17 ஏப்., 2025

மௌனம் என்றால் என்ன? மௌனத்தின் மேன்மை யாது? மௌனத்தால் கிடைக்கக்கூடிய பயன்கள் என்ன? மௌனத்தை பற்றி ஞானிகளின் கருத்து என்ன முழு விளக்கங்கள்:

 மௌனத்தின் மேன்மை



மௌனம் என்பது வெறும் அமைதி அல்ல, அது ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். இது பலவிதமான சூழ்நிலைகளில் பயன்படுத்தப்படலாம். மௌனம் காப்பது, ஒருவரின் சிந்தனைகளைத் தூண்டி, ஆழமான கேள்விகளுக்கான விடைகளைத் தேட வழிவகுக்கும். மேலும், மௌனம் ஒருவரின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதற்கும், மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதற்கும் உதவுகிறது.


மௌனம் இறைவனின் மொழி:


"நாம் பேசாதிருக்கும் போது இறைவன் நம்மோடு பேசுகிறான்." இப்படிச் சொல்வது வேறு ஒன்றுமில்லை.எப்போதும் அவன் இருக்கிறான், அவன் பேசுகிறான், அதைக் கேட்பதற்கு இல்லாமல் நாம் வேறு எதையோ கேட்டுக் கொண்டிருந்தால் அவன் பேசுவது கேட்பதில்லை. அதனால் நம் வேலைகளையெல்லாம் நிறுத்திவிட்டு கொஞ்சநேரம் மௌனம் இருக்க வேண்டும்.

நாம் கருத்தொடராய்ப் பெற்ற வினைப் பதிவுகளையும், பிறவி எடுத்த பின் ஆற்றிப் பெற்ற வினைப் பதிவுகளையும் தன்மைகளாகப் பெற்றவர்களாவோம். நம் வினைப்பதிவுகள் அனைத்தும் புதையல் போல உயிர் எனும் இயற்கை கம்ப்யூட்டரில் அடங்கியுள்ளன. காலத்தால் மலரும் அப்பதிவுகளின் வெளிப்பாடுகளே எண்ணங்கள், செயலார்வம், நோய்கள், இன்ப துன்பங்கள் யாவுமாகும்.

ஒரு தொழிலதிபர் அல்லது வணிகர் மாதந்தோறும் அல்லது ஆண்டுதோறும் இருப்பிலுள்ள பொருள்களை கணக்கெடுப்பது போல எல்லாருமே மாதத்திற்கு ஒரு நாளோ அல்லது ஆண்டுக்குச் சில நாட்களோ ஒதுக்கிக் கொண்டு நம் இருப்பைக் கணக்கெடுக்க மௌன நோன்பு அவசியம்.

இந்தக் கருத்தோடு, தவத்தால் அறிவை அமைதிக்கும் கூர்மைக்கும் கொண்டு வந்து, அகத்தாய்வால் நமது இருப்புகளைக் கணக்கெடுத்து, புதிய திட்டங்கள், ஆக்க வாழ்வுக்கு வழி செய்து கொள்ள வேண்டும். மௌன நோன்பின் உண்மை நோக்கமறிந்து விழிப்புடன் காலத்தைப் பயன்படுத்தி, ஆன்ம தூய்மையும், வாழ்வின் வளமும் பெறுவோம். தான், குடும்பம், உற்றார், ஊர், உலகம் என்ற ஐந்து பிரிவுகளையும் பல தடவை வாழ்த்தி அமைதி காண்போம்.


மோனநிலையின் பெருமை யார் எவர்க்கு
    முன்படர்ந்து வாயாலே சொல்லக்கூடும்?
மோனமே அறிவினது அடித்தளம் ஆம்,
    மிகவிரிவு. எல்லையில்லை, காலமில்லை;
மோனத்தில் அறிவு தோய்ந்து பிறந்தால்
    முன்வினையும் பின்வினையும் நீக்கக்கற்கும்
மோனநிலை மறவாது கடமையாற்ற
    மென்மை, இன்பம், நிறைவு, வெற்றி அமைதியுண்டாம்
                                                    வேதாத்திரி மகரிஷி.

மௌனம் பற்றி வேதாத்திரி மகரிஷி அவர்களின் கருத்துக்கள்:




யோக சாதனைகளிலேயே சிறந்ததொரு பயனளிக்கும் பயிற்சிமுறை மௌன நோன்பு ஆகும். வாய்ப்பேச்சு இல்லாதிருத்தல் பேசா நோன்பு என்று பொதுவாகக் கருதப்படுகிறது. மௌன நோன்பு என்பதற்கு மேலும் சிறப்பான ஆழமான கருத்தும் உண்டு அது 'மனமடக்கப் பயிற்சி' என்பதாகும். மனத்தைச் சீரமைக்கும் சாதனைக்கு வாய் பேசாதிருத்தல் ஒரு புறச் சடங்கு ஆகும்.

மௌனம் என்பது மனத்தைச் சீரமைக்கும் பயிற்சி அகத்தவமும் அகத்தாய்வும் செய்ய வேண்டும். எப்போதும் ஐம்புலன்கள் மூலம் வெளி உலகப் பொருட்களுடனும், உயிர்களிடமும் தொடர்பு கொண்டே இருக்கிறோம். நாம் பிறந்தது முதல் இன்று வரையில் செய்த செயல்கள், எண்ணங்கள், விளைவுகள் அனைத்தும் சீவகாந்த அலையில் அவ்வப் போது வடிவம், குணம் ஆகியவைகளாகச் சுருங்கி கருமையத்தில் பதிவாகி உள்ளன.

மௌனத்தின்போது மனம் இவற்றை ஒவ்வொன்றாகக் கருமையத்திலிருந்து எடுத்துக் காட்டுகிறது. பதிவுகளை ஆராய்ச்சி செய்து தீயவற்றை விட்டுவிட வேண்டும்.

அகத்தாய்வு செய்து நன்மை தரும் எண்ணங்களை வைத்துக் கொண்டு தீமை தரும் எண்ணங்களை விட்டு விட வேண்டும். கருமையத்தைத் தூய்மை செய்கிறோம்.

தவம் செய்வதால் மனம் நுண்ணிய அலைக்குச் சென்று இயற்கை இரகசியங்களை அறிய முடிகிறது. இறைநிலையை அடைய முடிகிறது.

இறையுணர்வுக்கு மௌனத்தின் அவசியம்:


அகத்தவத்திலே உயிர்மேல் மனம் வைத்து அறிவை அமைதி நிலைக்கு கொண்டு வருவது முதற்செயல் உயிரை உணர்வாய்ப் பெறும் இந்தத் தவமுறையைக் குருவின் மூலமே கற்றுக்கொள்ள வேண்டும்பிறகு இதுவரையிலும் அறிவிலே பதிந்துள்ள வினைப் பதிவுகளின் தன்மையுணர்ந்து நலம் விளைக்கும் புதிய முறையிலே திருப்பிப் பழக்கும் முறை அடுத்த தொடர்ச் செயல் ஆன அகத்தாய்வுஇவற்றை முறையே மனமடக்க ஓர்மைப் பயிற்சி (லயம்) என்றும் அகத்தாய்வு என்றும் கூறுகிறோம்.

இவ்விரு பயிற்சிகளின் போதும் வாய் திறந்து பேசுவது முரண்பாடான செயலாகும். எனவே மௌனமாக இருக்க வேண்டியது இன்றியமையாததாகும். முழுநோக்கம் மனமடக்கம் சடங்கு வாய்திறந்து பேசாமை வாய்மூடி பேசாதிருந்து மன ஓர்மைப் பயிற்சியோ அகத்தாய்வோ இயற்றாமலிருந்தால் மௌன நோன்பு என்பது முழுமையாகாது.

மனிதன் பேசுவது தனது அறிவினை அனுபவங்களைப் பிறர்க்கு எடுத்துக் கூறி மற்றவர்களுக்கும் பயன்பெறச் செய்யவும் தனது தேவைகளைப் பிறர் உணர்ந்து கொண்டு தக்கபடி உதவி செய்யப் பெறுதற்குமேயாம்மனச் சீரமைப்புப் பெறாதவன் பேசினால் தவறான பயன்களும் துன்பங்களும் பல்லவா விளையும்? இதனை ஒரு சித்தர் பெருமான் குறிப்பிடுகிறார்


சினம் அடங்கக் கற்றாலும் சித்தியெலாம் பெற்றாலும் 
மனமடங்கக் கல்லார்க்கு வாய் ஏன் பராபரமே!

  1. வாக்கு மௌனம்
  2. கருவி மௌனம்
  3. மகா மௌனம்


வாக்கு மௌனம்: வாய் பேசாதிருத்தல் வாக்கு மௌனம்

கருவி மௌனம்ஞானேந்திரியம்கர்மேந்திரியம் இவைகள் அடக்கமாக இருப்பது கருவி மௌனம்

மகா மௌனம்: வாக்கு மௌனம், கருவி மௌனம் மற்றும் அலைகின்ற மனத்தை அமைதிப்படுத்தி இறை நிலை உணர்வோடு இருத்தலே மகா மௌனம்

நிலைப்பேறு: மனம் செம்மை பெறாதவர்கள் பேசுவதால் என்ன பயன் என்று வினவுகிறார் திருவள்ளுவர் கூறும் அறிவுரையையும் இங்கு நினைவு கூர்வோம்.


அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்
                                திருவள்ளுவர்

தன்முனைப்பை அடக்கி அகண்டாகாரப் பேராற்றலோடு தன்னை இணைத்துக் கொண்டால் இறையருள் சுரந்து இன்பம் ஓங்கும் இல்லையேல் துன்ப இருளில் ஆழ்த்தி விடும் என்பதே இக்கவியின் கருத்தாகும்.

மௌனத்தின் பயன்கள்:


  • புலன் அடக்கம் பெறும்

  • சீவகாந்தப் பெருக்கம், சீவகாந்தச் செறிவு ஏற்படும்

  • தவத்தினால் இறைநிலையுணர்வு கிட்டும்

  • தற்சோதனை செய்ய உதவும்

  • அறிவாட்சித் திறன் பெருகும்

  • அயராத விழிப்பு நிலை ஏற்படும்

  • ஆன்மிக முன்னேற்றம் ஏற்படும்

  •  குணநலப்பேறு கிட்டும்

  • தொண்டு மனப்பான்மை பெருகும்

  • செயல் விளைவு தத்துவம் விளங்கும்

  • பிரபஞ்ச இரகசியமும் இயக்க தன்மையும் விளங்கும்


மெளனத்தைப்பற்றி ஞானிகளின் கருத்துக்கள்:


எல்லா நேரங்களிலும் பேசிக் கொண்டே இருக்காமல்மெளனமாக இருக்கும் பண்பை வளர்த்துக் கொள்ளவேண்டும். மெளனத்தை விட பெரிய ஆயுதம் எதுவும் இல்லை
                        அன்னை

 

தண்டிப்பவர்கள்பால் நான் செங்கோல்
    வெற்றிவேண்டுபவரிடத்து நான் நீதி
ரகசியங்களுள் நான் மெளனம்
    ஞானிகளுடைய ஞானமும் நானே
                    ஸ்ரீமத் பகவத்கீதையில் ஸ்ரீ கிருஷ்ணன்.

 

ஓசை யொடுங்குமிடம் ஓங்காரத் துள்ளொளிகாண்
    பேசாதிருக்கும் பிரமமிது என்றாண்டி
                                        பட்டினத்தார்.

பொங்கிநின்ற மோனமும்
    பொதிந்துநின்ற மோனமுந்
தங்கிநின்ற மோனமுந் தயங்கிநின்ற மோனமுங்
    திங்களான மோனமுஞ் சிவனிருந்த மோனமே.            
                                        சிவவாக்கியர்
 
சும்மா இரு சொல்லற
    பேசா அநுபூதி பிறந்ததுவே
                            அருணகிரிநாதர்
 
சும்மா இருப்பதுவே சுட்டற்ற பூரணமென்று
எம்மால் அறிதற்கு எளிதோ பராபரமே.
 
சும்மா இருக்கச் சுகம்சுகம்
    என்று சுருதியெல்லாம்
அம்மா நிரந்தரஞ் சொல்லவுங்
    கேட்டும் அறிவின்றியே
பெம்மான் மெளனி மொழியையுந்
    தம்பியென் பேதைமையால்
வெம்மாயக் காட்டில் அலைந்தேன்
    அந்தோ! என் விதிவசமே.
                                தாயுமானவர்

தாயுமானவரை சின்னஞ்சிறு வயதிலேயே ஆட்கொண்டவர் ஒரு முனிவர். அவர் பேசுவது மிகக்குறைவு. இரண்டொரு வார்த்தைகளுக்கு மேல் அவருடைய வாயினின்று சொற்கள் வெளியே வரமாட்டா ஆதலால் அவரை மெளனகுரு எனக்கருதி தாயுமானவர் அவருக்கு சிஷ்யர் ஆகி தன் ஐயங்களை அகற்றிக் கொண்டார். அவருக்கு குரு உபதேதித்ததுசும்மா இருஎன்பது தான்.இந்த உபதேச மொழிதான் தாயுமானவரின் பாடல்கள் பலவற்றிலும் பீஜமந்திரமாய் அமைந்து இருக்கிறது.


செந்தில்குமார்

செல்: 9655472931
      நச்சாந்துபட்டி,
      புதுக்கோட்டை மாவட்டம்.


"This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக