27 அக்., 2025

இனிமையான வாழ்வுக்கு இன்றியமையாத சாதனம் எது? அது எவ்வாறு இருக்கிறது? எங்கு இருக்கிறது? என்னவாக இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதன் விளக்கம்:

 


இனிமையான வாழ்வுக்கு இறையுணர்வு:

மனித வாழ்வுக்கு இறையுணர்வு மிகவும் அவசியமானது. இறையுணர்வு என்பது நம்பிக்கை. அது என்ன நம்பிக்கை (Faith) என்றால் "ஒரு பெரிய சக்தியானது பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது; அது என்னுள்ளும் இருக்கத்தான் வேண்டும்; நான் பிறப்பதற்கு முன்னேயும் இருந்தது, எனக்குப் பின்னாலேயும் இருக்கும்.

அந்தச் சக்தி முன்னும் பின்னுமாக எல்லா இயக்கங்களையும் இயக்கிக் கொண்டிருக்கிறது என்றால், இப்பொழுதும், எப்பொழுதும் அது ஊடுருவி நிறைந்து இயங்கிக் கொண்டுதானே இருக்கும்" - இவ்வாறு நமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி முழுமையாக இருக்கிறது என்ற ஒரு நம்பிக்கையின் மேல் செயல்களை ஒழுங்கு செய்து கொள்வதுதான் "மதம்" (Religion) என்பதாகும்.

அதற்கும் மேலாக எவ்வாறு அந்தப் பரம்பொருள் நிறைந்த ஒன்று, மாறாத ஒன்று, எல்லாவற்றையும் சரியாக இயக்கிக் கொண்டிருக்கிறது, அது நமக்குள்ளாக எப்படி இயங்கிக் கொண்டு இருக்கிறது, நாமாக எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறோம் என்று அறிந்து, அதிலேயே உறைந்து, அதுவே தானாக, தானே அதுவாக இருப்பது தான் "ஞானம்".


கேட்போருக்குச் சொற்குறிப்பால் "கட+ உள்"
என்று சுருக்கிச் சொல்வேன்..

 

"சுகதுக்கம் அனுபவித்தேன், சோர்வு கண்டேன்
    சுய அறிவால் ஆராய்ந்தேன், முடிவுகாண
சுகதுக்கம் உடலியங்கும் அறிவில் கண்டேன்
    சூட்சுமமாய் மனங்குவித்து, ஒடுங்கிநின்று
சுகதுக்கம் கடந்துமோன நிலையுணர்ந்தேன்
    சொரூபத்தில் அரூபநிலை யறிந்துவிட்டேன்
சுகதுக்கச் சுழல்தாண்ட முறை கேட்போருக்குச்
    சொற்குறிப்பால் "கட + உள்" என்று சுருக்கிச் சொல்வேன்".


தெய்வநிலை என்பது எது:

 

"எங்கும் நிறைவாக இருக்கிறார் கடவுளென்பீர்
    இங்கு நம் உடல் உள்ளத் துறைந்தும் இருப்பாரன்றோ?
அங்கங்கே போய்த் தேடி அலைவானேன் அவர்க்காக
    தங்க நம் உயிர்க்குயிராம் தவநிலையில் அவரே நாம்".

குத்தி விளக்கிய அறிவு:

 

ஆன்மாவை அறிந்து கொண்டால் அதன் உள்ளும், புறமும் இறைவனே செயல்பட்டுக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்து கொள்ளலாம். அதற்கான பயிற்சிதான் குண்டலினியோகம். நமக்குள்ளாகவே இருப்பது உயிர்ச்சக்தி, ஆன்மா என்ற உயிர்ச் சக்தியை அழுத்தம் கொடுத்து உணர வைப்பதைத் தான் குத்தி விளக்குவது என்று சித்தர்கள் சொன்னார்கள்.

அது இப்பொழுது குத்து விளக்கு என்றாகி விட்டது. குத்தி விளக்கு; அப்படி விளக்குகிறபோது பஞ்ச இந்திரியங்களும் பஞ்ச பூதங்களும் நன்றாக விளங்கி விடும் என்பதைக் காட்டுவதாகத் தான் குத்து விளக்கில் ஐந்து முகங்கள் வைத்திருக்கிறார்கள். குத்து என்றால் அழுத்து என்பது பொருள். அப்படி அழுத்தி, உனக்குள்ளாக இந்த உயிர்ச்சக்தி இருக்கிறது. அந்த உயிருக்குள்ளாகத் தெய்வமே அறிவாக, சிவமாக இருக்கிறது என்று விளக்கிக் காட்டுவதுதான் அகத்தவப் பயிற்சி.


உண்மை நிலையறிய ஒத்தவழி :-
 

"கும்பிடுதல் பொருட்கள் பல கொடுத்தல் இவை இரண்டிற்கே
    குரு தெய்வ நாட்டமுடன் கூடி அலையும் உலகீர்,
வம்புகளை வளர்க்கின்றீர் வாழ்வைப் பாழாக்குகின்றீர்
    வாரீர் அறிவை அறிந்தவ் வழி ஒழுகி உயர்வடைவீர்".

 

  "இன்பம் துன்பங்கடந்த ஈசனுக்கு எது தேவை?
    பன்முறையும் சிந்தித்துப்பார் அவனைநாடி நினைந்து
அன்பும் அறமும் ஓங்கி அகத்துணர்வு அடைந்துயிர்கள்
    துன்பங்கள் தீர்க்கும் வினைத் தூய்மைபெறப் பயின்றிடுவீர்".

 

"உருவங்கள் கோடான கோடியாய் அவை
    யுள்ளும் புறமும் அரூபமாய்
ஊடுருவி நிறைந்தியங்கும் ஒரு சக்தி,
    உயிராகும், இயற்கையாகும் கடவுளாகும்".
                                        வேதாத்திரி மகரிஷி.


                செந்தில்குமார் 
                செல்9655472931
                நச்சாந்துபட்டி,
                புதுக்கோட்டை மாவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக