19 அக்., 2025

மனிதப் பிறப்பின் நோக்கம் என்ன? இறைநிலை அடைய தடையாக இருப்பது எவை? மும்மலங்கள் எவை அவைகளின் செயல்பாடுகள் என்ன? வாழ்வின் நோக்கம் பற்றிய விளக்கம்:

 



இயற்கையின் ஆதி நிலையே தெய்வம் விளக்கம்:

இயற்கையின் ஆதி நிலையே தெய்வம் எனப்படுகிறது. அதனுள் அமைந்த வேகம், ஆகாசம் எனும் பரமாணுத்துகளாகி அவையே பிரபஞ்ச ஆற்றல் களமாகியது. அவ்வாற்றலின் திணிவின் வேறுபாடுகளும், காற்று வெப்பம், நீர், நிலமெனும் மற்ற நான்கு பூதங்களுமாகிய அவை கூட்டால் உயிர்கள் பலவாகியது. ஐம்புலன்கள் மூலம், தன்னிருப்பு நிலை, இயக்கச் சிறப்புகள், அழகு மதிப்பு இவற்றை உணர்ந்து நிறைவு பெறுகின்றது. கடைசியில் மனம், உயிர் தன் மூல நிலை இவையறியும் ஆர்வமே ஆறாவது அறிவாக விரிந்தது. ஐம்புலன்களோடு இயங்கிய உயிர்களின் தொடர்பாக மனித உருவம் வந்ததால் ஆறாவது அறிவு போதிய வளர்ச்சியும் விழிப்பும் பெறும் வரை, புலன்வழி மயங்கி, உணர்ச்சி வயப்பட்டு ஆறுகுணங்களாகிய துன்பம் விளைக்கும் செயல்களை ஆற்றி அவற்றின் விளைவாக பாவப்பதிவுகள் அதிகமாக்கிக் கொண்டது. 


மும்மலங்கள் எவை அவை நீக்கும் வழிகள் யாது?

புலன் மயக்க மாயையும், தீய செயல்களால் பாவப் பதிவுகளும், தன்னையறியா மயக்கத்தால் ஆணவமும் பெருகி இவையே ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களாகி துன்பங்களும் சிக்கல்களும் வாழ்வில் பெருகின. சிந்தனை உயர்ந்தபோது தனது மூன்று களங்கங்களை போக்கிக் கொண்டு, அறிவைப் பெருக்கி முழுமையடைந்து, ஆதிநிலை வரைக்கும் விரிந்து அதோடு லயமாக அறிவு செயல்படுகிறது. எனவே நாம் எந்த செயல் புரிந்தாலும், களங்கம் போக்கவும், அறிவு பெருகவும் அது உதவியாக அமைய வேண்டும். அப்போதுதான் இனிமை, அமைதி நிறைவு, மகிழ்ச்சி வாழ்வில் அமையும். குண்டலினியோகம் தவம், தற்சோதனை, குண நல மேன்மை முழுமைப்பேறு இவற்றை அடக்கமாகக் கொண்டதால் உயிர் விடுதலை பெற இது ஏற்ற நல்ல மனச் சாதனையாகும்.


வாழ்வின் நோக்கம் என்பதன் விளக்கம்:

எல்லா உயிர்களும் வாழ நினைக்கின்றன. மனிதனும் வாழ நினைக்கின்றான். துன்பமில்லாத, இன்பம் மட்டுமே நிறைந்த வாழ்க்கையை அவன் நாடுகிறான். ஆனால் இன்று மனிதனின் வாழ்க்கையில் இன்பம் நிறைந்திருக்கிறதா என்ற கேள்விக்கு எல்லோருக்குமே விடை தெரியும்.

வாழும் முறையானது வாழ்வின் நோக்கத்திற்கு முரண்பாடாக அமையும் பொது துன்பந்தான் வரும். இயற்கையாகக் கிடைக்க வேண்டிய இன்பம் தடுக்கப்படுகிறது. வாழ்க்கையையும் வாழ்க்கையின் நோக்கத்தையும், அந்நோக்கத்திற்கேற்ப வாழும் முறை என்ன என்பதையும் அறிந்து கொள்வது தான் ஞானம். அன்றாட நடைமுறைகளையும் அந்த நோக்கத்திற்கு ஏற்பவே அமைத்துக் கொண்டாக வேண்டும். இந்தப் பொறுப்புணர்ச்சி இயல்பாகவே மலரவேண்டும்.

நாம் தவறுகள் செய்கிறோம். செய்த தவறுகளே துன்பமாக விளைகின்றன. இதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த அறிவு  வந்தபின் இனித் துன்பம் வராமல் இருக்க வேண்டுமானால் இனியேனும் தவறு செய்யாமல் இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்ச்சி வரவேண்டும். பொதுவாக, நாம் செய்யும் தவறுகள் நமக்குத் தெரிவதில்லை. பெரும்பாலும் பழக்கத்தின் காரணமாகவே  தவறுகள் செய்யப்படுகின்றன. சூழ்நிலை நிர்பந்தத்தால் செய்யப்படும் தவறுகளும் மிகுதியே. புலன் கவர்ச்சியில் இருக்கும் போது, சூழ்நிலைக்  கவர்ச்சியில் நிற்கும் போதும், பழக்கத்தின் அழுத்தத்தால் உந்தப்பட்டுச் செயலாற்றும் போதும் தவறுகள் தெரிவதில்லை. அதனால் மேலும் மேலும் தவறிழைத்துத் துன்பத்தையே சந்தித்தித்துக் கொண்டிருக்கிறோம். இதனால் வந்த வேலை பிறவியின் நோக்கம் மறந்து போகிறது. பேராசை, சினம் முதலான ஆறு குணங்கள் வளர்ந்து கொண்டே போகின்றன. விளைவாக, பஞ்சகமா பாதகங்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன ஐந்து பெரும் பழிச் செயல்கள் நாளுக்கு நாள் பெருகி வருவதைப் பார்க்கிறோம். இறைவனைப் பற்றிய எண்ணம் மறைந்து வருகிறது. இந்நிலை மாற வேண்டுமானால் தகுந்த மனப்பயிற்சியின்றி முடியவேமுடியாது. ஏனெனில், தவறிழைப்பதும் மனம். இனித் தவறு செய்து விடக் கூடாது என்று தீர்மானிப்பதும் அதே மனம் தான். தவறு செய்யாத வழியைத் தேர்ந்து ஒழுக வேண்டியதும் மனமே, மனதைப் பழைய நிலையிலேயே வைத்துக் கொண்டு புதிய வழியில் செல்ல முடியாது.

மனவளக்கலை வெறும் யோகம் மட்டும் இல்லை. மனமாக இருப்பது எது எனத் தெரிந்து கொள்கிறோம். நாம் எதனுடைய ஓர் அங்கமாக இருக்கிறோமோ, அந்த இயற்கையைக் பற்றிய தெளிவான விளக்கங்களைப் பெற்றுக் கொள்கிறோம். நாம் எந்தச் சமுதாயத்தில் இருந்து கொண்டு வாழ்கிறோமோ அந்தச் சமுதாயத்தைப் பற்றியும் தேவையான அறிவினைப் பெற்றுக் கொள்கிறோம் .

மனம், இயற்கை, சமுதாயம் என்ற மூன்று கோடுகளுக்குள் முக்கோணத்துக்குள்  தான் - மனிதன் வாழ்ந்தாக வேண்டும். இயற்கையோ மாற்றப்பட முடியாதது. அதனை மனம் அறிந்து மதிக்கும் அளவில் தான் மனதிற்கு உயர்வு கிடைக்கும். சமுதாயமோ இயற்கையை ஒட்டிய சில விதிமுறைகளுக்கு ஏற்ப அமைந்துள்ளது. சமுதாய வளத்தையும், சமுதாய ஒழுங்கையும் பாதுகாத்துப் பயனாகிய இன்பம் துய்க்கும் பக்குவத்தை மனம் பெற்றுக் கொள்ள வேண்டும். இதையெல்லாம்  விட முக்கியமாக மனம் தன்னையே நன்கு பூரணமாக அறிந்து கொண்டாக வேண்டும். ஏனெனில், எல்லாமே  மனதிற்குள் தான் இருக்கின்றன. எல்லாமே மனதிற்குள் இருந்து தான் வர வேண்டும். மனதின் மகத்துவத்தை உணராதவர் அறிவில்லாதவர்களே. அவர்கள், தனக்கும் சமுதாயத்துக்கும் துன்பம் விளைவித்துக் கொண்டு தான் இருப்பார்கள். இன்பமும், அமைதியும் மனத்திற்குள்ளிருந்து தான் வர வேண்டும் என அறியாமல் எங்கெல்லாமோ அவற்றைத் தேடி அலைந்து துன்புறுவார்கள்.


தன்முனைப்பை நீக்க வழிமுறை:

 "தன்முனைப்பு நீங்க ஒருகுரு அடைந்து

    தவமாற்றும் சாதனையால் உயரும்போது
நன்முனைப்பாம் அருட்தொண்டால் பயன்காண்போர்கள்
    நாதழுக்கப் பெருமையோடு போற்றுவார்கள்;
உன்முனைப்பு நிலவு ஒளி, ரவியால்போல
    உயர்குருவின் ஒளி, என்றே உணர்ந்தடங்கு.
'என் ஒளியே சிறந்ததினி ரவி ஒளி ஏன்
    எனக்கு?' என்று நிலவு எண்ண இருளே மிஞ்சும்! "

 

உயர்ஞானம் பெற சேர வாரீர் :

 "பல நாட்கள் தவம் செய்து, கனல் மிகுந்த

    பக்குவமும் தனையறிந்த நிலையும் கொண்டு
நலமொன்றே பலனான ஞானமார்க்கம்
    நாடிநிற்கும் எவர்க்கும் அவர் அறிவிற்கேற்ப
சில நாளில் சீவனையே சிவனாய்க் காணும்
    சிந்தனையின் சிகரத்தில் கொண்டு சேர்த்து
உலக சமாதானப் பெரும் திட்டம் காட்டி
    உயர்ஞானம் உணர்த்துகின்றேன் கொள்வீர், வாரீர்".
                                                வேதாத்திரி மகரிஷி.


                செந்தில்குமார் 
                செல்9655472931
                நச்சாந்துபட்டி,
                புதுக்கோட்டை மாவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக