்சி



தாந்திரீகம் பிரம்மச்சரியத்தை அணுகுவதில் நேரடியான வழியினை காட்டுகிறது, மற்றைய யோகங்கள், ஆன்மீக வழிகள் சுற்றுப்பாதையினைதான் காட்டுகின்றன. அந்த வகையில் தற்கால உலகில் யோகம் என்பது உடலினை நன்றாக வைத்திருக்க உதவும் ஒருவித உடற்பயிற்சி என்ற வகையில் நின்றுவிடுகிறது. இன்று யோகம் படிப்பிக்கிறேன், யோகாசனம் செய்கிறேன் என்பவர்களுக்கு தமது உடல் நலம் நன்றாக இருப்பதற்கும், நீரிழிவு இல்லாமல் போவதற்கும் என கூறுகின்றார்கள். இதன் ஆழத்தில் எமது சித்தர்கள் வகுத்து வைத்ததன் தேவை மனிதன் தனது நிலையில் இருந்து மேலான நிலை ஒன்றினை அடைவதற்கான வழிமுறையினை காட்டுவதற்கே! ஆனால் அவை என்னவென்பதனை அறியும் சாவிகளை நாம் இழந்துவிட்டோம்.

இந்தப்பதிவில் காம எழுச்சியினையும் விந்து சக்தியினை உயர்ந்த சக்தியாக்கும் செயல் முறையினையினதும் அடிப்படையினை பார்ப்போம். இந்த பதிவின் நோக்கம் இப்படியொரு அரிய அறிவு இருக்கின்றது என்பது மட்டுமே. செய்முறை முயற்சிகள் இதன் மூலம் விளக்க இயலாது என்பதனை அன்பர்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன். மேலும் ஆணின் உடல் சக்தியியக்கவியல் பார்வையே இதில் தரப்பட்டுள்ளது. இந்த விடயம் ஒரு ஆழமான சமுத்திரம் போன்றது விரிவாக விளக்கி எழுத முயன்றால் ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுத வேண்டி இருக்கும், இந்த பதிவின் நோக்கம் இது பற்றிய அடிப்படையினை சுருங்க கூறுவதே!

காம எழுச்சி பொங்குதலும் அதனை கட்டுப்படுத்தி உயர்ந்த சக்தியாக்குதலும் சீரான மூச்சின் மூலமும், மனதின் எண்ண செய்முறை மூலமும் நடைபெறுகிறது. விந்தினை செயலூக்கம் உடைய சக்தியாக மாற்றும் செய்முறைக்கு சரியான உணவுப்பழக்கம், ஆரோக்கியமான வாழ்க்கைமுறை என்பன அவசியமான ஒன்றாகும். ஒரு ஆண் தன்னுணர்வுடன் மூச்சினை அல்லது மனதினை அவதானிக்கும் ஆற்றல் பெற்றவன் உடலுறவின் போது தனது இச்சைபடி விந்தினை வெளியேற்றும் ஆற்றல் பெறுவான். இப்படிபெறும் ஆற்றல் மூலம் அந்த விந்தின் ஆற்றலை உயர்ந்த சக்தியுடைய ஆற்றலாக உருமாற்றம் செய்துகொள்ளலாம்.

காலச்சக்கர தந்திரத்தின் படி "மூச்சு, எண்ணம், விந்து ஆகிய மூன்றும் மனிதனிடமுள்ள தெய்வீக பொக்கிஷங்களாகும். இந்த மூன்றும் இணக்கமாய் ஒருவனில் செயற்படவேண்டும். உணர்வுடன் கட்டுப்படுத்தப்படவேண்டும். யோகியானவன் உண்மையில் இந்த மூன்று விடயங்களையும் ஒரே அதிர்வில் நிர்வகிக்ககூடிய ஆற்றலைப்பெறும் போதே உண்மையான யோகி ஆகிறான். இந்த மூன்றினதும் ஐக்கியம் ஏற்படும்போது அவன் உணர்வு கடந்த பேரின்ப நிலையினை அடைகிறான்" எனக்கூறப்பட்டுள்ளது.

கோரக்க சம்ஹிதையில் "ஒருவனுடைய மூச்சு ஒழுங்கற்று இருக்குமானால் அவனது விந்தும் கலங்கி ஒழுங்கற்று இருக்கும்,மூச்சு அமைதியாகும் போது விந்தும் அமைதியாக வலிமையாகும், மூச்சும் விந்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது" எனக்கூறப்பட்டுள்ளது.

உடலில் உள்ள பஞ்ச பிராணன்கள் எனப்படும் உயிர்த்தன்மைகளில் பிராணன் என்பதும் அபானன் என்பதும் முக்கியமானவை. பிராணனின் பிரதான செய்முறை உடலினுள் உயிர் சக்தியினை இழுப்பது. அபானனின் பிரதான செய்முறை சுரப்புகளை, உயிர் சக்திகளை, கழிவுகளை வெளித்தள்ளுவது. அபானன் உடலில் இருந்து கழிவுகளை மட்டும் வெளியேற்றுவதில்லை, உயிர் சக்தியினையும் வெளியேற்றுகிறது. அது உயிர்சக்தியினை வெளியேற்றும் செய்முறை விந்து வெளியேறல் மூலம் நடைபெறுகிறது. இதனை கட்டுப்படுத்தி உயர்ந்த சக்தியாக்கிக்கொள்வது எப்படி என்பதினைப்பற்றியே சித்தர்களும், தாந்திரீகரகளும் ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கின்றார்கள்.

விந்து வெளியாதலை கட்டுப்படுத்தி அபானனின் செய்முறையினை எதிர்திசையில் செலுத்துவதே தாந்திரிக உத்திகள் ஆகும். பழைய தந்திர நூற்களிலும், சித்தர்களுடைய நூற்களிலும் விந்து மேல் நோக்கி சென்று மூளையினை அடையும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை நம்பிய பலர் விந்தினை வலுக்கட்டாயமாக அடக்கி விந்து மேலே போகும் என்று பலவித உபத்திரவங்களை அடைந்திருக்கிறார்கள். விந்து மேலே செல்வதுற்கு பௌதீகமாக எந்த குழாய்களே, நரம்புகளோ, சுற்றோட்ட தொகுதிகளோ இல்லை. அப்படியானால் இது எப்படி சாத்தியம்? இதனை விளங்கப்படுத்துவதற்கு பதங்கமாதல் என்ற பதம் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

இரசாயனவியலில் பதங்கமாதல் என்றால் திண்ம நிலையில் உள்ள பொருள் குறித்த வெப்ப அழுத்த நிலையில் திண்மமாக உள்ள பொருள் ஆவியாகும் நிலையினை அடைதலை குறிக்கும். இதைப்போன்ற ஒரு செய்முறைதான் தந்திரீக யோக பயிற்சிகளில் விந்திற்கு நடைபெறுகிறது. அதாவது ஆரம்பத்தில் சூஷ்ம உடலில் உருவாகும் விந்து ஸ்தூல உடலில் சேர்கிறது, இதனை தாந்திரீக பயிற்சிகள் மூலம் மீண்டும் அவற்றை சூஷ்ம உடலின் வேறான உயர்ந்த பகுதிகளுக்கு மனதினதும் உணர்வினதும் உதவி மூலம் செலுத்தி பயனைப்பெறலாம். இதனை இன்னும் விரிவாக விளங்கிகொள்வோம்.

இயற்கையின் படைப்பில் மனித உடலில் விந்து இன்னொரு உயிரினை படைப்பதற்கும், புலன்களீனூடான உச்ச இன்பத்தினை அனுபவிக்கும் இடங்களில் (மூலாதாரம், சுவாதிஷ்டானத்தில்) மட்டுமே உருவாக்கம் பெறுகிறது, அந்த சக்தியினை சரியான முறையில் பயன்படுத்தி எமக்கு வேண்டிய மற்றைய சக்தியாக உயர் ஆதாரங்களுக்கு செலுத்து அவற்றின் பலன்களை பெற்றுக்கொள்ளலாம். இதுவே தாந்திரீக பயிற்சிகளில் பிரம்மச்சரியத்தின் குறிக்கோள். இதனை பௌதீகமாகவே சாதிக்க இயலாது, அதாவது விதைப்பையில் இருக்கு ஸ்தூல விந்தினை அப்படியே இரத்தம் ஒடுவது போல் நாடி நாளங்களுக்குளூடாக மூளைக்கு செலுத்தி மூளையினை வலுப்படுத்த இயலாது. இதனை பதங்கமாக்கி அதாவது சூஷ்ஷுமப்படுத்தி சூஷ்ம உடலில் செலுத்தி பின்னர் உடலின் குறித்த பகுதிக்குள் சேர்ப்பதன் மூலம் பல ஆற்றல்களை பெறலாம். இதற்காக அமைந்த உத்திகளே ஆதாரங்கள் எனப்படும் சக்கரங்கள்.

இனி இதனை உடலுறவில் சாதிப்பது எப்படி என்பதினைப்பற்றி சுருக்கமாக பார்ப்போம். மேலே உயிர்சக்தியினை ஆகர்ஷிப்பது பிராணன் என்றும் வெளித்தள்ளுவது அபானன் என்றும் பார்த்தோம். இதற்கும் உடலுக்குமான தொடர்பு மூச்சின் மூலம் ஏற்படுத்தப்படுகிறது. உள்மூச்சு பிராணனால் கட்டுப்படுத்தப்படுகிறது, வெளிமூச்சு அபானனால் கட்டுப்படுத்தப்படுகிறது. நன்றாக அவதானியுங்கள் அபானன் விந்தின் வெளியேற்றத்துடனும் வெளிமூச்சுடனும் தொடர்புடையது என்பதினை சித்தர்கள் அறிந்துள்ளார்கள். வெளிமூச்சினை கட்டுப்படுத்த மனிதனால் முடியும், அதன் மூலம் அபானனைக் கட்டுப்படுத்தி விந்தினை கட்டுப்படுத்த முடியும். இதுதான் பிரணாயாமத்திற்கும் விந்தினை உயர் சக்தியாக்கும் செய்முறைக்குமான தொடர்பு. பிரணாயாமத்திற்கும் இதற்கும் மிகுந்த தொடர்பு உள்ளது. அதனை வேறொரு பதிவில் விளக்குவோம். தற்போது பிரணாயாமத்தில் என்ன நடைபெறுகிறது என்று விளங்கி இருக்கும் என நம்புகிறோம்.

தற்போது உடலுறவின் போது எப்படி மூச்சின் உதவி கொண்டு விந்தினை உயர்ந்த சக்தி ஆக்குவது என்பது பற்றி பார்ப்போம். உடலுறவின் போது மூச்சின் அசைவு சீரானதாக இருக்க வேண்டும். அத்துடன் மனதில் சக்தி உயர்ந்த நிலைக்கு செல்வதாக பாவிக்க வேண்டும். இதன் மூலம் விந்தில் உள்ள உயர்ந்த சக்தி பதங்கமாகி மனம் செலுத்தும் இடத்திற்கு செல்வதுடன் ஸ்தூல விந்து வெளியேறினாலும் சக்தி சூஷ்ம உடலினுள் உறிஞ்சப்பட்டிருக்கும், இதனால் சக்தி இழப்பு ஏற்படாது. இந்த சக்தி சாதகனில் வேறொரு உயர்ந்த சக்தியாக பாவிக்கப்படலாம். இதன் மூலமே காமமும் யோகமாகும். இதை பயிற்சிக்கும் குடும்பஸ்தனும் பிரம்மச்சாரியே ஆவான்.

இதன் செயல்முறையினை விரிவாக நாம் இங்கு விளக்குவதற்கு இயலாது விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்.

காம ரகசியம் தொடரும்...

காம ரகசியம் 10 - காமத்தினை/உடலுறவினை சாட்சி பாவம் ஆக்கும் பயிற்சி




காம எண்ணம் மனதில் தோன்றும் போது மனதை அதிலிருந்து விலக்கி பார்வையாளனாக்குங்கள். இதனை சாட்சி பாவம் என்பார்கள். இந்த வார்த்தை ஆன்மீகத்தில் மிக முக்கியமான ஒரு சொல். இதனை சரியாக புரிந்துகொண்டு பயிற்சி செய்தால் மட்டுமே வேறு எந்த சாதனையும் செய்யத்தேவையில்லை. இந்த ஒரு சாவி எல்லா கதவுகளையும் திறக்ககூடியது.

சாட்சி பாவமாக இருங்கள் என்றால் என்ன? எப்படி பயிற்சிப்பது? காம எண்ணங்கள் உங்களில் உருவாகும் போது பொதுவாக நீங்கள் அதனுடன் உங்களை அடையாளப்படுத்திக்கொள்வீர்கள், அந்த எண்ணத்தின் படி நடக்கத்தொடங்கும் போது பைத்தியக்காரத்தனமான மன எழுச்சிகளை உருவாக்கிக்கொண்டு இறுதியில் ஒருவித மன அழுத்தத்தினை அடைவீர்கள். ஏனெனில் மனதில் பலவித கற்பனைகளுடன் காமத்தினை அனுபவிக்க என்று ஆரம்பிக்க ஒன்றுமே இல்லாதிருக்க காண்பீரகள்.

பலவிதமான எதிர்பார்ப்புடன், ஆவலுடன் பெரிதாக ஏதாவது ஒன்று கிடைக்கும் என்ற எண்ணத்துடன் அணுகும் போது எதுவும் இல்லாமல் இருக்க காண்பீர்கள். அது உங்கள் மனதிற்கு பலத்த ஏமாற்றத்தினையும் விரக்தியினையும் தரும். இப்படியான அனுபவம் ஏற்பட்டவுடன் உங்கள் மனதினால் அந்த தோல்வியினை விரக்தியினை ஏற்றுக்கொள்ளமுடியாமல் உடனே காமத்துக்கெதிரான எண்ணங்களை தோற்றுவித்துக்கொண்டு புலம்பத்தொடங்குவீர்கள். பெரும்பாலானவர்கள் இந்தப்பழம் புளிக்கும் என்ற நிலையில் காமத்தினை கட்டுப்படுத்துவதற்கு ஆன்மீகத்தினை நாட ஆரம்பிக்கின்றனர். இன்றிலிருந்து பிரம்மச்சர்யம் காக்கப்போகிறேன் என்று சபதம் செய்துகொள்கின்றனர். அல்லது காமம் பொல்லாதது துறவியாக வேண்டும் என்று விலகி ஓடத்தொடங்குவர். அத்தகையர் காமத்துக்கு எதிராக அது பாவமான ஒன்றாக பிரச்சாரப்படுத்துகின்றனர். இந்த நிலை ஏற்பட்டவுடன் காமத்தினை வெறுக்கும் மனதினை பெறுகிறீர்கள்.

காமமும் இறைவனது படைப்புகளில் ஒன்று என்றால் எப்படி அது பாவமாக முடியும். காமத்தினை நான் கொண்டு வரவில்லை, பிறப்பில் இயற்கையாக குறித்த வயது வந்தவுடன் உடலிலும் மனதிலும் தூண்டப்படுகிறது. அது இயற்கையான ஒன்று, அந்த இயற்கை கடவுளால் படைக்கப்பட்டது. ஆகவே காமமும் கடவுளால் படைக்கப்பட்ட புனிதமான பொருளே.

இத்தகைய மனதினை பெறுவதற்கு "சாட்சி பாவம்" ஒன்றுதான் வழி. இதனை எப்படி பயிற்சிப்பது. காம எண்ணம், எழுச்சி உண்டாகியவுடன் அதனைக்கண்டு பதட்டப்படாமல் அதனை அமைதியாக உங்கள் மனதாலேயே அவதானிக்க பழகுங்கள். அந்த எண்ணத்துடன் உங்களை தொடர்புபடுத்தாதீர்கள். ஒருக்காலும் உங்கள் மனதில் "ஓ நான் காம எண்ணம் கொண்டவனாகிறேன்" என்று பதறாதீர்கள். அமைதியாகா "என்னில் காம ஆசை எழுந்துள்ளது, இதனை நான் நன்கு அவதானிக்க வேண்டும்" என்று உறுதியாக மனதில் எண்ணுங்கள். அந்த எண்ணத்திற்கு எதிராக வெட்கமான, பாவமான, பயந்த எண்ணங்களை எழுப்ப முற்படாதீர்கள். அமைதியாக ஒரு பார்வையாளனாக இருங்கள். இப்படி செய்யும் போது நீங்கள் அதனை வலிந்து அடக்குவதில்லை. அதனால் அது ஒரு அழுத்தமாக மனதில் புதைந்து மீண்டும் உங்களை துன்புறுத்தாது. அப்படி அழுத்தி புதைத்தால் அது என்னவென்பதனை நீங்கள் சரியாக புரிந்து கொள்ள முடியாது. இப்படி ஒவ்வொரு முறையும் அழுத்தி புதைப்பதால் தான் எதிரான எண்ணத்தினை மனதில் தோற்றுவிக்கிறது. ஒரு விடயத்தினை சரியாக அமைதியாக புரிந்துகொள்ளாவிட்டால் அது அழுத்தப்பட்டு அதற்கு எதிரான எண்ணத்தினை தோற்றுவிக்கும் என்பதனை ஆழமாக புரிந்துகொள்ளுங்கள். ஆகையால் ஒருபோதும் எந்தவொரு மன உணர்ச்சியினையும் வலிந்து அடக்க பழகாதீர்கள், அதனை அதன் பாட்டில் விட்டுவிடுங்கள். அதனைக்கண்டு பயப்படாதீர்கள். உடலுறவில் ஈடுபடும்போது ஒருவித விழிப்புணர்வுடன் என்ன நடக்கின்றது என்பதை புரிந்துகொண்டு ஈடுபடுங்கள். ஒரு விடயத்தினை நன்கு அறிந்திருந்தீர்கள் என்றால் அதனைப் பற்றிய பயம் ஏற்படாது, அதனை கண்டு பயப்படவேண்டிய நிலை ஏற்படாது. அது முழுமையாக தன்னை வெளிப்படுத்த அனுபவியுங்கள். ஆனால் அதில் இருந்து நான் வேறானவன் என்ற பாவத்தினை உறுதியாக கொள்ளுங்கள்.

இப்படியான நிலையில் அந்த இயக்கம் ஒரு உச்சத்தினை அடையும், அதுவரை அதுனுடன் செல்லுங்கள். அது எப்படி நடைபெறுகிறது என்பதனை கூர்ந்து விபரமாக கவனியுங்கள். விழிப்புணர்வினை இழந்து விடாதீர்கள். அந்த உணர்வின் உச்சத்தினை அடைந்தவுடன் உங்கள் மனது அதற்கு எதிரான நிலைப்பாட்டை நினைவுபடுத்தும், அந்த எதிர்ப்பு நிலைப்பாடு வந்தவுடன் உங்கள் கவனத்தினை மீண்டும் செலுத்துங்கள், மீண்டும் என்ன நடைபெறுகிறது என்பதனை கவனியுங்கள். மீண்டும் மனம் அந்த எண்ணத்தின் உச்சத்தினை அடையும், அதன் பின்னர் அந்த அலை கீழே விழத்தொடங்கும். காமம் எண்ணம் என்பது அந்த அலையின் மேல் எழும் பகுதி, அது தவறு பிரம்மச்சார்யம் கைக்கொள்ளவேண்டும் என மனம் சொல்வது அதற்கு எதிரான மனபாங்கும் அந்த அலையின் தாழ்ந்த பகுதியுமாகும்.

இந்த நிலையில் விழிப்புணர்வுடன் இருங்கள், அதற்கு எதிராக செல்லாதீரகள். அதனைப்பற்றி விமர்சிக்காதீர்கள்; அதைப்பற்றி கருத்துக்கூறாதீரகள். அது நல்லது, கெட்டது என்று எதையும் செய்யாதீர்கள். ஒரு விழிப்புணர்வுடன் என்ன நடக்கிறது என்பதனை அவதானியுங்கள். இப்படிச் அவதானிப்பதில் உங்களுக்கு நீங்களே உண்மையாக இருக்கவேண்டும். எதுவித விளக்கங்களும் கொடுக்ககூடாது. இப்படிச் செய்வதே சாட்சி பாவம் என்பது.

இப்படி காம எண்ணத்தினையும் காமத்துக்கு எதிரான எண்ணத்தினையும் சாட்சி பாவமாக அவதானித்தால் உங்களுக்கு காமத்தினை பற்றிய ஒரு பெரும் புரிதல் கிடைக்கும். காம எண்ணமும் அதற்கெதிரான பிரம்மச்சார்ய எண்ணமும் ஒரே அலையின் எதிரெதிர் துருவங்கள் என்பதனை நீங்கள் அறிந்துகொள்ளலாம். அவை ஒரே அலையின் எழுச்சியும் வீழ்ச்சியும் ஆகும். இரண்டும் ஒன்றே, அவற்றில் ஒன்றை மட்டும் நீங்கள் தேர்ந்தெடுக்க முடியாது. ஒரு பகுதியினை நீங்கள் தேர்ந்தெடுத்தால் கட்டாயம் மற்றைய பகுதியினையும் மறைமுகமாக தேர்ந்தெடுக்கின்றீர்கள். ஒன்றில் இருந்து மற்றொன்றை பிரிக்க முடியாது. அவை இரண்டும் ஒன்றே, அவற்றில் ஒன்றை விரும்பினாலும் மற்றையதை அனுபவிக்க வேண்டி வரும். எதுவித தேர்வு செய்யும் உரிமை இல்லை.

ஆனால் இந்த சாட்சி பாவ நிலையில் நீங்கள் எதையும் தேர்ந்தெடுப்பதில்லை. இப்படிச் செய்யும் போது அதிசயம் நிகழ ஆரம்பிக்கும். நீங்கள் தேர்ந்தெடுக்காமல் விடும்போது இரண்டும் அற்றுப்போய்விடும். காம எண்ணமும் இருக்காது, பிரம்மச்சார்ய எண்ணமும் இருக்காது. இரண்டும் இல்லாது போய்விடும். இந்த நிலையில் முதன் முதலாக நீங்கள் இந்த விசையில் இருந்து வெளிவந்து தனித்து இருப்பீர்கள். கவனிப்பதில் ஆரம்பமும் முடிவும் ஒன்றே, இது அலைபோன்ற நிலை அல்ல. ஒரு நேர்கோடு போன்றது. அவதானிப்பதே செய்கையாகவும், இலக்காகவும் இருக்கிறது. இந்த நிலையினை அடையும் போது மனதுக்கிடையிலான போராட்டம் இல்லாது போய்விடும்.

இது எப்படி என்பதினை விஞ்ஞானப்பூர்வமாக விளங்கிகொள்வோம். மனதில் தோன்றும் எண்ணம் ஒரு அலைபோன்றது. அலையின் இயக்கம் இயற்பியல்/பௌதீகவியம் கற்றவர்களுக்கு இலகுவாக விளங்கும்.

சாட்சி பாவத்தில் காமம் அதற்கு எதிரான் பிரம்மச்சர்யம் இரண்டும் ஒரே நேரத்தில் கவனிக்கப்படுகிறது. எதிரான இரண்டும் ஒரே நேரத்தில் பரிவுறும் போது அந்த எண்ணம் சமனிலைக்கு வரும். இது சாட்சிபாவத்தின் மூலம் சாத்தியமாகிறது. இரண்டு எதிர்துருவங்களும் சம அளவான சக்தியுடன் எதிர் திசைகளில் அசையும்போது அதன் விளைவு பூச்சியமாகும்.

இந்த யுத்தம் ஒரு வகையான யுத்தம் எமது சக்தியினை வீணாக்காமல் சமப்படுத்துவதால் எண்ணங்களை வெல்லும் யுத்த முறை. நாம் பொதுவாக எண்ணத்துடன் கலந்து எமது ஆற்றலை இழந்து விடுவோம், ஆனால் சாட்சிபாவத்தில் நாம் அதிலிருந்து வெளியே வந்து அதனை சமப்படுத்தி வெற்றி காண்கிறோம். முதல் நிலையில் சாதாரண போர்வீரன் போல் யுத்தக்களத்தில் நின்று போர்புரிந்து மரணத்தை தழுவும் போன்றது, இரண்டாவது நிலை போர்த்தளபதி போரில் இருந்து விலகி கட்டுப்பாட்டு அறையில் இருந்துகொண்டு யுத்தத்தினை முழுமையாக கட்டுப்படுத்தி வெற்றி காண்பது போன்றது.

ஒரு விடயத்தினை ஞாபகத்தில் கொள்ளுங்கள் காமத்தினை மிக ஆழ்மாக அனுபவித்த ஒருவன் மட்டுமே உண்மையான பிரம்மச்சாரியாக முடியும். அதீத அளவு காம ஆசை மட்டுமே பிரம்மச்சர்யமாக மாற்ற முடியும். நீங்கள் காமத்தினை முழுமையாக அனுபவித்து அதன் முழுப்பரிணாமங்களை புரிந்துகொள்ளாதவராக இருந்தால் உங்களால் பிரம்மச்சாரி ஆகமுடியாது. பிரம்மச்சாரி ஆவதற்கு அதிகளவு ஆற்றல் தேவை, அதனை அடக்குபவர்கள் ஒருக்காலும் உயர்ந்த சக்தியினை அடைய முடியாது.

இதனை செய்வதற்கு ஒருக்காலும் நீங்கள் சண்டை பிடிக்ககூடாது. ஒரு பக்கம் மட்டும் சார்ந்து இருக்ககூடாது. அதிலிருந்து வெளிவந்து சாட்சி பாவமாக இருத்தல் மட்டுமே அதனை வெல்வதற்கு வழி. இது உண்மையில் கடினமானது, ஏனெனில் மனது தையாவது ஒன்றை தேர்தெடுக்கவே விரும்பும். மனம் தேர்ந்தெடுப்பது, தேர்ந்தெடுக்காமல் அது மனமாக இருக்க முடியாது. சாட்சி பாவ நிலையில் மனதிலிருந்து வெளியே வந்து விடுகிறோம். வெறும் உணர்வாக மட்டுமே இருக்கிறோம்.

பொதுவாக இதனை கூறியவுடன் மனது உடனே "ஓ நான் சாட்சி பாவம் நிலையை அடைந்தால் பிரம்மச்சார்யம் வந்து விடும்" என தேர்ந்தெடுத்து விடுவார்கள். இப்படியான நிலையில் இதனை சித்தி பெறமுடியாது. ஏனெனில் அவர்கள் காமத்தினை தொலைப்பதற்கு சாட்சி பாவத்தினை தேர்ந்தெடுக்கிறார்கள். ஏனெனில் பிரம்மச்சர்யம் தான் உயர்ந்தது என்று உள்ளூர முடிவு செய்துகொள்கிறார்கள்.

இதனை பயிற்சிப்பதில் எமது ஆழ்மனது மேற்கூறியவாறு அறியாமல் எம்மை திசைதிருப்பும், அப்படி ஏதாவது ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொண்டு இருக்கும் வரை காமம் மறையாது. சாட்சி பாவம் என்பது எதுவித தேர்வும் இல்லை. தேர்வற்ற விழிப்புணர்வு. மனதின் இந்த தேர்ந்தெடுக்கும் நிலைதான் மனித மனதின் பெரும் நோய்களில் ஒன்றாகும். தேர்ந்தெடுக்காமல் இருக்கும் போது எதிரெதிரான எண்ணங்கள் இரண்டும் அவையாக சண்டை பிடித்து இறந்து விடும், தேர்ந்து எடுக்கும் போது சாட்சி பாவம் அற்றுப்போய்விடும்.

இதனை பயிற்சிப்பதற்கு பல படி நிலைகளில் மனதினையும், பிராணனையும் ஒழுங்கு படுத்தவேண்டும் என்பது உண்மை, எனினும் அன்பர்கள் இப்படியான உயர்ந்த வித்தைகள் உள்ளது என்பதனை அறிந்துகொள்ளும்.

காம ரகசியம் தொடரும்...