29 நவ., 2025

உடலைப் பேனி பாதுகாப்பதின் அவசியம் என்ன? உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் மனிதன் தன் கடமையை செய்ய முடியும் மனிதனின் தலையாய கடமை எது?

 

மனிதனின் தலையாய கடமை எது?

நாம் சமுதாயத்தில் ஓர் அங்கம். இந்த உடல் சமுதாயத்தின் சொத்து. அதனைக் கெடுப்பதற்கு நமக்கு அதிகாரம் இல்லை. இந்த உடலுக்காக நாம் சமுதாயத்தில் கடன்பட்டிருக்கிறோம். மற்றும் அன்றாட அனுபோகப் பொருட்களையும் அதனிடமிருந்து பெற்று அனுபவித்து வருகிறோம். இந்தக் கடனைத் திருப்பித் தரும் வழியே கடமை எனப்படுகிறது.

அவர்களது உடலாற்றலையும், அறிவாற்றலையும் அந்தந்த நேரத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றபடி குறைவில்லாமல் சமுதாய நலத்திற்கு அர்ப்பணமாகச் செலவிடல் தான் கடமை. உடலைக் கொண்டு தான் இந்தக் கடமையை ஆற்ற வேண்டும்.

உடல் நலக்குறைவு ஏற்படும் போதும், நலிவுற்ற போதும் சமுதாயம் நம்மைக் கவனிக்க வேண்டி வந்து விடுகிறது. இதனால் சமுதாயத்திற்கு வரவேண்டிய வரவும் நின்றுபோய் மருந்தென்றும் உபசரணை என்றும் நம்மால் சமுதாயத்திற்கு இழப்பு உண்டாகிறது. எனவே தான் கடமையை வகைப்படுத்தும் போது உடல், குடும்பம், சுற்றம், ஊர், உலகம் என்று உடல் கடமைகளை மற்றவற்றின் முன்னால் வைக்கப்பட்டது.

ஊனுடலே வாகனம் என்று கூறுவதன் நோக்கம் என்ன?

இனி ஆன்மீக நோக்கில் உடல் நலத்தின் அவசியத்தை ஆராயலாம். இதுவரை மனிதனிடம் ஏற்பட்டுள்ள களங்கங்கள் பாவப்பதிவுகள் நீங்கினால் தான் உயிருக்கு வீடுபேறு, விடுதலை கிடைக்கும். பாவப்பதிவுகள் எப்படிப் போகும். உடலை எடுத்தால் தான் அந்தப் பாவப் பதிவுகள் துன்பமாக அனுபோகமாகி நீங்கும் அல்லது யோக சாதனைகள் மூலம் நீக்கிக் கொள்ளலாம். அதற்குத் தான் இந்த உடலை உயிர் எடுத்து வந்தது. உயிர் தன் மூலத்தை அறிந்து கொள்ள எடுக்கின்ற முயற்சிக்கும் இந்த உடல் தேவைப்படுகிறது. ஆகவே உடலை உயர்வாகக் கருதி, சீர்கேடு அடையாமல் போற்றிப் பாதுகாக்க வேண்டும். அப்போது தான் ஆன்மீகப் பயணம் தடைபடாமல் இருக்கும்.

 

"அண்டத்தில் கடவுளாய் அழைக்கப்படுபவன்
    பிண்டத்தில் உயிரெனப் பேசப்படுகிறான்
கண்டத்தின் மேலே கருவில் நிலைத்தவன்
    அண்டத்தும் பிண்டத்தும் அவனையே காண்கின்றான்".

 

"அவனில் அணு, அணுவில் அவன்,
உன்னில் எல்லாம், நீ அறி உன்னை".

பழிச்சுமை கழி:

 

"ஐயுணர்வின் வயம் ஏற்ற
    ஆன்மாவின் பழிச் சுமையை
மெய்யுணர்வு பெற்றாற்றி
    மிக எளிதில் கழித்திடலாம்.
தெய்வ நிலையுடன் அறிவைச்
    சேர்த்தொன்றும் தவம் பயின்று
உய்ய நினைந்தால்; உலகீர் !
    உடனே என் தொடர்பு கொள்வீர்!"

                                    வேதாத்திரி மகரிஷி.

மனம் எப்போது செயல்படாமல் நிற்கும்:

மனம் நிற்க வேண்டும் அதாவது மற்ற எண்ணங்கள் எழாமல் நிற்க வேண்டும் என்று பலர் நினைப்பது போல் மனம் சும்மா நிற்கவே நிற்காது. நிற்கவே முடியாது. எப்போது நிற்கும் என்றால், இந்த உயிர்ச்சக்தி ஓட முடியாமல் திணறி அதிலிருந்து இயங்காமல் உடல் என்ற இயந்திரமே கெட்டுப் போய்விட்டது என்றால் மன இயக்க அலையே நின்று போய்விடுகிறது. அதோடு மரணம் தான் அல்லது உயிர்ச்சக்தி பலகீனமாக இருக்கிறபோது அதற்குப் போதிய அளவுக்கு ஆற்றலைப் புதுப்பிப்பதற்காக ஓய்வு எடுத்துக் கொள்கிறபோது தூக்கம் வருகிறது. தூக்கம் அல்லது மரணம், இந்த இரண்டு சூழ்நிலைகளில் தான் மனம் (Mind) செயல்படாது நிற்கும்.

 எண்ணம் எழாமல் இருக்குமா? உதாரண விளக்கங்கள்:

எண்ணமே வரக்கூடாது.. மனம் நிற்க வேண்டும் என்று அடிக்கடி பலர் நினைக்கிறீர்கள். உதாரணமாக - உங்களது ஸ்டோர் ரூமில் நூறு பொருட்களை வைத்திருக்கிறீர்கள் ஒரு பொருள் தேவையாக இருக்கிறது ஆனால் நீங்கள் அந்த ஒரு பொருளைத் தேடி எடுக்கப் போகும்போதும் அங்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ள மற்ற நூறு பொருட்களும் கண்ணுக்குப்படுகிறது நாம் தேடி எடுக்கப் போகும் பொருள் போக மீதி எல்லாமும் சேர்ந்து தென்படுகிறதே என்று ஏன் சிரமப்படுகிறீர்கள்?. உங்களுக்கு வேண்டிய பொருளை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். மிச்சப் பொருட்களை விட்டுவிடுங்கள் தேடும் பொருள் போக மற்றப்பொருள் எல்லாம் என் கண்ணுக்குத் தெரியவே கூடாது என்று சொல்கிற மாதிரி - அப்படி மற்ற எண்ணமெல்லாம் வரவே கூடாது என்று நீங்கள் நினைத்தால், அப்போது எந்த எண்ணம் வரும்? இன்றைக்கு நான் எண்ணுகிற எண்ணம் மட்டும் தான் வர வேண்டும் என்றால் எப்படி வரும்? ஏற்கனவே எண்ணி இருப்பு வைத்த எண்ணங்களும் சேர்ந்தே தான் வரும். ஏனென்றால் அது கருமையத்தில் இருப்பாகி உள்ளது. அதனால் எண்ணமே அடியோடு நின்று போக வேண்டும் என்று நினைப்பதே தவறு.

நீங்கள் உங்களது எண்ணம் நிற்க வேண்டும் என்று நினைத்தாலும் நினைக்காவிட்டாலும் கடைசியாக அது ஒரு நாளைக்கு உடலைவிட்டு உயிர் பிரியும் போது எண்ணம் நிற்கத்தான் போகிறது!. இன்று மனதில் எழும் மற்ற எண்ணமெல்லாம் நின்றுவிட வேண்டும் என்று நாமாக ஏன் நினைக்க வேண்டும்? அப்படி நினைப்பதும் தவறு. அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?.

மனதை எவ்வாறு சீரமைப்பு  செய்வது :

நாம் செய்ய வேண்டியதெல்லாம் நம் எண்ண ஓட்டத்தைச் சீர்படுத்த வேண்டியது தான் (You have to Streamline) நாம் செய்ய வேண்டிய வேலை. முறையான அகநோக்குப் பயிற்சியும் (Simplified Kundalini Yoga), அகத்தாய்வு (Introspection) பயிற்சியில்எண்ணம் ஆராய்தல், ஆசை சீரமைப்பு, சினம் தவிர்த்தல், தத்துவ விளக்கங்கள்” போன்ற சிந்தனையை தூண்டும் பயிற்சிகளின் மூலம் மனதை ஒழுங்குபடுத்திக் கொண்டால் எண்ணத்தின் ஆற்றல் வளரும். மனோபலம் உண்டாகும். அதோடு மட்டுமல்லாது, அதனுடைய பயன் வாழ்நாள் முழுவதும் நம்மை எல்லாத் துறைகளிலும் சிறப்படையச் செய்யும்.

                செந்தில்குமார் 
                செல்9655472931
                நச்சாந்துபட்டி,
                புதுக்கோட்டை மாவட்டம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக