27 ஜன., 2025

தெய்வீகப் புதையல், மகா மறைபொருள் என்று அழைக்கப்படும் கருமையம் மனித உடலில் அமைந்துள்ள இடம், அதன் பதிவுகள், கருமையத்தைத் தூய்மை செய்யும் வழிமுறைகள் பற்றிய விளக்கம்:

 கருமையம் அதன் விளக்கம்:


இறைநிலையே கருமையமாக உருவாகி, பொருள் நிலையிலும் அலை நிலையிலும் இருப்பதனால், இந்த காந்த கருமையம் பிரபஞ்சப் பொருட்கள் அனைத்தோடு மறைபொருளாகத் தொடர்பு கொண்டுள்ளது.


உடலுக்கு மூலப் பொருள் வித்து
உயிருக்கு முக்கியப் பொருள் விண்துகள்கள்
மனதுக்கு மூலப் பொருள் சீவகாந்தம்
.

இவை மூன்றும் மையம் கொண்டிருப்பது உடலுக்கு மையமான பகுதியாகிய மூலாதாரம். மூலாதாரம் என்பது மனித உடலுக்கு கருமையம்.

கருமையம் தான் மனிதனின் பெருநிதி செயலுக்கேற்ற விளைவைத் தரும் தெய்வீக நீதிமன்றம். பிறப்பிற்கும் இறப்பிற்கும், தொடர் பிறப்புகள் பலவற்றுக்கும் இடையே வினைப்பதிவு பெட்டகமாக தொடர்ந்து வரும் மாயத்துணைவன் தெய்வத்தையும், மனிதனையும் இணைத்துக் காட்டும் அறிவின் பேரின்பக்களம்.

கருமையத்தில் பதிவுகள் எவ்வாறு பதிவாகிறது விளக்கம்:


ஒரு மயிலைப் பார்க்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அந்த மயிலின் உருவம் பார்ப்பவர்களின் கண்களுக்கு வரும்போது அந்தக் கண்களில் மிகச்சிறிய உருவமாக பிரதிபலிக்கிறது. இப்படிச் சுருக்கம் பெற்ற மயிலின் உருவமானது எப்போது மூளை செல்களில் மோதுகிறதோ அப்போது அந்த மூளைச் செல்கள் அதைப் பதிவு செய்து கொள்கின்றன. எப்படி ஒரு ஒலியானது பதிவு நாடாவில் பதிவு செய்யப்படுகிறதோ அதே போல மயிலின் உருவமானது அந்த மயிலைப் பற்றிய தன்மைகள் எல்லாம் அடங்கிய அழுத்த அலையாகச் சுருங்கிப் புள்ளி வடிவில் பதிவாகிறது.

மூளைச் செல்களுக்கு வந்து சேருகிற எந்த அலையானாலும் அது உடனே கருமையத்தால் ஈர்க்கப்பட்டு, உடலில் இருக்கும் சீவகாந்த ஆற்றலின் காரணமாக இருப்பாக வைக்கப்படுகிறது. மயிலைப் பார்த்து உணர்ந்த அனுபவத்திற்கு ஏற்பப் பார்ப்பவருடைய கருமையமானது தன்மை பெறுகிறது. பின்னர் எப்பொழுதேனும் தேவையின் காரணமாகவோ, வேறு தூண்டுதல் காரணமாகவோ, அல்லது வேறு ஏதாவது காரணத்தாலோ மன அலைக்கு அதே அலை வரிசை ஏற்படும் போது, மூளைச் செல்கள் ஏற்கனவே அந்த அலை வரிசையில் விளைந்த பதிவுகளை விரித்துக் காட்டும். அப்படி விரித்துக் காட்டப்படும்போது பார்ப்பவர் பழைய அனுபவங்களையும், உணர்வுகளையும் எண்ணங்களாக நினைவு கூர்ந்திட முடியும். அதே தன்மையில் உணர்வின்பாற்பட்ட அலைகளும், எண்ண அலைகளும், பரு உடலில் ஏற்படும் அனுபவங்களால் விளையும் அலைகளும் கருமையத்துக்கு ஈர்க்கப்பட்டு இருப்பாக வைக்கப்படுகின்றன.


"நிறைவுபெறா மல்இருக்கும் ஆசைகளின் கூட்டம்,
    நெஞ்சம்மனம் பேச்சுஇடை பிணக்காகும் பொய்கள்,
மறைமுகமாய் நேர்முகமாய்ப் பிறர்உளம்வருத்தல்,
    மற்றஉயிர் சுதந்திரமும் வாழ்வின்வளம் பறித்தல்,
நிறைவழிக்கும் பொறாமை, சினம், பகைவஞ்சம் காத்தல்,
    நெறிபிறழ்ந்த உணவுழைப்பு உறக்கம்உட லுறவு,
கறைபடுத்தும் எண்ணம் இவை கருமையம் தன்னைக்
    களங்கப்ப டுத்திவிடும் கருத்தொடுசீர் செய்வோம்."
                                        வேதாத்திரி மகரிஷி.
 
"பலஆயி ரம்பிறவி எடுத்துஏற்ற பாவப்
    பதிவுகளை ஒருபிறவிக் காலத்தில் மாற்றி,
நலமடைந்து மனிதனாகித் தெய்வமாகி உய்ய,
    நல்வாய்ப்பு ஆற்றல்இவை கருணையோடு இயற்கை
நிலஉலகில் மனிதரிடம் அமைத்துளது உண்மை.
    நேர்முகமாய்க் கருமையத் தூய்மைஉணர்ந் தாற்றி,
பலனடைய அகத்தவத்தால் பரமுணர்ந்து, அறத்தின்
    பாதையிலே ஒத்துதவி வாழும்முறை போதும்!"
                                        வேதாத்திரி மகரிஷி.
 
"மனத்தூய்மை வினைத்தூய்மை மனிதன் வாழ்வில்
    மகிழ்ச்சி, இனிமை, நிறைவு, அமைதி நல்கும்;
மனம்உயர நேர்மைவழி அகத்தவம் ஆம்
    மற்றும் தன்வினை உயர அறமே ஆம்."
                                        வேதாத்திரி மகரிஷி.

கருமையத்தின் சிறப்புகள்:

வேதான் விண்துகள், கோள்கள், உயிர் வகைகள் அனைத்திலும், மனிதனிடம் அமைந்துள்ள 'கருமையம்' எல்லையற்ற ஆற்றலுடையது. மொழிவழியில் இதனை "சூப்பர் கம்ப்யூட்டர் சிப்" எனலாம். எங்கு ஒரு துளி மழை பெய்தாலும், அது நிலத்தில் விழுந்து சிறு ஓடையாகி, ஆறாகி, கடலில் கலந்து விடுவது போல, பேரியக்க மண்டலத்தில் - ஆதிநிலை முதல் பரமாணு, பஞ்சபூதங்கள், பஞ்சதன்மாத்திரை, அண்டங்கள், ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான உயிரினங்கள் மனிதன் வரையில் நடைபெற்ற எல்லா இயக்கங்களும், 'காந்த அலைகளே'. ஆதலால், அவையனைத்தும் இறுகிய பதிவுகளாகத் தொடர்ந்து வந்து மனிதனிடம் இருப்பாற்றல்களாக (Potential) உள்ளன.

எனவே, அரூபமான எல்லையற்ற இறையாற்றலின் அலைவடிவிலான இயக்கங்கள் அனைத்தும், உருவத் தோற்றங்களில், சிறப்பான மனிதனிடம் உள்ள 'கருமையத்தில்' அடங்கியுள்ளன. எனவே, மனிதனிடம் அமைந்துள்ள கருமையம், இறைநிலையின் பேரியக்க மண்டலம் பரிணாம இரகசியங்கள் அனைத்துமடங்கிய "சூப்பர் கம்ப்யூட்டர் சிப்" என்று கொள்ளலாம். இத்தகைய இயக்கப் பதிவுகள் அவ்வப்போது பேரியக்க மண்டல விரிவான தொடர்பாக இருப்பது போன்று, ஆதிநிலையிலிருந்து பரிணாமத் தொடராகவும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய 'கருமையம்' தான் மனிதன் அறிவுக்கும் மனதுக்கும் இருப்பிடமாக - இயக்கக் களமாகவும் இருக்கின்றது.


மனிதனுக்குள் மகா மறைபொருள் கருமையம்:

இருப்பு களம், இயக்க களம், வானுலவும் கோள்கள், ஓரறிவு முதல் ஆறறிவு வரை வாழ்ந்து கொண்டிருக்கும் உயிர்வகைகள் அனைத்தையும் பயனாய்க் காண்பவன் மனிதனே. இவ்வளவு பொருட்களுக்கும், இயக்கங்களுக்கும் மனித மனம் அளிக்கும் மதிப்பும், இவற்றால் மனிதன் அடையும் பயனும் தான் பேரியக்க மண்டலத்தில் குறிப்பிடத்தக்க சிறப்புகள்.

இத்தகைய மதிப்பு வாய்ந்த மனதின் சிறப்பு அவன் கருமையத்தின் வளமே அன்றி வேறு எது? மனிதன் உடலுக்கும், மனத்திற்கும், தனி மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் இடையே, மனிதனுக்கும் வான் கோள்களுக்கும் இடையே, மனிதனின் முன்பிறவிக்கும் பின் பிறவிக்கும் இடையே பாலம்போல அமைந்து இறை, உயிர், மனம் எனும் மூன்று மறைபொருட்களுக்கும் இருப்பிடமான மகா மறைபொருள் தான் கருமையம்.

இத்தகைய மதிப்பு வாய்ந்த பேரியக்க மண்டல இரகசிய மையத்தின் பெருமதிப்பை உணரக்கூடியவன் மனிதனே. இந்தக் கருமையத்தைத் தூய்மையாகவும், வளமாகவும் வைத்துக் கொள்ள அறிந்தவன், அதற்கு ஏற்ற தகுதி பெற்றவன் மனிதனே. வேதங்கள், மதங்கள், இலக்கியங்கள், சமுதாய நல நோக்கமுடையோர் அனைவரும் கூறும் போதனைகள் அனைத்தும் மறைமுகமாகக் கருமையத் தூய்மையே ஆகும்.

அகத்தவத்தால் ..


"பலஆயி ரம்பிறவி எடுத்துஏற்ற பாவப்
    பதிவுகளை ஒருபிறவிக் காலத்தில் மாற்றி,
நலமடைந்து மனிதனாகித் தெய்வமாகி உய்ய
    நல்வாய்ப்பு ஆற்றல்இவை கருணையோடு இயற்கை
நிலஉலகில் மனிதரிடம் அமைத்துளது உண்மை.
    நேர்முகமாய்க் கருமையத் தூய்மைஉணர்ந் தாற்றி,
பலனடைய அகத்தவத்தால் பரமுணர்ந்து, அறத்தின்
    பாதையிலே ஒத்துதவி வாழும்முறை போதும் !."
                                       வேதாத்திரி மகரிஷி.

கருமையம் ஒரு தெய்வீகப் புதையல் விளக்கம்:

ஒரு குழந்தை தாயின் வயிற்றில் கருவாக உருவாகும் காலத்திலேயே அது தன்னுடைய பெற்றோர்களது பதிவுகளைப் பெற்றுக் கொள்கிறது. அதைப் போலவே, ஒவ்வொரு தாவரத்தினுடைய விதையிலும், அந்தத் தாவரத்தின் எல்லாத் தன்மைகளும், குணங்களும் பதிவாகி அந்த விதையானது செடியாக வளரும் போது அந்தக் குணங்கள் ஒவ்வொன்றாகப் பிரதிபலிக்கின்றன.

ஆகையால் தான், நான் கருமையத்தை மனித இனத்துக்குக் கிடைத்த தெய்வீகப் புதையல் என்று சொல்கிறேன். அந்தக் கருமையம் தான் பிரபஞ்ச ஒருங்கிணைப்பு ஆற்றலினுடைய நீதிமன்றம் என்றும் சொல்லலாம். அதுமட்டுமல்லாமல், அதே கருமையம் தான் ஒருவரது தற்போதைய வாழ்க்கையில் ஏற்படும் உணர்வுகளுக்கெல்லாம் உற்பத்திக் கூடமாகவும், கருத்தொடராக வந்த பதிவுகளுக்கெல்லாம் களஞ்சியமாகவும் விளங்குகிறது.

ஒவ்வொருவரும் கருமையத்தின் பெருமையைத் தெரிந்து கொள்வதோடு, அதை மதிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். இந்தக் கருமையந்தான் 'ஆன்மா' எனப்படுகின்றது. கருமையத்தின் தன்மைகள் தான் ஒரு சீவனின் முற்பிறவிகள் பலவற்றுக்கும் பின்பிறவிகள் பலவற்றுக்கும் கருத்தொடர் விளைவாகத் தொடர்புற்றிருக்கின்றது.

வாழ்க்கையை வாழ்வதற்கும் இன்பம், அமைதி, பேரின்பம் ஆகியவற்றை அனுபவிப்பதற்கும், அறிவில் முழுமை பெறுவதற்கும் கருமையத்தை எப்போதும் வளமாகவும், தூய்மையாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

சகஜ நிட்டை:
 
"கருதவத்தில் ஆரம்பச் சாதகர்கள்
    கரும ஞானக்கருவிகளை இயக்கும் போதும்
புருவமத்தி நினைவோடு இருத்தல் வேண்டும்
    புலன்கள் தமை இம்முறையில் பழக்கி விட்டால்
அருவநிலை பூரணத்தால் நான் ஒன்றென்றும்
    அனேக உருவங்களாய் நான் பலவே என்றும்
ஒருமை தத்துவம் உணரும் ஆற்றலோடு
    உடலில் சுழல்கின்ற இரத்தம் சுத்தமாகும்".
                                வேதாத்திரி மகரிஷி.
 
உலகிணைந்த கல்விமுறை வேண்டும்;-

"கருத்தொடராய் வந்த வினைப்பதிவுகளின் வலுவைக்
    கணிக்காமல் மதிக்காமல் ஏற்ற நல்லவினையால்
திருத்திடவோ சீரமைத்தோ உய்ய நினையாமல்
    திரும்பவும் அப்பழைய வினைவழி நின்றேவாழ்ந்தால்
வருந்துவதும் வருத்துவதும் அன்றிவளம் ஏது?
    வாழ்வுள்லோர் அனைவரும் இவ்வுண்மையை உணர்வோம்
பெருத்துவரும் பழிச்செயல்கள் மாறி உலகுய்ய
    பேருலகம் இணைந்த ஆட்சி கல்வி இவை வேண்டும்".
                                 வேதாத்திரி மகரிஷி
.

கருமையத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகள்:

  • பெற்றவர்கள், குரு, ஆட்சித்தலைவர், தெய்வம் இவர்களை மதித்து வாழ்தல்.
  • ஒழுக்கம் கடமை ஈகை மூன்றும் இணைந்த அறநெறியை பின்பற்றுதல்.
  • அகத்தவப் பயிற்சியை முறையாகச் செய்து வருதல்.
  • இரத்தம், காற்று, உயிர், சீவகாந்தம் இவை தடையின்றி ஓடி உடலைக் காத்துக் கொள்ள ஏற்ற உடற்பயிற்சிகளை அளவோடு செய்து வருதல்.
  • பெற்றோர்கள், வாழ்க்கைத் துணைவர், பெற்ற குழந்தைகள் இவர்களை பொறுப்போடும் அக்கரையோடும் காத்து உதவி வருதல்.
  • இறைநிலை உணர்ந்து அந்நிலையோடு அடிக்கடி ஒன்றி பழகுதல்.
  • மனித முயற்சியால் உற்பத்தி செய்த பொருட்களையும் இயற்கை வளத்தையும், பிறர் உபயோகிக்கும் பொருட்களையும் சேதப்படுத்தாது மதித்து நடத்தல்.
  • நாம் பார்க்கும் ஒவ்வொரு உடலும் இயற்கை என்ற பேராற்றலால் கட்டப்பட்டிருக்கும் பெருமையை உணர்ந்து உடலுக்குள் அறிவாக விளங்குவது தெய்வத்தின் ஒளியே என்று மதித்து ஒத்தும் உதவியும் வாழ்ந்து வருதல்.
  • உள்ளத்தில் பகை வஞ்சம் எதையும் வைத்துக் கொள்ளாமல் மன்னிப்பும், கருணையும் கொண்டு எல்லோருடனும் இன்முகத்தோடும் அன்போடும் பழகுதல்.
  • தேசம், மதம், சாதி, இனம், மொழி இவற்றால் மனிதரை வேறுபடுத்திக் காணாமல் எல்லோரும் இயற்கையின் மக்கள் என்ற நினைவில் வாழ்தல்.

மனித வாழ்வை செம்மை படுத்த சித்தர்கள் அருளிய குண்டலினி யோகம் சூட்சுமம் ரகசியம் புரிந்து செயல்படுத்தி நலம் பெற தொடர்பு கொள்க…

 

செந்தில்குமார்

செல்: 9655472931

நச்சாந்துபட்டி,

புதுக்கோட்டை மாவட்டம்.


"This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக