2 நவ., 2025

அகத்தவம் என்பது என்ன? அதன் விளைவு யாது? உலக மக்களின் நல்வாழ்விற்கென இரண்டு உயர் வழிகளை ஞானிகள் காட்டியுள்ளார்கள். அவை என்னென்ன? விளக்கம்:




 அகத்தவம் என்பது யாது? அதன் விளக்கம்:

"தியானம்" என்ற வடமொழிச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் "அகத்தவம்" ஆகும். உயிர் மீது மனத்தைச் செலுத்தி அமைதி நிலைக்கு வந்து அவ்வமைதியின் மூலம் சிந்தனையைச் சிறப்பித்து அறிவை வளப்படுத்தி வாழ்வில் நலம் காணும் ஒரு சிறந்த உளப்பயிற்சி தான் அகத்தவம் ஆகும். வாழ்க்கைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள மக்கள் அனைவருக்கும் அகத்தவம் இன்றியமையாத தேவையாகும். இதனை மாணவப் பருவத்திலேயே தொடங்குவது சாலச் சிறந்தது. பிரபஞ்சம் எனும் பேரியக்க மண்டலத்தைக் களமாகக் கொண்டு உடல், உயிர், அறிவு என்ற மூன்றும் ஒன்றிணைந்து இயங்கும் ஒரு சிறப்பியக்க நிலையமே மனிதன். கருவமைப்பின் மூலம் வந்த முன்வினைப் பதிவுகளையும் அவற்றால் ஊக்குவிக்கப்பட்டு தற்போது நிகழும் பிறவியில் ஆற்றியுள்ள வினைப்பதிவுகளையும் அடக்கமாகப் பெற்று அவற்றின் வெளிப்பாடாகச் செயலாற்றி விளைவுகளைத் துய்த்து வாழும் உருவமே மனிதன்.

உலகிலுள்ள எல்லாத் தோற்றங்களிலும் எல்லா உயிர்களிலும் சிறந்த, மேலான இரு இயக்கநிலை மனித உருவம். எல்லாம் வல்ல இறைநிலையை முழுமையாக எடுத்துக் காட்டும், பிரதிபலிக்கும் கண்ணாடி மனிதனே.

 

"ஞானம் பெற தவப் பயிற்சி வேண்டும்.
தவத்தைப் பெற குருவை நாட வேண்டும்".
 
"மன அமைதியில் தான் அறிவு வளரும்".
 
"விடாமுயற்சியும், பகுத்தறிவும், கடின உழைப்பும்
உள்ளவனுக்கு அப்பாற்பட்டது எதுவுமில்லை".

உபதேச மார்க்கம்:

 

"வாசியோக முறையொன்றும் இங்கு இல்லை
    வாய்விட்டு உச்சரிக்கும் மந்திரமில்லை,
ஊசிமுனை வாசல் ஒன்றைத் திறந்து காட்டி
    உன்னையே அங்குக் காவல் சில நாள் வைத்து
தேசிகனாய் அருள் ஒளிரும் பார்வை மூலம்,
    தீட்சை மறுபடியும் ஈந்தழைத்துச் சென்று
மாசில்லா ஆதிநிலை யறியும் உச்சி
    மன்றத்தில் அமர்த்திடுவேன் அமைதி காண்பீர்".
                                            வேதாத்திரி மகரிஷி.

 

உலக மக்களின் நல்வாழ்விற்கென ஞானிகள் காட்டிய வழிகள் தவமும், அறமும் விளக்கம்:

ஞானிகள் உலகோர்க்கு நல்வாழ்விற்கென இரண்டு உயர் வழிகளைக் காட்டியுள்ளார்கள். அவை [1] அறம் [2] தவம். தனி மனிதனையும், சமுதாயத்தையும் வளம் பெறச் செய்வதும் மகிழ்ச்சியில் வைப்பதும், அமைதியோடு வாழச் செய்வதும் அறம், தவம் என்னும் இரு உயர் முறைகளேயாகும்....

அறம் என்னும் நெறி மூன்று உறுப்புகளையுடையதாகும். அவை [1] ஒழுக்கம், [2] கடமை, [3] ஈகை என்பனவாகும்.

இயற்கையாக அவ்வப்போது தோன்றும் துன்பங்களைச் சமப்படுத்தி இன்பமாக வாழ்வதற்கு எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றையும் பயன்படுத்துகிறோம். எண்ணம், சொல், செயல் எனும் மூன்றில் எது ஒன்றாலும் ஆற்றும் எச்செயலும் வினை எனப்படும். தனது துன்பத்தைப் போக்க, இன்பத்தை நுகர அல்லது தனது கடமைகளை நிறைவேற்றப் பயன்படுத்தும் எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றின் விளைவாகத் தனக்கோ, பிறருக்கோ தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, அறிவிற்கோ, உடலுணர்ச்சிக்கோ, துன்பம் விளையாத அளவோடு, முறையோடு ஆற்றும் செயல் நெறி 'ஒழுக்கம்' எனப்படும்.



மனித குலம் ஒவ்வொருவரும் யாருக்கு கடமைப்பட்டவர்கள்:

நாம் ஒவ்வொருவரும் சமுதாயத்தால் உருவாக்கப்படுகிறோம். காக்கப் பெறுகிறோம். வாழ்வளிக்கப் பெறுகிறோம். ஒவ்வொருவர் வாழ்விலும் ஒவ்வொரு நாளிலும் எண்ணிறந்த மக்களின் உழைப்பும் உதவியும் பயனாகின்றன. ஒருபிடி உணவை எடுத்துக் கொண்டு ஆராய்ந்தால் அது எத்தனை மக்களின் உழைப்பால் நம் கைக்கு வந்துள்ளது எனும் உண்மை விளங்கும். இது போன்று உடை, உறைவிடம் மற்றும் பல வசதிகளும் பல மக்கள் உழைப்பாலும் உதவியாலும் ஒருவருக்கு கிடைப்பது விளங்கும். எனவே ஒவ்வொருவரும் சமுதாயத்திற்குக் கடன்பட்டவரேயாவார். இந்தக் கடனை எவ்வாறு தீர்ப்பது ?

தான் அடைந்துள்ள உடல் வளம், கல்வி, தொழில் திறம், செல்வாக்கு ஆகிய நான்காலும் நலமும் வளமும் ஓங்கும் வகையில் தொண்டாற்றிச் சமுதாயத்திற்கு அளிக்க வேண்டிய கடனைத் திருப்பித் தந்து கொண்டிருக்க வேண்டும். கடன் திருப்பும் கருத்தே கடமை எனும் சொல்லாக [கடன் + மை = கடமை] வழக்கில் வந்துள்ளது.


விரிந்த அறிவே இன்பம் விளைக்கும்:-

 

"இயற்கைச் சமுதாயம் சூழ்நிலை தேவை பழக்கம்
    இவ்வைந்து கோணத்தில் இயங்குகிறான் மனிதனவன்;
இயற்கைச் சமுதாயம் இரண்டை உணர்ந்தும் மதித்தும் -
    எஞ்சிய மூன்றைச் சீராய் இணைத்தாற்ற இன்பமயம்."

 

 வினைப் பயன்:

 

"வினைக்கு ஒரு விளைவுண்டு. உடல் உள்ளத்தின்
    விரைவாற்றலுக்கு அது ஒத்தால் இன்பம்.
முனைத்து அது பரு உடற்கோ மூளைக்கோ ஓர்
    முரண்பட்ட விளைவானால் துன்பம் ஆகும்.
தனக்கும் அது பிறருக்கும் உடல் மூளைக்குத்
    தவறாக அணு அடுக்கைச் சீர்குலைத்து
மனக்களங்கம் உடலில் நோய்ப் பதிவாய்க் கொள்ளும்.
    மதித்து வினை விளைவுகளைக் கணித்து வாழ்வீர்."
                                                வேதாத்திரி மகரிஷி.


                செந்தில்குமார் 

                செல்9655472931
                நச்சாந்துபட்டி,
                புதுக்கோட்டை மாவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக