31 அக்., 2025

மௌனம் என்றால் என்ன? மௌனத்தின் மேன்மை யாது? மௌனத்தின் வகைகள் மௌனம் இருப்பதால் ஏற்படும் பயன்கள் என்ன? இறை உணர்வு பெறுவதற்கு மௌனத்தின் அவசியம் விளக்கம்:


 

மௌனம் என்பதன் விளக்கம்:

நாம் கருத்தொடராய்ப் பெற்ற வினைப் பதிவுகளையும், பிறவி எடுத்த பின் ஆற்றிப் பெற்ற வினைப் பதிவுகளையும் தன்மைகளாகப் பெற்றவர்களாவோம். நம் வினைப்பதிவுகள் அனைத்தும் புதையல் போல உயிர் எனும் இயற்கை கம்ப்யூட்டரில் அடங்கியுள்ளன. காலத்தால் மலரும் அப்பதிவுகளின் வெளிப்பாடுகளே எண்ணங்கள், செயலார்வம், நோய்கள், இன்ப துன்பங்கள் யாவுமாகும்.

ஒரு தொழிலதிபர் அல்லது வணிகர் மாதந்தோறும் அல்லது ஆண்டுதோறும் இருப்பிலுள்ள பொருள்களை கணக்கெடுப்பது போல எல்லாருமே மாதத்திற்கு ஒரு நாளோ அல்லது ஆண்டுக்குச் சில நாட்களோ ஒதுக்கிக் கொண்டு நம் இருப்பைக் கணக்கெடுக்க மௌன நோன்பு அவசியம்.

இந்தக் கருத்தோடு, தவத்தால் அறிவை அமைதிக்கும் கூர்மைக்கும் கொண்டு வந்து, அகத்தாய்வால் நமது இருப்புகளைக் கணக்கெடுத்து, புதிய திட்டங்கள், ஆக்க வாழ்வுக்கு வழி செய்து கொள்ள வேண்டும். மௌன நோன்பின் உண்மை நோக்கமறிந்து விழிப்புடன் காலத்தைப் பயன்படுத்தி, ஆன்ம தூய்மையும், வாழ்வின் வளமும் பெறுவோம். தான், குடும்பம், உற்றார், ஊர், உலகம் என்ற ஐந்து பிரிவுகளையும் பல தடவை வாழ்த்தி அமைதி காண்போம்.

"மோனநிலையின் பெருமை யார் எவர்க்கு
    முன்படர்ந்து வாயாலே சொல்லக்கூடும்?
மோனமே அறிவினது அடித்தளம் ஆம்,
    மிகவிரிவு. எல்லையில்லை, காலமில்லை;
மோனத்தில் அறிவு தோய்ந்து பிறந்தால்
    முன்வினையும் பின்வினையும் நீக்கக்கற்கும்
மோனநிலை மறவாது கடமையாற்ற
    மென்மை, இன்பம், நிறைவு, வெற்றி அமைதியுண்டாம்".
                                                வேதாத்திரி மகரிஷி.

 

மௌனத்தின் மேன்மை யாது?

"நாம் பேசாதிருக்கும் போது இறைவன் நம்மோடு பேசுகிறான்." இப்படிச் சொல்வது வேறு ஒன்றுமில்லை. எப்போதும் அவன் இருக்கிறான், அவன் பேசுகிறான், அதைக் கேட்பதற்கு இல்லாமல் நாம் வேறு எதையோ கேட்டுக் கொண்டிருந்தால் அவன் பேசுவது கேட்பதில்லை. அதனால் நம் வேலைகளையெல்லாம் நிறுத்திவிட்டு கொஞ்சநேரம் மௌனம் இருக்க வேண்டும்.

ஒவ்வொருவரிடமும் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு ஆயிரம் தேவையில்லாத கருத்துகள் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு மௌனத்தில் உட்கார்ந்தீர்களானால் தானே வரும். அதில் பத்து பதினைந்து கருத்துகளை எடுத்து முடிவு கட்டுங்கள். ஓரிரு மாதங்களில் முடிவு பண்ணிவிடலாம். மறுபடியும் அதே கருத்து வரும் போது அதே அழுத்தம் கொடுத்து கெட்டக் கருத்துகள், செயல்கள், எண்ணங்கள் எத்தனை உண்டோ அத்தனையும் நல்லதாக்கி விடலாம்.

இதற்கு உட்கார்ந்து யோசித்துப் பார்த்தால்தானே நேரம் கொடுத்தால் தானே வரும்? சிலருக்கு ஒரு நாளைக்குக் கூட உட்கார முடியவில்லையே என்று மன வருத்தம் இருக்கிறது. அதற்காக வருந்தவே வேண்டியதில்லை. யாராகிலும் ஒருவர் நமக்குத் தேவை இல்லாத வார்த்தையைச் சொன்னார்கள். அதற்குப் பதில் சொல்லாமல் எரிந்து விழறது என்று இல்லாமல் அந்த இடத்தில் மாத்திரம் மௌனம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம் இல்லையா?

இதற்கு நேரம் தேவையில்லை. எப்படி கண்ணாடி அதிகமான சூரிய வெளிச்சத்தை வாங்கி மற்றதை எரிக்கக்கூடிய வல்லமை பெறுகிறதோ அதேபோல மௌனத்தில் ஏற்படக் கூடிய (Vortex) சுழல் மையம் நம்முடைய ஜீவகாந்த சக்தி அதிகமாக ஆக ஆக அதில் சுழற்சி அதிகமாக ஆக ஆக மைய ஈர்ப்பு அதிகமாகும். அந்த மைய ஈர்ப்பு அதிகமாகி விட்டதென்றால் எண்ணங்களையும் ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம். மற்றவர்களுடைய நட்பும் அதிகமாக இருக்கும். எல்லோருக்கும் உங்கள் பேரில் விருப்பமும் மதிப்பும் தானாகவே உருவாகும்.


இறையுணர்வுக்கு மௌனத்தின் அவசியம் :

அகத்தவத்திலே உயிர்மேல் மனம் வைத்து அறிவை அமைதி நிலைக்கு கொண்டு வருவது முதற்செயல் உயிரை உணர்வாய்ப் பெறும் இந்தத் தவமுறையைக் குருவின் மூலமே கற்றுக்கொள்ள வேண்டும்.

பிறகு இதுவரையிலும் அறிவிலே பதிந்துள்ள வினைப் பதிவுகளின் தன்மையுணர்ந்து நலம் விளைக்கும் புதிய முறையிலே திருப்பிப் பழக்கும் முறை அடுத்த தொடர்ச் செயல் ஆன அகத்தாய்வு.

இவற்றை முறையே மனமடக்க ஓர்மைப் பயிற்சி (லயம்) என்றும் அகத்தாய்வு என்றும் கூறுகிறோம்.

இவ்விரு பயிற்சிகளின் போதும் வாய் திறந்து பேசுவது முரண்பாடான செயலாகும். எனவே மௌனமாக இருக்க வேண்டியது இன்றியமையாததாகும். முழுநோக்கம் மனமடக்கம் சடங்கு வாய்திறந்து பேசாமை வாய்மூடி பேசாதிருந்து மன ஓர்மைப் பயிற்சியோ அகத்தாய்வோ இயற்றாமலிருந்தால் மௌன நோன்பு என்பது முழுமை யாகாது.

மனிதன் பேசுவது தனது அறிவினை அனுபவங்களைப் பிறர்க்கு எடுத்துக் கூறி மற்றவர்களுக்கும் பயன்பெறச் செய்யவும் தனது தேவைகளைப் பிறர் உணர்ந்து கொண்டு தக்கபடி உதவி செய்யப் பெறுதற்குமேயாம்.

மனச் சீரமைப்புப் பெறாதவன் பேசினால் தவறான பயன்களும் துன்பங்களும் பல்லவா விளையும்? இதனை ஒரு சித்தர் பெருமான் குறிப்பிடுகிறார். சினம் அடங்கக் கற்றாலும் சித்தியெலாம் பெற்றாலும் மனமடங்கக் கல்லார்க்கு வாய் ஏன் பராபரமே!


மௌனத்தின் வகைகள்:

  1. வாக்கு மௌனம்
  2. கருவி மௌனம்
  3. மகா மௌனம்

வாக்கு மௌனம்: வாய் பேசாதிருத்தல் வாக்கு மௌனம்

கருவி மௌனம்: ஞானேந்திரியம், கர்மேந்திரியம் இவைகள் அடக்கமாக இருப்பது கருவி மௌனம்

மகா மௌனம்: வாக்கு மௌனம், கருவி மௌனம் மற்றும் அலைகின்ற மனத்தை அமைதிப்படுத்தி இறை நிலை உணர்வோடு இருத்தலே மகா மௌனம்

நிலைப்பேறு : மனம் செம்மை பெறாதவர்கள் பேசுவதால் என்ன பயன் என்று வினவுகிறார் திருவள்ளுவர் கூறும் அறிவுரையையும் இங்கு நினைவு கூர்வோம்.

 

"அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்."

தன்முனைப்பை அடக்கி அகண்டாகாரப் பேராற்றலோடு தன்னை இணைத்துக் கொண்டால் இறையருள் சுரந்து இன்பம் ஓங்கும் இல்லையேல் துன்ப இருளில் ஆழ்த்தி விடும் என்பதே இக்கவியின் கருத்தாகும்.


மௌனத்தின் பயன்கள் :

  •  புலன் அடக்கம் பெறும்.
  • சீவகாந்தப் பெருக்கம், சீவகாந்தச் செறிவு ஏற்படும்.
  • தவத்தினால் இறைநிலையுணர்வு கிட்டும்.
  • தற்சோதனை செய்ய உதவும்.
  • அறிவாட்சித் திறன் பெருகும்.
  • அயராத விழிப்பு நிலை ஏற்படும்.
  • ஆன்மிக முன்னேற்றம் ஏற்படும்.
  •  குணநலப்பேறு கிட்டும்.
  • தொண்டு மனப்பான்மை பெருகும்.
  • செயல் விளைவு தத்துவம் விளங்கும்.
  • பிரபஞ்ச இரகசியமும் இயக்க தன்மையும் விளங்கும்.

                 செந்தில்குமார் 

                செல்9655472931
                நச்சாந்துபட்டி,
                புதுக்கோட்டை மாவட்டம்.

30 அக்., 2025

ஜீவன் முக்தர்கள் என்பவர்கள் யார்? ஜீவன் முக்தர்களின் வாழ்க்கை நெறி எப்படி இருக்கும் அவர்களின் நோக்கங்கள் என்ன? அவர்களைப் பற்றிய அடையாளங்கள் என்ன விளக்கங்கள்:


ஜீவன் முக்தர்கள் என்பவர்கள்:

அகத்தவம் எனும் மனவளப் பயிற்சியால் அறிவில் நுண்மையும் உறுதியும் பெற்று ஒழுக்கம், கடமை, ஈகை என்ற மூன்றிணைப்பான அறநெறியை வாழ்வின் செயலாக - கர்மயோகமாகப் பின்பற்றி ஆன்மாவை முக்களங்கங்களிலிருந்து விடுவித்து, மெய்ப்பொருள் உணர்வில் சிவமே ஜீவனாக இயங்கும் உண்மை உணர்ந்த பேரின்ப அனுபவமே ஜீவன் முக்தி எனப்படும்.


ஜீவன் முக்தர்களின் வாழ்க்கை நெறி அவர்களின் நோக்கங்கள்:

தவம், அறம் இரண்டும் பயின்று ஆன்ம விடுதலை பெற உரிய காலம், வாழ்நாள் நீளம் வேண்டும். இடையிலே உயிர் உடலை விட்டுப் பிரியாது காக்க வேண்டியது ஜீவன் முக்தி பெற விரும்பினோர்க்கு இன்றியமையாததாயிற்று. எனவே ஜீவன் முக்தர்களது வாழ்க்கையில் மூன்று நோக்கங்கள் இணைந்துள்ளன.

1] அறிவில் முழுமை பெற்று இறைநிலையுணர்ந்து அந்நிலை அகலாத அறிவின் விழிப்பில் நிலைத்திருக்கப் பழக வேண்டும்.

2] தனக்கும், பிறர்க்கும், தற்காலத்திலும், பிற்காலத்திலும் துன்பம் எழாத முறையோடு, அளவோடு உலகை அனுபவிக்கும் வாழ்க்கை நெறியாகிய அறவழி நின்று வாழ வேண்டும்.

3] தன் விருப்பமின்றி உயிர் உடலை விட்டுப் பிரியாமலிருக்கும் காயகல்பமுறையில் சித்தி பெற வேண்டும். அகத்தவம், அறநெறி, காயகல்பம் என்ற மூன்றும் ஒன்றிணைந்த யோக வாழ்வே ஜீவன் முக்தர்கள் பின்பற்றிய வாழ்க்கை நெறியாகும்.


ஜீவன் முக்தர்களின் அடையாளங்கள்:

தமிழ்நாட்டில் இந்த முறையில் வாழ்ந்து அறிவிலே முழுமை பெற்றவர்கள் சித்தர்கள் என மதிக்கப் பெற்றனர். உடலிலிருந்து உயிர் பிரியாமல் மன இயக்கத்தை மாத்திரம் நிறுத்திக் கொண்டு நிறைவு பெற்றவர்கள் பலர். அவர்களில் பதினெட்டு சித்தர்கள் புகழ் பெற்றவர்கள். உயிர் பிரியாத உடல் பெற்று ஜீவ சமாதியடைந்தவர்களுக்கு ஒரு அடையாளம் உண்டு. உடலை எத்தனை ஆண்டுகள் வைத்திருந்தாலும் அது கெடாது. அத்தகையவர்கள் உடலை அவர் சமாதி எய்திய பிறகு மண்ணில் புதைத்து அதன் மேல் ஏதேனும் சிலை வைத்து அதனை வழிபடுவது வழக்கமாயிற்று.


அகத்தவப் பயன் :

 

"இறைநிலைக்கும் மனநிலைக்கும் இடையிலுள்ள உயிரை
    எளிதாக உணர்ந்திடலாம் அகத்தவத்தின் மூலம்
மறைவிளக்கும் உண்மைகளை மனத்தினுள் உணர்வாய்
    மற்றவர்கள் காட்டுவதற்கு வெளியில் ஒன்றும் இல்லை;
பொறையுடைமை, விழிப்புநிலை, அஞ்சாமை, தியாகம்
    புலனுணர்வு இன்பத்தில் அளவு முறை வேண்டும்.
நிறைவுபெற முடிவு எடுத்து வழுவாது ஆற்றி
    நேர்மையுடன் வாழ உன்னில் அவன் - அவனில் நீயே."

 

"இறையுணர்வார்சிலர் முயன்று வேதநூல்கள் மூலம்
    இவ்விறையே அறிவுஎன உணர முடியாமல்
இறைவேறாய் அறிவு வேறாக எண்ணி எண்ணி
    எழும்பிணக்கில் புரண்டு புரண்டே மயக்கில் மாள்வார்;
இறைநிலையே அறிவாக இயங்கும் உண்மை காண
    ஏற்றதொரு சாதனைதான் அகநோக்குப் பயிற்சி
இறையறிவாய் உலகாக உயிர்களாகத் திகழும்
    இந்த உண்மை உயிர்மீது மனம் ஒடுங்க ஒளிரும்."
                                                வேதாத்திரி மகரிஷி

ஜீவன் முக்தர்கள் என்பவர்கள்உயிருடன் இருக்கும்போதே ஆன்மீக விடுதலை அடைந்தவர்கள் ஆவர். இவர்கள் துன்பங்கள், ஆசைகள் மற்றும் பந்தங்களில் இருந்து விடுபட்டு, உள் அமைதியுடனும், எல்லையற்ற அறிவோடும் வாழ்கிறார்கள். அத்தகைய நிலை 'ஜீவன்முக்தி' என்று அழைக்கப்படுகிறது. 

அவர்களின் நிலை: இவர்கள் உலக விஷயங்களில் ஈடுபட்டிருந்தாலும், மனதளவில் எந்த பந்தமும் அற்றவர்களாக இருப்பார்கள். அவர்கள் மனதளவில் சமத்துவ நிலையில் இருப்பதால், வெற்றி, தோல்வி போன்ற இருமைகளை கடந்திருப்பார்கள்.

அடையாளம்: ஜீவன் முக்தர்கள் துறவறத்தில் இருந்தாலும் அல்லது இல்லறத்தில் இருந்தாலும், அவர்கள் ஆசையற்றவர்களாக, கிடைத்ததில் மகிழ்பவர்களாக, பொறாமையற்றவர்களாக இருப்பார்கள்


திருக்குறளில் ஜீவன் முக்தி விளக்கம்:

தமிழக கிராமங்களில் இன்றும் மக்கள் இறந்தபின் அடக்கம் நடந்தத அடக்கம் எப்போது என்று பேசுவது இன்னும் வழக்கில் உள்ளது. அடக்கம் என்றால் உயிர் இந்த உடலோடு ஐக்கிய மாவதையே அடக்கம் என்றனர் ஆன்றோர். அதாவது இந்த உயிர் உடலோடு ஒடுங்கி இருத்தலையே முன்னோர்கள் ஒடுக்கம் என்றனர். ஜீவன் முத்தர்களின் ஜீவ சமாதியை ஒடுக்கம் என்று அழைப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளதை யாவரும் அறிவர் இது கருதியன்றோ அய்யன் திருவள்ளுவரும்

 

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
                                            குறள் :
உயிர் இந்த உடலோடு அடங்கி ஒடுங்கி இருத்தலே தேவர்களோடு அதாவது தெய்வத் தன்மையோடு கூடிய தெய்வநிலைக்கு கொண்டு சேர்க்கும். அடங்காமை அதாவது உயிர் வேறு உடல் வேறு பிரிந்த நிலையானது பிறவி என்ற இருளில் தள்ளிவிடும் என்பதையே எளிய நடையில் யாவர்க்கும் உணர்த்துவராயினர். இது கருதியன்றோ கைவல்லிய நவநீதம் போன்ற வேதாந்த நூல்களும் சச்சிதானந்த சொரூபியாய் யாவர்க்கும் அருள்பாலிக்கும் ஜீவன் முத்தர்களையே வணங்கி பலனைப் புசிக்க வேண்டுமென்று கூறும்.

                செந்தில்குமார் 
                செல்9655472931
                நச்சாந்துபட்டி,
                புதுக்கோட்டை மாவட்டம்.

29 அக்., 2025

நால்வகைப் பேறுகள் என்பது என்ன? நால்வகைப் பேறுகளும் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம் தானா? வீடில்லா வீடு சுத்தவெளி அப்படி என்றால் என்ன? விளக்கம்:

 


நால்வகைப் பேறுகள் விளக்கம்:

"மனிதன் பிறந்தது முதல் முடிவு வரையில் மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் வாழ்வதற்கு அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்ற நால்வகைப் பேறுகளும் அடையவேண்டும். புலனின்பம் கெடாமல் காக்க மக்களோடு கொள்ளும் உறவில் அளவுமுறை கண்டு விழிப்புடன் செயலாற்ற வேண்டும். இவ்வாறு அறநெறி வழுவாத முறையில் பொருளும் இன்பமும் பெற்று வாழ்ந்தால் அறிவு நாளுக்கு நாள் சிறப்புற்று மேலோங்கி இறையுணர்வு பெற்று நிறைவான வாழ்க்கை எய்த முடியும். சுருக்கமாக சொல்வதென்றால் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் 4 வகைப் பேறுகளும் மனிதன் வாழ்வின் நிறைவுக்காகப் பெற வேண்டும். ஆயினும் இந்த நான்கில் ஒன்றால் மற்றொன்று கெடாமல் பார்த்து பெற்று துய்க்க வேண்டும்.


வீடில்லா வீடு சுத்தவெளி என்பதன் விளக்கம்:

வீடு பேறு எனும் சொல்லின் பொருள், வீடு எனில் இடம் என்று பொருள். நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் உலகத்தின் மீது உலகம் உயிர்கட்கு இடமாக இருக்கிறது. உலகம், எங்கு எந்த இடத்தில் இருக்கிறது. அது சூரிய குடும்பத்தில் உருண்டு, மிதந்து உலவிக் கொண்டிருக்கிறது. சூரிய குடும்பம் எங்கே இருக்கிறது. எந்த இடத்தில் இருக்கிறது. சுத்தவெளியான இருப்பு நிலையே சூரிய குடும்பத்துக்கு இடம். வீடில்லா வீடு சுத்தவெளி. இவ்வெளியே எல்லாப் பொருட்களிலும் நிறைவாகவும் இயக்க ஒழுங்கான அறிவாகவும் இருக்கிறது.

மனிதனின் அறிவு உயர்ந்து தன்னை அறிந்து கொள்ளும் நிலையில் அறிவே மெய்ப்பொருளாக இருப்பு நிலையாகக் காட்சியாகும். வீடில்லா வீட்டின் வெட்ட வெளியே அறிவாக அறிவே தானாக உணரும் போது தான் வீடுபேறு. வீடுபேறு பெற்ற நிலையில் அறம் இயல்பாகும். அறவழியில் பொருளும் இன்பமும் பெற்று துய்க்கும் போது தான் அறிவிற்கு வீடுபேறு கிட்டும். இவ்வாறு அறமும் வீடுபேறும் மனித அறிவில் ஒன்றோடு ஒன்றாக ஒன்றில் ஒன்றாகத் தொக்கி நிற்கின்றன. பிறவியின் பெருநோக்கத்தை எய்த அறத்தின் மூலமே பொருள், இன்பம், வீடுபேறு இவைகளைப் பெறுவோம். வளமுடனும் நலமுடனும் நிறைவுடனும் வாழ்வோம்."


அறிவின் அக நோக்குப் பயணம் :

 

"ஆன்மிகத் துறையென்ற அகல வழிப்பாதையிலே
    அடிவைத்து மென்மேலும் முன்னேறிப் போகுங்கால்
அறிவுபெறும் அனுபவங்கள் வியப்பாகும், இனிமையாம்
    ஆன்மஒளி சுடர்விட்டு உள்ளுணர்வுப் பேறாகும்."

 

"திறந்துகொள் தான் தனது என்று சொல்லும்
    சிற்றறையை, வெளியேவா, அகன்று நோக்கி
பறந்துலவு உலக சமுதாயத்தின் பரப்பகத்தில்
    பற்று அறும் கடமையினால் பழுக்கும் ஞானம்."

 

"தெய்வ அறிவே திருந்திய அறிவாம்;
    ய்யும் நல்வழி உள்ளுணர் தவமே;
செய்யும் வினைகளைச் சீரமைத்திட
    ஐயமில்லை அறும் பிறவித்தொடர்."
                                        வேதாத்திரி மகரிஷி

வாழ்க்கையின் இலக்கு எது?

அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்பவை மனித வாழ்க்கையின் நான்கு முக்கிய குறிக்கோள்களாகும். இவை ஒவ்வொன்றும் ஒரு படிநிலையாகக் கருதப்படுகிறது, அதாவது அறத்தின்படி வாழ்ந்து, பொருள் ஈட்டி, அந்தப் பொருளின் மூலம் இன்பத்தை அடைந்து, இறுதியாக வீடுபேறு அல்லது மோட்சம் அடைவதே இதன் இலக்கு. இந்த நான்கு கருத்துக்களும் இந்து மதத்தில் பழமையானவை மற்றும் வாழ்க்கையின் இலக்குகளாகக் கருதப்படுகின்றன.


                செந்தில்குமார் 
                செல்9655472931
                நச்சாந்துபட்டி,
                புதுக்கோட்டை மாவட்டம்.