16 அக்., 2025

ஆறாவது அறிவு என்றால் என்ன? அவ்வறிவு மனிதனிடம் எவ்வாறு செயல்படுகிறது? ஆறாவது அறிவு தான் இறைவன் என்று சொல்லப்படுகிறது உண்மையா? முழுமையான விளக்கம்:

 

றாவது அறிவு என்பதன் விளக்கம்:

தெய்வமே, நானாகவும் இருக்கிறது என்பதை அறிவதே ஆறாவது அறிவின் நோக்கம். ஐந்தாம் அறிவுக்கப்பால் அறிவு இறைநிலை நோக்கி எழுகிறது. அதன் வேகத்தைத் தடுத்து, அதன் நோக்கத்தைத் திருப்பிப் புலனுணர்ச்சியில் விடும்போது தான் முரண்பாடுகள் விளைகின்றன. இன்றைய உலகத்தின் சிக்கல்கள், குழப்பங்கள், துன்பங்கள் அனைத்துக்கும் காரணம் அறிவிற்குத் தன் லட்சியப் பூர்த்தி கிடைக்காத நிலை தான். அந்த வேகம் புலனுணர்வில் செயல்படும் போது துன்பங்களின் அளவும், எண்ணிக்கையும் மிகுகின்றன.


பிரம்மமே ஆறாவது அறிவாக இருக்கிறது விளக்கம்:

ஆறாவது அறிவால் பிரம்மம் தன்னைத்தானே அறிந்து கொள்கிறது. வேலை முடிந்து பரிணாமம் பூர்த்தியடைகிறது. பிரம்மம் தன்னைத்தானே அறிந்து கொள்வது தான் பரிணாமத்தின் நோக்கம். அந்நோக்கம் நிறைவுறும் வரை மனிதர்களுக்கு அமைதியில்லை. அத்தகு மனிதர்களைக் கொண்டிருக்கும் சமுதாயத்திற்கும், உலகத்திற்கும் அமைதியில்லை. கடலில் இருந்த நீர் கடலுக்குத் திரும்பப் போய்ச் சேரும் வரை நீருக்கு அமைதியில்லை. இடையில் மேகமாக இருக்கிறது. மழையாக அருவியாக... ஆறாக, நதியாக இருக்கிறது. ஆனால் கடலை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. கடலை அடைந்தால் தான் அதற்கு ஓய்வும், அமைதியும்.

அப்படி, பிரம்மமே அணுவாகி, பஞ்சபூதமாகி, ஜீவனாகி, மனிதனாகி இருக்கிறது. இவையெல்லாம் இடைநிலை தான். இனி, மனிதனின் ஆறாவது அறிவு மேலோங்கப் பெற்று அவன் தன்னிலையை - தான்பிரம்மம் என்ற நிலையை அடைந்தாக வேண்டும். அதுவரை மனிதனுக்கு அமைதி கிட்டாது.

உடல் தோற்றமாக இருக்கிறது. உயிர் ஆற்றலாக இருக்கிறது. மனம் உணர்வாக இருக்கிறது. மனம் தான் நான் என்றாலோ மனம் என்று ஒன்று தனியாக இல்லையே! உயிர்தானே மனமென மறுபெயர் பெற்றிருக்கிறது? உயிரோ அணுக்கூட்டம், அணுவோ பிரம்மத்தின் இயக்கநிலை. எனவே நாம் பிரம்மம் என்பது தெளிவாகிறது.


மனித அறிவின் இயல்பு :

 

"அறிவு ஆறாம் நிலையை எய்த பின்னர்
    அது முழுமை பெற்று தனையறியு மட்டும்
அறிவிற்கு அமைதி கிட்டா அவ்வப்போது
    அது தேவை பழக்கம் சூழ்நிலைகட் கொப்ப
அறிவேதான் காமமுதல் ஆறுகுணங்கள்
    ஆகி விளைவாய் இன்ப துன்பம் துய்த்து
அறிவு தன் மூல நிலை நோக்கி நிற்கும்
    அதன் பிறகே படிப்படியாய் முழுமை யெய்தும்."

பிரம்ம வித்தை என்றால் என்ன?

 

வித்தை என்றால் பிரம்ம வித்தை உயர்வதாகும்
    வேதாந்தம் பேசுவதால் கிட்டிடாது,
அத்து விதமாகி அவன் எங்கு மாகி
    அணு முதலாய் அண்டங்களாகித் தாங்கும்
சுத்த வெளி சூனியமாய், நிறைந்த தன்மை
    சூட்சுமமாய் அனுபவமாய், அறிந்து நிற்கும்
தத்துவத்தின் முடிவான தானேயான
    தனை யறிந்த வித்தை அது தர்க்கம் வேண்டாம்."
                                        வேதாத்திரி மகரிஷி



ஆறு அறிவு எவை எவை விளக்கம்:

  • கண் - பார்த்தல்
  • காது - கேட்டல்
  • மூக்கு - மணத்தல்
  • நாக்கு - சுவைத்தல்
  • தோல் – உணர்தல்

மேற்படி ஐம்புலன்களால் அறியப்படும் அறிவே ஐந்தறிவே. அப்படி என்றால் ஆறாம் அறிவு எந்தப் புலன் உறுப்பால் அறிய முடியும்? உள்ளம் (மனம்) என்ற உறுப்பால் புரிந்துகொள்ளலே ஆறாம் அறிவு எனலாம். மூளை இயங்கும் செயலே உள்ளம் (மனம்) என்றும் நல்லது, கெட்டது எதுவெனப் பகுத்தறிந்து புரிந்துகொள்ளலே ஆறாம் அறிவு.


தொல்காப்பியம் கூறும் ஆறு அறிவுகளை கீழ்வரும் பாடல் விவரிக்கிறது:

 

ஓரறிவதுவே உற்றறிவு அதுவே
இரண்டறிவு அதுவே அதனொடு நாவே
மூன்றறிவு அதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவு அதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவு அதுவே அவற்றொடுசெவியே
ஆறறிவு அதுவே அவற்றொடு மனமே

                செந்தில்குமார் 
                செல்9655472931
                நச்சாந்துபட்டி,
                புதுக்கோட்டை மாவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக